Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பார்க்க கோடி நன்மை... யாருக்கு உயர் பதவி, செல்வம் கிடைக்கும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு தான் நன்மை அதிகம் தருவார். குருபகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 5,7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்கிறார். குரு நின்ற வீட்டில் அதிக நற்பலன்களை கொடுப்பதில்லை என்றாலும், பார்வை செய்யும் இடங்கள் ஏற்றமான நிலையை பெறுகிறது.

குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது நம் ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும். லக்னத்தில் குரு இருப்பது மிகவும் விசேஷம். ஏனென்றால் இவரின் பொன்னொளிப் பார்வை ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களுக்கு விழும். ஆகையால் இந்த ஸ்தானங்களின் பலம் விருத்தியாகும்.

Guru Peyarchi: The Effects of Guru Parvai

நவகிரங்களில் மிகவும் முக்கிய யோக கிரகமாக கருதப்படுவது குரு ஆகும். ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற பெயர்ச்சிகள் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், இந்த வருடம் ஆகஸ்டு மாதம் குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. துர்முகி ஆண்டு ஆடி மாதம் 18 ம் நாள், அதாவது ஆகஸ்ட் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று, பூசம் நட்சத்திரம், அமாவாசை திதி சித்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 9.30 மணிக்கு குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

இந்த குரு பெயர்ச்சி மூலம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் போன்ற ராசிகள் மிகவும் யோகம் அடைகின்றனர். மேலும், குரு வழிபாடு மூலம் மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் பலன் பெறுகிறது.

குரு பலம் இருந்தால்... சகல யோகமும் பெறலாம் என்பார்கள். பிரகஸ்பதி என்று குருகிரகத்தை அழைப்பார்கள் இதன் பொருள் ஞானத்தலைவன் என்பதாகும். விவேகத்தையும், அந்தஸ்தையும், ஆற்றலையும், புத்திர பாக்கியத்தையும் வாரி வழங்குவார். பஞ்ச பூதங்களில் ஆகாயம் குருபகவான்.

குருபகவான் ஜாதகங்களில் சிறப்பாக அமைந்தால் நல்ல குடும்பம், நல்ல கணவன்,மனைவி, செல்வசெழிப்பு அனைத்தும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறலாம். தெய்வ அருள் கிடைக்கும். ஜோதிட ஞானத்தை குரு வழங்குவார். திருமணம் ஒருவருக்கு செய்ய குரு பலம் , குரு பார்வை அவசியம். அறிவு உடைய குழந்தைகளை பெறுவதும் குருபகவான் அருள்தான்.

நவகிரங்களில் முழு சுபர் என்று அழைக்கப்படுபவர் குருபகவான் தான். இவர் ஒருவர் நல்ல நிலைமையில் இருந்தாலோ போதும் எவ்வளவு பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் நிலை கிடைக்கும். இவர் காரகம் வகிக்கும் செயல் குழந்தை பாக்கியம் திருமணம் நல்ல முறையில் பணவரவுகள் ஆகியவை ஆகும். இவரின் கருணை இருந்தால் தான் வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடைபெறும்.

ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதற்க்கு காரகம் வகிப்பவர் குரு பகவான். ஒழுங்கான திருமணம் நடைபெற வேண்டும் என்றால் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால் மட்டும் தான் நடைபெறும். கன்னி லக்னமாக அமைந்து, குரு 3ல் அமர்ந்து பாவகிரகங்கள் பார்த்தாலோ,சேர்ந்தாலோ இரண்டு மனைவிகள் அமையும்.

ஜல ராசிகளில் குரு முக்கிய பங்கு வகிக்கிறார். காரணம், கடகம் என்ற ஜல ராசியில் குரு உச்சம் பெறுகிறார். மீனம் என்ற ஜல ராசியில் குரு ஆட்சி பெறுகிறார். மகரம் என்ற ஜல ராசியில் குரு நீச்சம் பெறுகிறார். ஒருவர் கடல் கடந்து அயல்நாடுகளுக்கு சர்வ சாதாரணமாக சென்றுவர குருவின் அருள் தேவை. வெளிநாடு சம்பந்தமான தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி, வெளிநாட்டு தூதுவர், நிரந்தரமாக வெளிநாட்டில் தங்கும் அமைப்பு, கப்பல் வணிகம் ஆகியவை சிறக்க குருவின் கருணை வேண்டும்.

குரு எந்த வீட்டில் அமர்ந்தால் எத்தகைய நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

குரு 1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தோற்றம் இருக்கும். நல்ல ஆயுளுடன் இருப்பார்கள். சிறந்த மனைவி அமையும். இவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நல்ல ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வ புண்ணிய பாக்கியம் கிடைக்கும். இவர்களின் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கையில் இவர் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தந்தை இவருக்கு உதவி புரிவார்.

குரு 2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பேச்சாளர்களாக இருப்பார்கள். இவர்களின் வாக்குக்கு சமுதாயத்தில் மதிப்பு இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கையிருப்பு பணம் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். இவருடன் சேரும் வியாபார நண்பர்களும் நல்ல முறையில் இருப்பார்கள்.

குரு 3 ஆம் வீட்டில் இருந்தால் பக்தியில் ஈடுபாடு இருக்கும் இளைய சகோதரர் நல்ல முன்னேற்றம் இருக்கும் அவர் மூலம் இவருக்கு நன்மை கிடைக்கும். எதிர்பாலினரிடம் மோகம் இருக்கும். அளவோடுதான் மகிழ்ச்சி இருக்கும்.

குரு 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நல்ல நலத்துடன் இருப்பார். குழந்தை பாக்கியம் தாமதமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்காது. பகைவர்கள் உண்டாகுவார்கள். விவசாய சம்பந்தபட்ட குடும்பமாக இருந்தால் விவசாயம் மூலம் நல்ல வருமானம் இருக்கும்.

குரு 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும். புத்திரக்களால் நல்ல நிலைக்கு வரலாம். நுண்ணிய அறிவு இருக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். திடீர் பணவரவுகள் இருக்கும்.

குரு 6 ஆம் வீட்டில் இருந்தால் பகைவரை வெற்றி கொள்ளலாம். சமுதாயத்தில் மதிப்பு இருக்காது. குழந்தை பாக்கியம் தடை ஏற்படுத்துவார். மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெற தாமதம் ஆகும். உடம்பு பலம் இழந்து காணப்படும்.

குரு 7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல மனைவி அமையும். குரு லக்கினத்தை பார்ப்பதால் உடல் நிலை நன்றாக இருக்கும். சமுதாயத்தில் நல்ல புகழ் கிடைக்க வழி செய்வார். மனைவியாக வருபவர் ஆன்மிக சம்பந்தப்பட்ட குடும்பமாக இருக்கும். மனைவியும் ஆன்மிக விஷயங்களில் நாட்டம் உள்ளவராக இருப்பார். இவர்களிடம் தொடர்பு வைத்துருப்பவர்கள் நல்ல மதகுருமார்களாக இருக்க வாய்ப்பு உண்டு.

குரு 8 ஆம் வீட்டில் இருந்தால் மனைவி அமைவது கஷ்டமாக இருக்கும். திருமணம் முடிந்தால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும். செல்வ நிலை இருக்கும். சோதிடத்துறையில் நல்ல அறிவு ஏற்படும். மரண வீட்டை குறிப்பதால் உயிர் வதை இல்லாமல் உடனே போகும்.

குரு 9 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பாக்கியம் கிடைக்கும். மிக உயர்ந்த பதவியில் இருப்பார். ஆன்மிகத்தில் சிறந்து விளங்குவார். மிகப்பெரிய மடாதிபதிகளின் தொடர்பு ஏற்படும். மிக உயர்ந்த படிப்புகள் எல்லாம் படிப்பார்கள். வெளிநாடுகள் செல்ல வைப்பார். வெளிநாட்டு தொடர்பு மூலம் பணவரவுகள் இருக்கும். குலதெய்வ அருள் இருக்கும். மந்திர வித்தை நன்றாக இருக்கும்.

குரு 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் அமையும். செல்வ நிலை உயரும். அரசாங்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவரை சுற்றிய வட்டாரங்களில் மதிப்பு இருக்கும். வருமானத்தை பெருக்குவார். கோவில் சம்பந்தப்பட்ட இடங்களில் வேலைக்கு அமர்த்துவார்.

குரு 11 ஆம் வீட்டில் இருந்தால் தொழிலில் நல்ல வருமானம் இருக்கும். மூத்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மை நடக்கும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். வாகன வசதிகள் ஏற்படும். எந்த வேலையை எடுத்தாலும் வருமானத்திற்க்கு குறைவு இருக்காது. குழந்தை பாக்கியம் இருக்கும்.

குரு 12 ஆம் வீட்டில் இருந்தால் ஒழுக்கத்தை கடைபிடிக்க மாட்டார். புண்ணிய இடங்களுக்கு அடிக்கடி செல்ல வைப்பார். குழந்தை பாக்கியத்தில் குறை இருக்கும். சில பேர் பக்திமான்கள் போல் நடிப்பார்கள். கோவில் கட்டுதல் ஆறு குளம் வெட்டுதல் போன்றவற்றில் ஈடுபட வைப்பார். பணவிரையம் ஏற்படும்.

குரு பகவானால் ஞாபகமறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், பூச்சிகளால் பாதிப்பு, பிராமணர்கள் மற்றும் பெரியோர்களின் சாபத்தால் உடல் பாதிப்பு, கோவில் விவகாரங்களில் ஈடுபடுவதால் உடல்நிலை பாதிப்பு, வறுமையால் உடல்நிலை பாதிப்பு போன்றவை உண்டாகும்.

ஒருவர் நல்லவரா ? கெட்டவரா? என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும். ஒருவருக்கு எந்த அளவு அதிர்ஷ்டத்தை வழங்கலாம் என்று நிர்ணயிப்பவர். வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால், குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம்.

குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் கடைபிடிக்க வேண்டும். வெண் முல்லை மலர் சாற்றி குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+