கருங்கூந்தல் அழகு..இளமையிலேயே வழுக்கையா? இளநரை நீங்க எளிமையான ஜோதிட பரிகாரம் இருக்கு
சென்னை: ஆணோ, பெண்ணோ அழகான கருமையான கூந்தலுக்கு ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிலருக்கு இளமையிலேயே முடி நரைக்கும். சிலருக்கு இளமையிலேயே முடி உதிர்ந்து வழுக்கை தலையாக காட்சி அளிக்கும். தலைக்கு முடி என்பது மிகவும் முக்கியமானதாகும். தலை நிறைய முடி இருந்தால் மட்டுமே முகத்திற்கும் அழகு உண்டாகும். தலை முடி உதிர்வு பிரச்சினைக்கு ஜோதிட ரீதியான காரணங்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.
தலை முடி நீளமாக அழகாக உள்ள பெண்களை எல்லா ஆண்களும் விரும்புவார்கள். தற்போது நிறைய முடி வளர்த்து குடுமி போட்டுக் கொள்ளும் ஆண்களும் உள்ளார்கள். தலைவாரி பூச்சூட்டிக் கொள்வது என்பது பெண்களுக்கே தனி அழகு தான். பெண்களுக்கு முடி கொட்டும் என்றாலும் வழுக்கை என்பது அவ்வளவாக ஏற்படாது. ஆனால் முடி கொட்டி வழுக்கையால் ஆண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அழகான கருமையான முடி வளர வேண்டும் எனில் பிறந்த ஜாதகத்தில் லக்னமும் சுக்கிரனும் பலமாக இருக்கவேண்டும். சாதாரணமாக முடிக்கு காரகன் கேது என்றாலும் அழகிய கருமையான கூந்தலுக்கு காரகன் சுக்கிரன். சுக்கிரன், சந்திரன் இருவரும் முக அழகிற்கு முக்கியமானவர்கள். குறிப்பாக இவற்றிற்கு ஜென்ம லக்னம் முக்கிய பங்கு வகிக்கிறது. இலக்னம் பலமாக இருந்தால் நல்ல உடலமைப்பு, முக அழகு, அழகான தலை முடி வளரும்.
லக்னம் மற்றும் லக்னாதிபதியின் பலமும் முடிவளர்ச்சியை தீர்மானிக்கின்றன. பிறந்த ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்றாலும் நீச்சம் பெற்றாலும் சூரிய சுக்கிர சேர்க்கை நெருங்கிய பாகையில் ஏற்பட்டாலும் முடி கொட்டுகிறது. சூரியன்-குரு-செவ்வாய் சேர்க்கை ஏற்பட்டாலும் முடி கொட்டும். ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை இருந்தாலும் முடி கொட்டுவதோடு வழுக்கையும் ஏற்படும்.
அதிக முடியை கொண்டவன் எனும் பொருளுடைய கேசவ பெருமாளை வணங்குவது முடி கொட்டுவது நின்று வளர ஆரம்பிக்கும். கேச என்னும் சொல் அதர்வண வேத காலத்திலிருந்து பயன்படுத்தப்படுகிறது. அநேகமாக கேசம் என்றால் என்ன என்பது எல்லா இந்தியருக்கும் தெரியும். முடி வளர் தைலங்கள் அனைத்தும் 'கேச' என்ற பெயருடனேயே துவங்கும். நீண்ட முடி வளர்த்தால் பெண்போல இருப்பான் என்று வேதம் கூறுகிறது. ஆனால் அடர்த்தியான முடிக்கான பிரார்த்தனை அதர்வண வேதத்தில் உள்ளது.

தினசரி காலையில் குளித்து விட்டு ஆதித்ய ஹிருதயம் கூறி சூரிய நமஸ்காரம் செய்வதோடு தாமிர பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து பச்சை மரத்திற்கு ஊற்றலாம். இதன் மூலம் உடல் சூட்டினால் முடி உதிர்வது தடுக்கப்படும். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனை வணங்க மறக்காதீர்கள். அழகான கூந்தலை தருபவரே சுக்கிரன்தானே.
கேது ஸ்வரூபமான வராக மூர்த்தியை வணங்குவதும் முடிவளர்ச்சியை அதிகரிக்கும். ரத்தம், இரும்புச்சத்து ஆகியவற்றின் காரகனான செவ்வாய் பகவானை வணங்குவது முடிவளர்ச்சியை அதிகரிக்கும். கருமையான கூந்தலுக்கு சனீஸ்வர பகவானை வணங்கலாம் சனிக்கிழமைகளில் அவர் காரகம் பெற்ற நல்லெண்ணை தேய்த்து குளிக்கலாம். செம்பருத்யாதி தைலம், மருதானி தைலம், பொண்ணாங்கன்னி தைலம், கரிசலாங்கண்ணி தைலம் போன்றவற்றை கூந்தலில் உபயோகிப்பது நல்ல பயனளிக்கும்.












Click it and Unblock the Notifications