#காலபைரவாஷ்டமி 2019: தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை ஏன் வணங்க வேண்டும் தெரியுமா
கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி நாள் காலபைரவாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. கால பைரவர் காவல் தெய்வம். சனிபகவானின் குரு. நவகிரகங்களும், 12 ராசிகளும் பைரவரின் உடம்பில் அடக்கம் என்பதால் அவரை எ
வேலூர்: சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. இவர் காக்கும் கடவுள். இவரது ஜென்மாஷ்டமி காலபைரவாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. பைரவரின் திருவுருவத்தில் நவகிரகங்களும் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழங்காலில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன. நவம்பர் 19 செவ்வாய்கிழமை காலாஷ்டமி கொண்டாடப்பட உள்ளது இந்த நேரத்தில் அவரை எந்த ராசிக்காரர்கள் எப்படி வணங்க வேண்டும் என்ற முறை உள்ளது.
ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவன் கோயில்களில் இரவு பூஜை முடிந்த பின் சன்னிதிகளைப் பூட்டி சாவியைக் கால பைரவர் காலடியில் வைத்து வீடு செல்வார்கள். மறுநாள் அதிகாலையில் அந்தச் சாவிகளை எடுத்து சன்னிதி திறந்து பூஜைகள் செய்யத் தொடங்குவர். அந்த அளவுக்குத் திருட்டுப் பயம்கூட இன்றி வாழ்ந்தனர்.
பைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார். கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியிலும் ராகு காலத்திலும் பூஜை செய்வது சிறப்பானது. இன்றைக்கு நல்ல காலம் பிறக்க வேண்டியும், பிரச்சினைகள், கடன் தொல்லைகள் தீரவும் தேய்பிறை அஷ்டமியில் விளக்கேற்றி வழிபடுகின்றனர்.
பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள் புரிகிறார். அமாவாசை மற்றும் பெளர்ணமி ஆகிய திதிகளுக்கு அடுத்த எட்டாம் நாளான அஷ்டமி திதியன்று கால பைரவரை வணங்க உகந்த நாட்களாகும். அன்றைய தினம் கால பைரவருக்கு அபிஷேகம், அர்ச்சனை ஆகியவற்றைச் செய்யலாம். கால பைரவரை வணங்கினால் உடைமைகள் கூடக் களவு போகாது என்பது ஐதீகம்.

காலபைரவாஷ்டமி
அஷ்டமி திதியில் மட்டுமல்லாது ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.

பைரவருக்கு வடைமாலை
பைரவர் வாழ்க்கையில் வறுமை வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். சொர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும், தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடலாம். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்த, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

வறுமை நீங்கும்
நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள். நீண்ட நாட்கள் வறுமையில் இருந்தவர்கள் வளம் பெறுவார்கள்.

எட்டு திசைகளுக்கும் பைரவர்கள்
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இந்தியாவில் எங்கும் இல்லாதவாறு ஒரே கல்லில் பல சிறப்புகள் கொண்ட சொர்ண பைரவரும், ஒரு கல்லில் மஹா பைரவரும் ஆதார பீடத்தில் அசிதாங்க பைரவர், சம்ஹார பைரவர், ருரு பைரவர், க்ரோதன பைரவர், சண்ட பைரவர், கபால பைரவர், ருத்ர பைரவர், உன்மத்த பைரவர் என எட்டுத் திருநாமங்கள் கொண்ட அஷ்ட பைரவர்களை திசைக்கு இரண்டு பைரவர் வீதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 74 பைரவர் ஹோமங்கள், 64 பைரவர் ஹோமங்கள், தச பைரவர் ஹோமங்கள், அஷ்ட பைரவர் ஹோமம் போன்ற பல ஹோமங்களும் சிறப்பு பூஜைகளும் பக்தர்கள் நலனுக்காகவும் உலக நலனுக்காகவும் தன்வந்திரி பீடத்தில் செய்யப்படுகிறது.

சௌபாக்கியங்கள் கிடைக்கும்
சொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சிவபெருமானின் வடிவங்களுள் பைரவர் ஒரு அம்சமாகும் இந்த பைரவர், அமர்ந்த திருக்கோலத்தில் காணப்படுவார். தன்வந்திரி பீடத்தில் 4 அடி உயரத்தில் பைரவி என்ற திருநாமம் பெற்ற தனது மனைவியைத் தனது மடியில் இருத்திக்கொண்டு மலர்ந்த தாமரை மலர் முகத்துடன் சடைமுடியில் பிறைச்சந்திரன் சூடியும், கரங்களில் தாமரை மணிகள் பொதித்த சங்கம், அபய ஹஸ்தத்தொடு பொன் சொரியும் குடம் ஒரு கரத்தில் தாங்கி, மறுக்கரத்தால் ஆதி சக்தியை ஆலிங்கனம் செய்தபடியும் காட்சி அளிக்கிறார். மறு கரத்தில் சூலமும். கிரீடமும், பட்டு வஸ்திரமும் அணிந்து. தம்பதி சமேதராகக் காட்சி அளிக்கிறார்.

64 பைரவர் ஹோமம்
இந்த வருடம் கார்த்திகை மாதம் பைரவர் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு 64 குண்டங்களில் 64 நபர்கள் அமர்ந்து 64 பைரவர் ஹோமம் நடைபெற்ற மஹாபீடம் என்று அழைக்கப்படும் இராணிபேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 17.11.2019 ஞாயிறுகிழமை மாலை முதல் 19.11.2019 செவ்வாய் கிழமை மாலை வரை ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்துள்ள அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவர், ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் 64 பைரவர்களுக்கு 64 தீபங்கள் ஏற்றி, 64 யாக்குண்டங்களில் 64 நபர்களால் 64 யோகினி பூஜையுடன் 64 பைரவர் யாகம் நடைபெற்று 64 திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications