பெருமாளுக்கு உகந்த ஏகாதசி திதியில் மரணமடைந்த கருணாநிதிக்கு சொர்க்கத்தில் இடமுண்டு
ஏகாதசி நாளில் மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதி ஒரு புண்ணிய ஆத்மா என்றும் சொர்க்கம் புகுவார் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
சென்னை: ஏகாதசி மரணம், துவாதசி தகனம் என்ற சொல் வழக்குக்கேற்ப ஏகாதசி திதியில் ஒருவர் காலமாவதும், அடுத்த திதியாகிய துவாதசியில் உடல் தகனம் செய்வதும் வெகு புண்ணியம் என புராண நூல்கள் கூறுகின்றன.
திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக நேற்று இயற்கை எய்தினார். திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிரதமர் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
ஏகாதசி திதியில் மரணமடைந்த கருணாநிதி ஒரு புண்யாத்மா என ஜோதிடர்கள் தெரிவித்து உள்ளனர்.அதாவது ஏகாதசி நாளான நேற்று திமுக தலைவர் கருணாநிதி மறைந்தது மிகவும் புனிதமானது என்றும், இன்று துவாதசி தகனம் செய்தால் மிகவும் நல்லது கருணாநிதி புண்யாத்மா என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

ஆடி தேய்பிறை ஏகாதசி
மனிதன் பிறவி என்னும் சுழற்சியில் இருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதையே விரும்புகிறான். அந்த நோக்கத்தை அடைய செய்யக்கூடியது இந்த ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை, தேய்பிறை ஏகாதசிகள் வருகின்றன. வருடத்திற்கு 24 ஏகாதசிகள். இதில் மார்கழி வளர் பிறையில் 11வது நாளன்று வரும் ஏகாதசி தான் வைகுண்ட ஏகாதசி. இதனை பெரிய ஏகாதசி, மோட்ச ஏகாதசி என்றும் அழைப்பர்.

வைகுண்ட ஏகாதசி
வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும். சொர்க்கவாசலின் கீழ் விரஜா நதி ஓடுவதாக ஐதீகம். பகவான் சொர்க்க வாசலை கடந்து செல்லும்போது அவரை தொடர்ந்து செல்லும் பக்தர்கள் விரஜா நதியில் நீராடிய பலனை அடைவதாகவும், அதன்மூலம் பாவங்கள் நீங்குவதாகவும் கூறப்படுகிறது.

ஏகாதசி விரதம்
ஏகாதசியன்று விரதம் இருந்து சொர்க்க வாசல் வழியாக சென்று மகா விஷ்ணுவை துதிப்போருக்கு இந்த பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு ஆகியவற்றை பகவான் வழங்குவதோடு மறு பிறவியில் சொர்க்கம் வழங்குவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

ஏகாதசியில் கருணாநிதி மரணம்
95 ஆண்டுகள் வாழ்ந்த திமுக தலைவர் கருணாநிதி, மகாவிஷ்ணுவின் அடியவரான ஸ்ரீராமானுஜரின் வரலாறு காவியத்திற்கு வசனம் எழுதியவர். மரணத்திற்கு பிறகு சொர்க்கம், நரகம் என்பதில் எல்லாம் தலைவர் கருணாநிதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஆடி மாதம் யோகினி ஏகாதசி திதியில் கருணாநிதியின் மரணம் நிகழ்ந்தது புண்ணியம் என்கின்றனர் ஜோதிடர்கள். திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குகிறார்களோ இல்லையோ சொர்க்கத்தில் நிச்சயம் இடமுண்டு.

இப்படியும் ஒரு விளக்கம்
அதே நேரத்தில் ஏகாதசி மரணம் துவாதசி தகனம் என்பதற்கு இப்படியும் ஒரு விளக்கம் கூறப்படுகிறது. ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலைத் துதிக்க வேண்டும். துவாதசியில் விரதம் பூர்த்தி செய்து உணவு உண்ண வேண்டும். ஸ்மரணம் என்றால் துதித்தல், தகனம் என்றால் - ஆகாரத்தை ஜீரணம் செய்வது என்று பொருள்.












Click it and Unblock the Notifications