இந்த நேரத்தில் கடன் வாங்கிட்டா காலத்திற்கும் அடைக்க முடியாதாம் - பிரச்சினை தீர்க்கும் பரிகாரம்
ஒருசிலர் ஆயுளுக்கும் கடன்காரர்களாகவே இருப்பார். அதற்குக்காரணம் குளிகையில் கடன் வாங்கியிருப்பாரோ என்ற எண்ணம் ஏற்படுவதுண்டு. எந்த நேரத்தில் கடன் வாங்கினேனோ தெரியலையே கடன் அடையவே மாட்டேங்குதே என்று அலுத
மதுரை: குளிகை காலத்தில் வாங்கும் கடனை அடைக்கவே முடியாது என்றும் ஆண்டாண்டு காலமாக கடன் வளர்ந்து கொண்டே இருக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். கடன் பிரச்சினையால் ஏற்பட்ட நெருக்கடி ஒரு மனிதனை தற்கொலை வரை தள்ளுவதுண்டு. காபே காபி டே ஓனர் சித்தார்த்தின் மரணம் இன்றைக்கு பரபரப்பாக பேசப்படுகிறது. கடன் நெருக்கடியால் தற்கொலை முடிவை எடுத்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு ஆற்றில் குதித்து விட்டார். கடன் நெருக்கடி யாருக்கு எப்படி வரும்? கடனில் இருந்து தப்பிப்பது எப்படி இதற்கு பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.
ருணம், ரோகம் சத்ரு இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு வரக்கூடாது. ருணம் என்றால் கடன், ரோகம் என்றால் நோய் சத்ரு என்றால் எதிரிகள். ஏழைகளுக்கு ஆயிரக்கணக்கில் கடனும் கோடீஸ்வரர்களுக்கு கோடிக்கணக்கில் கடனும் ஏற்படுகிறது. ஒருசிலருக்கு கடன் இருந்தால் தூக்கம் வராது. ஒரு சிலருக்கு கடன் இல்லாவிட்டால் தூக்கம் வராது. கடனே வாங்காமல் சிலர் குடும்பம் நடத்தி பழகிக்கொள்வார்கள். சிலரோ கடனை உடனை வாங்கியாவது ஆடம்பரமாக வாழ்க்கை நடத்துவார்கள் காலத்திற்கும் இஎம்ஐ கட்டிக்கொண்டிருப்பார்கள்.
கடன் வாங்குவதற்கும் நேரம் காலம் எல்லாம் இருக்கிறது. ராகுகாலம், எமகண்டம் போல குளிகை நேரம் என்று ஒன்று உள்ளது. இந்த நேரத்தில் கடன் வாங்கக் கூடாது. இந்த நேரத்தில் வாங்கும் கடன் வளர்ந்து கொண் இருக்கும் அடையவே அடையாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடனை திருப்பி கொடுக்கும் போது குளிகை நேரத்தில் கொடுத்தால் கடன் விரைவில் அடைந்து விடும்.
நல்லது செய்ய ஏற்ற குளிகை காலம்
சனி, ஜேஷ்டாதேவியின் மைந்தன் குளிகன். இவருக்கு மாந்தன் என்ற பெயரும் உண்டு என்கிறது புராணம். குளிகனின் பெயரால் குளிகை காலம் உள்ளது. இது காரியசித்திக்கு ஏற்ற நேரம். இந்த நேரத்தில் செய்யத் தொடங்கும் செயல்கள் திரும்ப திரும்ப நடைபெறும். குளிகை காலத்தில் ஈமச்சடங்கு செய்ய மாட்டார்கள். நகை அடகு வைப்பதோ, படம் கடன் வாங்கவோ மாட்டார்கள். மாறாக கடன் திரும்ப கொடுக்கலாம். அடகு வைத்த நகையை திருப்பலாம். சொத்து, வீடு வாங்கலாம். பிறந்தநாள் கொண்டாடினால் காலா காலத்திற்கும் பிறந்தநாள் கொண்டாடலாம். நல்லவை திரும்ப திரும்ப நடைபெறும்.
கடனாளி ஆக காரணம்
கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தான் அப்படின்னு சொல்லுவாங்க. கடன் மெல்லக்கொல்லும் நோய் என்றாலும் இன்றைக்கு கடன் வாங்காமல் எதுவும் செய்ய முடிவதில்லை. படிப்புச்செலவு, மருத்துவ செலவுக்கு கடன் கண்டிப்பாக வாங்கியே ஆகவேண்டியிருக்கிறது. சிலரின் ஆடம்பர செலவு, தொழிலில் ஏற்படும் நஷ்டம் மீளமுடியாத கடனாளி ஆக்குகிறது. சிலர் மட்டுமே கடனில் இருந்து மீண்டு வருவார்கள். சிலரால் கடைசி வரை கடனில் இருந்து மீளவே முடியாது. காரணம் அவர்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் சேர்க்கை, பார்வைதான்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஆறாம் இடம் ருண ரோக சத்ரு ஸ்தானம். இந்த ஆறாம் இடமும் ஆறாம் அதிபதியும் அந்த அதிபதியுடன் சேர்ந்த கிரகங்களும், பார்க்கும் கிரகங்களும் கடன் தொல்லையை ஏற்படுத்தும்.
கடனுக்கு காரணமாகும் கிரகங்கள்
என் கிரகம் எப்படி இருக்கோ தெரியலையே ஏன் எனக்கு மட்டும் கடன் காலை சுற்றிய பாம்பா இருக்கு என்று ஜாதகத்தை கொண்டு போய் காட்டுவார்கள்.
தனஸ்தானமான இரண்டாம் இடத்தில் நீச்ச கிரகம் இருந்தாலும் 6, 8, 12ம் இட கிரகங்கள் இருந்தாலும் கடன் ஏற்படும். குரு நீச்சம் அடைந்து அல்லது 6, 8, 12 ல் மறைந்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும். சனி, செவ்வாய் சேர்க்கை அல்லது சனி, கேது சேர்க்கை உள்ள ஜாதகர்களுக்கு கடன் தொல்லை காலத்திற்கும் இருக்கும். 6, 8, 12ம் இட சம்பந்தப்பட்ட தசாபுத்திகளில் கடன் தொல்லைகள் கூடும். ஆறாம் இடம் போல 11ஆம் இடமான லாப ஸ்தானமும், 12ஆம் இடமான விரைய ஸ்தானமும் ஒருவருக்கு கடன் பிரச்சினை வருவதில் முக்கிய பங்காற்றுகிறது.
கடன் சுமை வராது
இரண்டாம் இடம், ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம், பதினொராம் இடம் ஆகியவை பலம் பெற்று இருந்தால் கடன் சுமை வராது. வந்தாலும் பாதிக்காது. ஏதாவது ஒரு வகையில் பணம் வந்து, கடன் அடையும். சுய ஜாதக அமைப்பில் இரண்டாம் வீடு , ஆறாம் வீடு என இருவீடுகள் முறையே 6 , 8 , 12 பாவத்துடன் தொடர்பு பெறுமாயின் ஜாதகர் முடிந்த வரை கடன் பெறாமலே வாழ்க்கை நடத்துவது நலம் தரும் அதாவது உள்ளதை கொண்டு சிறப்பாக வாழ்வது நல்லது.
கடன் வாங்கவே வாங்காதீங்க
ஒருவர் ஜாதகத்தில் குரு கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியில் அல்லது ஜாதக ஆறாம் பாவத்தில் கோச்சார ரீதியாக பயணம் செய்யும்போது கடன் வாங்க கூடாது. குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். எனவே ஆறாம் பாவத்தில் நிற்கும் போது கடனை வளர்த்திடுவார். குரு சர்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்க கூடாது. ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது. முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. மாற்றாக கடன் அடைப்பது சிறந்ததாகும்.
சனியை வழிபட கடன்கள் தீரும்
கடனிலிருந்து விடுபட தொடர்ந்து சனைஸ்வர பகவானை வழிபடுவது அவசியமாகும். அவ்வப்போது திருநள்ளாறு, குச்சனூர், சனிசிங்கனாபூர், சென்னை பொழிச்சலூரில் உள்ள வடதிருநள்ளாறு எனும் ஸ்தலம் ஆகிய ஒன்றிற்கு அவ்வபோது சென்று வரவேண்டும். பித்ரு காரியங்களை சரிவர செய்யவேண்டும். கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெருபங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை வினாயகரை வணங்குவது, செவ்வாயின் அதிதேவதை முருகனை வணங்குவது, கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது விரைவில் கடன் அடைய சிறந்த வழிகளாகும்.
குளிகையில் கடன் தீருங்கள்
செவ்வாய் கிழமை குளிகை நேரத்தில் பகல் 12 முதல் 1.30 க்குள் கடனில் சிறு பகுதியை கட்டினால் திரும்ப திரும்ப கடன் தொகையை முழுவதும் கட்டி மீண்டு விடலாம். சங்கடஹர சதுர்த்தி அன்று வன்னி மரத்தின் இலைகளை கொண்டு வினாயகருக்கு அர்ச்சனை செய்ய அளவற்ற கடன்களை அடைக்க வழிபிறக்கும். ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரையில் சிவபெருமானுக்கு செந்தாமரை வைத்து 6 நெய்தீபமேற்றி வழிபட கடன்கள் விரைவில் தீரும்..
திண்டிவனம் அருகில் இருக்கும் திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் சென்று காலை 5 மணிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட கடுமையான நெருக்கடிகள் தீரும். குலதெய்வம் கோயிலுக்கு மாதம் தோறும் சென்று வழிபடுங்கள். ஆண் தெய்வமாக இருந்தால் அமாவசை அன்றும் பெண் தெய்வமாக இருப்பின் பெளர்ணமி அன்றும் வழிபடலாம்.