தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்குப் பின் கோலாகலம் - குவியும் மக்கள்
மதுரை: தஞ்சை பெரியகோவில் எனப்படும் பிரகதீஸ்வரர் கோவிலில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்துக்கான பணிகள் பூர்வாங்க பூஜையுடன் இனிதே ஆரம்பமாகிவிட்டது. இதனையடுத்து பக்தர்களின் வருகையால் 23 ஆண்டுகளுக்கு பின்பு தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கும்பாபிஷேகம் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் கட்டடக்கலை, அறிவியல் திறமைக்கும் சான்றாக கம்பீரமாக எழுந்து நிற்பது தஞ்சை பெரியகோவில் என பக்தர்களால் பயபக்தியுடன் அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில். கி.பி.1006ஆம் ஆண்டு வாக்கில் சோழச் சக்ரவர்த்தி ராஜராஜ சோழ மன்னரின் ஆட்சிக்காலத்தில், முழுக்க முழுக்க கிரானைட் கற்களால் கட்டப்பட்டு இன்றைக்கும் தமிழனின் பெருமையை உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
தஞ்சை பெரியகோவில் எந்த அளவிற்கு தமிழர்களின் கட்டடக்கலைத் திறமைக்கு சான்றாக உள்ளதோ, அந்த அளவுக்கு மூடநம்பிக்கையையும் வெளிப்படுத்தி வருகிறது. அதனாலேயே இக்கோவிலுக்கு அரசியல் தலைவர்கள் யாரும் வருவதற்கு தயங்குவார்கள். குறிப்பாக தமிழக ஆட்சியாளர்களும், ஆட்சிக்கு வர நினைப்பவர்களும் தஞ்சை பெரியகோவில் என்றாலே நெஞ்சில் கிலி ஏற்படுத்தும்.
ஆட்டிவைக்கும் மூடநம்பிக்கை
இக்கோவிலுக்கு வந்து போனாலே, ஆட்சி பறிபோகும், அல்லது பதவி பறிபோகும் என்ற பயம் காரணமாகவே, தமிழக அரசியல்வாதிகள் வருவதில்லை. ஒருவேளை தஞ்சாவூருக்கு வந்தாலும் கூட, கோவில் பக்கம் எட்டிப்பார்க்க மாட்டார்கள். மேலும், இக்கோவிக்கு வந்தாலே ஏதாவது அசம்பாவித சம்பவம் நடக்கும் என்ற பயத்தின் காரணமாகவும் வரத் தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கு முன்பு கடந்த 1996ஆம் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில், பந்தலில் தீவிபத்து ஏற்பட்டு 48 பேர் பலியாகினர். அதன் காரணமாகவே, 2008ஆம் ஆண்டு நடத்த வேண்டிய கும்பாபிஷேகத்தை நடத்தாமல், ஜகா வாங்கிவிட்டனர்.
ராஜராஜசோழன் பற்றிய வதந்தி
இக்கோவிலில் அசம்பாவித சம்பவம் நடைபெறுவது இது முதன் முறை கிடையாது. பிரகதீஸ்வரர் கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழ மன்னன் கூட, இக்கோவிலின் மேற்கூரையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், இன்னும் சிலர் ராஜராஜ சோழனும், அவருடைய மகனான ராஜேந்திர சோழனும் கோவிலின் மேற்புரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, தவறி மேலிருந்து விழுந்து இறந்ததாகவும் நம்பப்படுகிறது.
கருணாநிதியின் ராசி
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், கடந்த 1970களில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த கருணாநிதி ஆட்சியில், பெரியகோவில் வளாகத்தில் ராஜராஜ சோழனுக்கு சிலைவைக்க வேண்டும் என்று போராடிப் பார்த்தார். ஆனால், அவருடைய ஆட்சி தான் பறிபோனது. அதோடு, ஆட்சியைப் பறித்த இந்திராகாந்தியின் ஆட்சியும் பறிபோனது. அதன் பின்பு வந்த எம்.ஜி.ஆர் ஆட்சியில், 1984ஆம் ஆண்டில், ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்த ஆயிரமாவது ஆண்டு விழா தஞ்சையில் கொண்டாடப்பட்டது.
எம்.ஜி.ஆர் மரணம்
அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.ஜி.ஆர் திடீரென மயங்கி விழுந்து, உடல் நலம் குன்றினார். பின்னர் மருத்துவனையில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை மோசமானதால், அமெரிக்கா கொண்டுசெல்லப்பட்டு, தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அதன் பிறகே உடல் நலம் தேறி மீண்டு வந்தார். இருந்தாலும் மூன்று ஆண்டுகளில் அவரும் உடல்நலக்கோளாறினால் மரணமடைந்தார்.
துணிச்சல் காட்டிய கருணாநிதி
அதன் பிறகே, தஞ்சை பெரியகோவிலைப் பற்றிய மூடநம்பிக்கைகளை மக்களும், அரசியல்வாதிகளும் நம்பத்தொடங்கினர். அதனால் தானோ என்னவோ, அரசியல்வாதிகள் இக்கோவிலுக்கு வருவதை தவிர்த்து வந்தனர். இருந்தாலும், நீண்ட வருடங்களுக்கு பின்னர் 1996ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கருணாநிதி, மூடநம்பிக்கையாவது, மன்னாவது என்று அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, மீண்டும் 1997ஆம் ஆண்டில் கும்பாபிஷேக பணியை மேற்கொண்டார்.
48 பேர் பலி 200 பேர் படுகாயம்
அந்த ஆண்டு நடந்த கும்பாபிஷேக விழாவில், யாகசாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 48 பேர் பலியானதோடு, 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால், அந்த கும்பாபிஷேகம் நீங்காத வடுவாக மாறிவிட்டது. இதனையடுத்து, இக்கோவிலை அரசியல்வாதிகள் சற்று தள்ளி நின்றே பார்க்கத் தொடங்கினர். ஒருவேளை கோவிலுக்கு வரும் ஆசை இருந்தாலும் கூட, கோவிலின் நுலைவாயிலான கேரளாந்தகன் வாயில் வழியாக வராமல், பக்கவாட்டு வழியாகவே வந்து போகின்றனர். அதையும் மீறி நுழையும் அரசியல்வாதிகள், கோவிலை விட்டு வெளியேறிச் செல்லும் போது பதவியை இழந்துவிடுகின்றனர்.
கும்பாபிஷேகத்துக்கு பச்சைக்கொடி
இதனால், இக்கோவிலைப் பற்றி அதிகம் அக்கறை காட்டாமல் இருந்து வந்தனர். கடந்த 2003ஆம் ஆண்டில் கோவிலின் கொடி மரம் மட்டும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. பக்தர்களும் சமூக ஆர்வலர்களும், தஞ்சை பெரியகோவிலுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்று வெகு நாட்களாக கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். ஒருவழியாக, மக்களின் கோரிக்கையை ஏற்று கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து பிப்ரவரி 5ஆம் தேதியன்று கும்பாபிஷேகம் நடத்த பச்சைக் கொடி காட்டினர்.
வேகம் பெற்ற கும்பாபிஷேகப்பணிகள்
இதனையடுத்து கும்பாபிஷேகப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. கடந்த நவம்பர் மாத இறுதியில் பாலாலய பூஜைகள் நடைபெற்றதை அடுத்து, கோவில் கோபுரங்களை தூய்மைப்படுத்தும் பணிகளும் மராமத்து பணிகளும் வேகம் பெற்றன. கோபுரங்களும், கோவிலும் பழமை மாறாமல் ரசாயன கலவை மூலம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற தொடங்கின. அதோடு, கோபுரங்களில் உள்ள கலசங்கள் சுத்தப்படுத்தப்பட்டு தங்க மூலாம் பூசும் வேலையும் நடைபெற்றன.
ஜொலிக்கும் பெரிய கோவில்
கோவிலின் கொடிமரமும் பழுதடைந்த நிலையில் இருந்ததால், அதனை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக சுமார் ரூ.9 லட்சம் செலவில் சென்னையில் இருந்து பர்மா தேக்கு மரம் கொண்டுவரப்பட்டு, தயாரிக்கப்பட்டது. பிப்ரவரி 5ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, கடந்த 27ஆம் தேதியன்று கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க பூஜைகள் முடிந்த உடனேயே, புத்தம்புதிய கொடி மரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவில் முழுவதும் புனரமைக்கப்பட்டு புத்தம் புதிதாக ஜொலிக்கின்றது.
தீவிரமான முன்னேற்பாடு
யாகசாலை பூஜைக்காக 178 அடி நீளத்திலும், 108 அடி அகலத்திலும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 1997ஆம் ஆண்டு நடந்தது போல் எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் இருக்க பந்தலுக்கு கான்க்ரீட் போடப்பட்டு அதில் இரும்புத் தூண்களும் அமைக்கப்பட்டு தகரத்தால் கொட்டகையும் போடப்பட்டுள்ளன. கூடவே, பந்தல் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக யாகசாலையைச் சுற்றிலும் செங்கற்கலால் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, உள்ளே மண் கொட்டப்பட்டு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
கோபுர கலசங்கள் ஆய்வு
அனைத்து கோபுர கலசங்களும் சுத்தம் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டன. ராஜகோபுர கலசத்திற்கு தங்கமுலாம் பூசப்பட்டதை, கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய கதரியக்க தலைவர் வெங்கட்ராமன், இந்திய தொழில்நுட்பப் பிரிவின் உலோகவியல் பேராசிரியரான முருகையன் அமிர்தலிங்கம் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பெரியகோவிலில் ஸ்ரீமஹாகணபதி ஹோமம், பிரும்மாச்சாரி பூஜை, மனபூஜை, லட்சுமி ஹோமம், கன்யா பூஜை ஆகியவை நடைபெற்றன.
தமிழிலும் கும்பாபிஷேகம்
பெரியகோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறும் மிகப்பெரிய திருவிழா என்பதால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகம் நடக்கக்கூடாது என்பதற்காக கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த சமய அறநிலையத்துறை சார்பாக வாதாடிய வழக்கறிஞர், தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் சமஸ்கிருதம், தமிழ் என இரு மொழிகளிலும் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
கடந்த 1997ஆம் ஆண்டு ஏற்பட்டதைப் போல் திரும்பவும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரிய கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு சோதனையும் மேறகொள்ளப்பட்டு வருகிறது. தஞ்சை மாநகருக்கு வரும் அனைத்து பயணிகளும், அவர்களது உடமைகளும் தீவிரமாக பரிசோதனை செய்யப்பட்ட பின்பே நகருக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையங்களில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும், கோவிலின் முன்பு தற்காலிக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் ஐயாயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.