இந்தியாவை பலமாக நாசமாக்க படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்- எச்சரிக்கும் பஞ்சாங்கம்
நாட்டில் வெட்டுக்கிளிகளால் கடும் பாதிப்பு ஏற்படும் என்று சுத்த வாக்கிய சர்வ முகூர்த்த பஞ்சாங்கம் எச்சரித்துள்ளது. விகாரி ஆண்டின் இறுதியிலும் பிறக்கப் போகும் சார்வரி ஆண்டிலும் வெட்டுக்கிளிகளால் விவசாயம
சென்னை: நவகிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து நடக்கப்போகும் நன்மை தீமைகளை முன்கூட்டியே பஞ்சாங்கத்தில் கணித்து விடுகின்றனர். மழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், விபத்துக்கள் என அனைத்துமே பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டிருக்கிறது. அதே போல தற்போது வெட்டுக்கிளிகள் விவசாய நிலங்களை சூறையாடுவதைப்பற்றியும் பஞ்சாங்கம் சில மாதங்களுக்கு முன்பே கணித்துள்ளது. விகாரி ஆண்டின் இறுதியிலும் பிறக்கப் போகும் சார்வரி ஆண்டிலும் வெட்டுக்கிளிகளால் விவசாயம் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது பஞ்சாங்கம்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் தமிழ் படத்தில் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழிக்க கார்ப்பரேட் நிறுவனம் வெட்டுக்கிளிகளை ஏவி விடும். விவசாயிகள் செய்வதறியாது தவித்து நிற்பார்கள். விவசாயத்தையும் விவசாயிகளையும் அழித்து விளைநிலங்களை தன் வசப்படுத்துவதற்காக இந்த படுபாதக செயல்களை செய்வதாக கதை எழுதப்பட்டிருக்கும். இதே போல ஒரு சம்பவம் தற்போது உலகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
அண்மையில் குஜராத் மாநிலத்தில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து விவசாய நிலத்தை அளித்தன. அப்போது அந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானால் அனுப்பப்பட்டவை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் நாட்டிலும் வெட்டுக்கிளிகள் விவசாயத்தையும் விளைநிலங்களையும் சூறையாடியுள்ளது.
தற்போதைய தட்பவெட்ப நிலை வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக இருப்பதால் வெட்டுக்கிளி படையெடுப்பு ஏப்ரல் 2020 வரை தொடரும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.
விவசாயிகள் பாதிப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக சோமாலியாவில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து உள்ளன. இவை விவசாய பயிர்களை தாக்கி பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அந்த நாட்டின் ஜூபா நதியின் படுகையில் செழிப்பாக வளர்ந்து நிற்கும் பயிர்களுக்கு இந்த வெட்டுக்கிளிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
பீதியில் விவசாயிகள்
இதன் காரணமாக அந்த நாட்டு அரசு தேசிய அவசர கால நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. போர்க்கால அடிப்படையில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர். வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.
தேசிய பேரிடர்
சோமாலியா மற்றும் எத்தியோப்பியா நாடுகளின் வயல்களில் செய்த அட்டகாசத்தால் சுமார் 1,75,000 ஏக்கரில் விளைந்த தானியங்கள் ஒட்டுமொத்தமாக சீரழிந்துவிட்டன. இந்தத் தானியங்கள் சேதமடையாமல் அறுவடை செய்யப்பட்டிருந்தால் ஓராண்டுக்கு பத்து லட்சம் பேருக்கு உணவு அளிக்க உதவியிருக்கும் என்கிறது ஆய்வு முடிவுகள். வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் சோமாலியா நாட்டில் தற்போது தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை பயிர்கள் நாசம்
சோமாலியா மட்டுமல்ல, நமது அண்டை நாடான பாகிஸ்தானையும் இந்த வெட்டுக்கிளிகள் விட்டுவைக்கவில்லை. அங்கும் தங்களின் படையெடுப்பை நிகழ்த்தி வருகின்றன. பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான சிந்து முதல் வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துவா வரை பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கோதுமை உள்ளிட்டவைகளை வெட்டுக்கிளிகள் நாசம் செய்துவருகின்றன.
இந்தியாவையும் விடவில்லை
பாகிஸ்தானுக்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் அந்நாட்டின் வழியாகவே இந்தியாவின் குஜராத் மற்றும் ராஜஸ்தானிலும் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. இதுவரை குஜராத்தின் நான்கு மாவட்டங்களில் இந்த வெட்டுக்கிளிகள் விவசாயப் பயிர்களை நாசமாக்கியுள்ளன.
பஞ்சாங்கம் கணிப்பு
நாட்டில் வெட்டுக்கிளிகளால் மிகப்பெரிய அபாயம் ஏற்படும் விவசாயம் பாதிக்கும் என்று விகாரி ஆண்டிற்கான பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிறக்கப் போகும் சார்வரி ஆண்டிலும் வெட்டுக்கிளிகளால் மிகப்பெரிய அபாயம் உருவாகும் என்றும் பஞ்சாங்கம் எச்சரித்துள்ளது. இதை சமாளிக்க அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்போகிறதோ என்று தெரியவில்லை. ஏற்கனவே மழை வெள்ளம், வறட்சி என பல இயற்கை பேரிடர்களை சமாளித்து வந்த விவசாயிகள் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்களோ பார்க்கலாம்.