மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது - 24ல் திருக்கல்யாணம்
மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. பிரசித்தி பெற்ற மீனாட்சி திருக்கல்யாணம் வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது.
மதுரை: மீனாட்சி கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. மீனாட்சி திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இணையதளத்தில் மட்டுமே பார்க்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருக்கல்யாணம் முடிந்த பிறகு சாமி அம்மனை மணக்கோலத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா உலக புகழ் பெற்றது. சித்திரை மாதத்தில் அமாவாசை முடிந்து வளர்பிறையில் கொடியேற்றம் நடைபெறும். 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய அம்சமாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் நடைபெறும்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. திருக்கல்யாணம் மட்டும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா 2வது அலை தொற்று எதிரொலியாக இத்திருவிழா கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்படுகிறது. எனினும் சுவாமி, அம்மன் தரிசனத்திற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று காலை 9.30 மணிக்கு மேல் கோலாகலமாக நடைபெற்றது. காலை 6 மணி முதல் 9மணி வரையிலும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கொடியேற்றத்தின் போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பகல் 11.30மணி முதல் 12 மணி வரை, மாலையில் 4 மணி முதல் 5.30 மணி வரை, இரவு 7.30மணி முதல் இரவு 9மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

பக்தர்கள் சாமி தரிசனம்
ஏப்ரல் 16ம் தேதி துவங்கி ஏப்ரல் 21ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், காலை 9 மணி துவங்கி பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி துவங்கி 5.30 மணி வரையிலும், இரவு 7 மணி துவங்கி 9 மணி வரையிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

மீனாட்சி பட்டாபிஷேகம்
மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை மீனாட்சி அம்மன் ஆட்சியும் ஆவணி முதல் பங்குனி வரை சுந்தரேஸ்வரர் ஆட்சியும் நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமாக வரும் 22ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. 23ம் தேதியன்று மீனாட்சி அம்மன் திக் விஜயம் வரும் நாளிலும் இதே நேரத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்ச்சி 24ம் தேதி காலை 8.45 மணி முதல் 8.50 மணிக்குள் நடைபெறுகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருக்கல்யாண நிகழ்ச்சியை பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே அரசு நெறிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி திருக்கோவில், இந்து சமயஅறநிலையத்துறை வெப்சைட்டிலும், யூ-டியூப், உள்ளூர் தொலைக்காட்சியிலும் கண்டு ரசிக்கலாம்.

மணக்கோலத்தில் காண அனுமதி
திருமண கோலத்தில் உள்ள அம்மன், சுவாமியை பழைய திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9.30 மணி முதல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசிக்கலாம். ஏப்ரல் 25ஆம் தேதி 11ஆம் நாள் திருநாளன்று திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு சட்டத்தேர் நிகழ்ச்சி நடைபெறுகிறது என கோயில் இணை ஆணையர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications