முன்னோர்களை வணங்கும் மகாளய பட்சம்: திதி கொடுக்கும் முக்கிய தினங்கள்
புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் இன்று புதன்கிழமை முதல் ஆரம்பம் ஆகிறது.
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்
சென்னை: இன்று முதல் முதல் மகாளய பட்சம் ஆரம்பம் ஆகிறது. செப்டம்பர் 6 முதல் பதினைந்து நாட்களுக்கு மகாளய பட்சம் காலமாகும். "மகாளயம்' என்றால் "பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் காலமே மகாளய பட்சம். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள்.
மறைந்த நம் முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும். பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் நாம செய்யக்கூடிய தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம்.
மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை. இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

மகாளய பட்சம்
மகாளய பட்சம் என்பது பொதுவாக புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் அமாவாசை மாதத்தின் ஆரம்பத்திலேயே வந்து விடுவதால் ஆவணி மாதம் பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமையிலிருந்து மஹாளய பட்சம் கடைபிடிக்கப்படுகிறது.

முன்னோர்களுக்கு திதி
தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்க்கு மிகவும் சிறந்தது. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

முன்னோர்கள் ஆசிர்வாதம்
அனைத்து முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். புனித நீர் நிலைகள் கடலுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும். வயதில் பெரியவர்களுக்கும் கற்றறிந்த அறிஞர்களுக்கும் ஆடைகள், ஏழைகளுக்கு பசிக்கு உணவு படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் முன்னோர்கள் ப்ரீதியடைந்து நம்மை நன்கு அசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், பங்களிகளின் சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

15 நாட்கள் படையல்
இந்த தர்ப்பணம் இன்று முதல் பதினைந்து நாட்களில் மஹாபரணி மஹாவியதீபாதம் மத்யாஷ்டமி அவிதவா நவமி ஆகிய நட்களில் ஒருமுறையும் மகாளய அமாவாசை அன்று ஒரு முறையாக இரு நாட்களில் முன்னோர்களுக்கான தில தர்ப்பணம், படையல் வைத்தல், தானதர்மங்கள் செய்தல் ஆகியவை செய்யலாம்.

தலைமுறைகள் நீடிக்கும்
நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாற்றைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர், தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை. அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.

தர்ப்பணம் செய்வதன் பலன்
மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.
முதல்நாள் - பிரதமை - பணம் சேரும்
இரண்டாம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
மூன்றாம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்
நான்காம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
ஐந்தாம் நாள் - பஞ்சமி - செல்வம் சேரும் நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
ஆறாம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்
ஏழாம் நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல் உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடை பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
எட்டாம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
ஒன்பதாம் நாள் நவமி - திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல். குடும்ப ஒற்றுமை சிறப்படையும்.
பத்தாம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல், எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
பதினொன்றாம் நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
பன்னிரெண்டாம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
பதின்மூன்றாம் நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
பதினான்காம் நாள் - சதுர்த்தசி - ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
பதினைன்தாம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.
எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான். மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம்.

மகாளய பட்சத்தில் விசேஷமாக உள்ள நாட்கள்
ஆவணி 25 (10-09-2017) ஞாயிறு கிழமை மஹாபரணி --- அனைவருக்கும் பொதுவானது.
ஆவணி 28 (13-09-2017) புதன் கிழமை மத்யாஷ்டமி --- அனைவருக்கும் பொதுவானது.
ஆவணி 29 (14-09-2017) வியாழன் கிழமை மஹாவியதீபாதம் --- அனைவருக்கும் பொதுவானது.
ஆவணி 29 (14-09-2017) வியாழன் கிழமை அவிதவாநவமி --- அனைவருக்கும் பொதுவானது.
புரட்டாசி 01 (17-09-2017) ஞாயிறு கிழமை சந்நியஸ்தமாளயம் --- சந்நியாசிகள் செய்வதற்கானது.
புரட்டாசி 01 (17-09-2017) ஞாயிறு கிழமை கஜச்சக்ஷமாளயம் --- கணவரை இழந்த விதவைகள் செய்வதற்கானது.
புரட்டாசி 02 (18-09-2017) திங்கள் கிழமை சஸ்த்ரஹதமாளயம் --- துர்மரணம் நேரிட்டவர்களுக்கு.












Click it and Unblock the Notifications