மாங்கல்ய பலம் தரும் மாசி செவ்வாய் ஒளவையார் விரதம்!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: நாளை மாசி மாதம் செவ்வாய் கிழமையில் பிறக்கிறது. மாசி, தை, ஆடி மாதச் செவ்வாய் கிழமைகளில் பெண்கள் ஒளவையார் அம்மனை வேண்டி விரதம் இருப்பது வழக்கம். இதனை கிராமங்களில் சொலவடையாக "மறந்தா மாசி, தப்பினா தை, அசந்தா ஆடி' என்று சொல்வர். இவ்விரதம் மேற்கொள்ளும் கன்னியருக்கு மனதிற்கு பிடித்த மாப்பிள்ளை கிடைப்பார் என்பது ஐதீகம்.
செட்டிநாடு, பாண்டி நாடுகளில் இவ்வரதம் அதிகம் கடைபிடிக்கப்படுகிறது. இது பெண்கள் மட்டும் கடைபிடிக்க வேண்டிய விரதம் ஆகும். இவ்விரதம் கன்னிப்பெண்களும், சுமங்கலிப்பெண்களும் கடைபிடிக்க வேண்டும். ஆண்கள் பார்க்ககூடாது. விதவைகளும் கலந்து கொள்ளக் கூடாது. இவ்விரதத்தின்போது குறிப்பிட்ட நாளில் இரவு 10.30 மணிக்கு மேல் அனைவரும் தூங்கிய பின் விரதம் இருக்கும் பெண்கள் ஒன்று கூடுவர். மூத்த சுமங்கலிகள் வழிகாட்டுதலின்படி, இளம் பெண்கள் ஒளவையார் விரதத்தை தொடங்குவர்.

ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபாடு செய்வர். இவ்விரதத்தின் நிவேதனமாக பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து ஒருவித வடிவம் கொண்ட கொழுக்கட்டை தயாரிப்பார்கள். அன்றைய தினம் செய்யும் நிவேதனங்கள் எதிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள்.
அதன் பின் ஒளவையாரின் கதையை ஒருவர் சொல்ல அனைவரும் அதை கேட்பர். இறுதியாக பெண்களே விரத நிவேதனங்கள் அனைத்தையும் உண்பார்கள். இவ்விரத்தில் ஆண் குழந்தைகள், ஆண்களையோ கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை.

சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னிப்பெண்களும் இவ்விரதம் இருந்தால் மாங்கல்யப் பலன், குடும்ப சுபீட்சம் ஏற்படும். கன்னிப்பெண்கள் இருந்தால் விரைவில் திருமணம் நடக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கவும், திருமணம் கைகூடவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கணவன் நீண்ட ஆயுள் பெறவும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கின்றனர்.
பெண்கள் ஜாதகத்தில் தீர்க சுமங்கலியாக இருக்கும் அமைப்பு:
1.கணவன் மனைவி இருவர் ஜாதகத்திலும் லக்னம் பலம் பெற்று மனைவியை குறிக்கும் சுக்கிரனும் கணவனை குறிக்கும் மங்களன் எனும் செவ்வாயும் நல்ல நிலையில் ஆட்சி உச்சம் மூல திரிகோன பலம் மற்றும் திக் பலம் பெற்று இருக்க வேண்டும்.

2.பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் ஏழாமிடத்தோடு தொடர்பு கொண்டிருக்க கூடாது. ஏழாமிடம் சுத்தம் நன்மை பயக்கும்.
3.ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் செவ்வாய் அசுபர்களுடன் சேர்ந்து லக்னம்,குடும்பம்,சுகம், களத்திரம், ஆயுள் மற்றும் மாங்கல்யம், அயன சயன சுகம் ஆகிய வீடுகளில் தொடர்பு பெறகூடாது.

4. எட்டு மற்றும் பனிரெண்டாம் வீடுகளில் ராகு தொடர்பு கொள்ள கூடாது.
5.பலமிழந்த நீச சந்திரன் 6/8 வீடுகளில் தொடர்பு பெறாமல் இருக்க வேண்டும்.
6.அசுப கிரகங்கள் உச்சம் பெற்று எட்டாமிடத்தில் நிற்க கூடாது.
7. செவ்வாயும் ராகுவும் அல்லது செவ்வாயும் சனியும் சேர்க்கை பெற்று 7/8ம் வீடுகளில் நிற்க்க கூடாது.
இவற்றோடு ரஜ்ஜு பொருத்தம் இருக்க வேண்டும்.

ரஜ்ஜு பொருத்தம்:
இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்த பொருத்தம் குறிக்கிறது. திருமண பந்தத்திற்கு இந்த பொருத்தம் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
ரஜ்ஜுப் பொருத்தம் என்பது 10 விதப் நட்சத்திரப் பொருத்தங்களில் ரஜ்ஜுப் பொருத்தமே சிறப்புடையதாக கருதப்படுகிறது. இப்பொருத்தம் பார்ப்பது எதற்காக எனில் மனைவி கணவனுடன் நீண்ட காலம் சந்தோஷமாக வாழும், பாக்கியத்தை அதாவது நீண்ட காலம் வாழும் ஆயுளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. மற்றும் எதனையெல்லாம் பாதிக்கும் என்பதனை இங்கு காணலாம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழக்குடி அருகில் உள்ள ஆதிச்சநல்லூர், அழகிய பாண்டியபுரம் அருகில் உள்ள குறத்திமலை, முப்பந்தல் ஆகிய இடங்களில் ஒளவையாருக்கு கோவில்கள் அமைந்துள்ளன. ஆரல்வாய்மொழி அருகில் உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் ஆலயத்தில், அவ்வையாருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது.

காதல் திருமணம் செய்துக்கொண்டவர்கள், ஜாதக பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்துக்கொண்டவர்கள், ஜாதகமே இல்லாதவர்கள், ஏதோ ஒரு கட்டாயத்தினால் திருமண பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்துக்கொண்டவர்கள், திருமண வரம், குழந்தை வரம், மங்கலமான மண வாழ்க்கை, தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்ட, ஆடி,தை மற்றும் மாசி செவ்வாய்க்கிழமைகளில் ஒளவையார் அம்மன் கோவிலில் பொங்கலிட்டு, இரவு மூத்த சுமங்கலி வீட்டில் நடைபெறும் நோன்பில் கலந்து கொண்டு இரட்டிப்பு பலனை அடையலாம்.












Click it and Unblock the Notifications