பெருமழை வெள்ளத்திற்கு இடையே கேரளா கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை
கேரளா மாநிலத்தில் மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சபரிமலையில் நிறைபுத்தரிசி விழா பக்தர்கள் யாருமின்றி எளிமையாக நடைபெற்றது.
திருவனந்தபுரம்: கேரள கோவில்களில் ஆண்டுதோறும் ஆவணி மாதப் பிறப்பிற்கு முதல்நாளில் நிறை புத்தரிசி பூஜை மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கோவிலில் நிறை புத்தரிசி பூஜை எளிமையாக நடைபெற்றது.
நாட்டில் விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பசியின்றி வாழவும் வேண்டி விளைந்த நெற்கதிர்களை வைத்து பூஜை நடத்தி அந்த நெற்கதிர்களை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவதே நிறை புத்தரிசி பூஜையாகும்.
நாட்டில் விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பசி பட்டினியின்றி வாழவும், ஆடி மாதம் மகம் நட்சத்திரமும், பஞ்சமி திதியும் வரும் நாளில் கோயில்களில் நிறை புத்தரிசி வழிபாடு நடந்து வருகிறது.

அறுவடை நெற்கதிர்கள்
இந்நாளில் வயல்களில் அறுவடை செய்யப்படும் நெற்கதிர்களை முதலில் கோயில்களில் பூஜை செய்து பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் நடைமுறை திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சி காலம் தொட்டு இருந்து வருகிறது. இந்த நெற்கதிர்களை வீட்டில் வைத்தால் ஆண்டு முழுவதும் உணவு பஞ்சம் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சபரிமலையில் பூஜை
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கேரளாவில் அனைத்து கோவில்களிலும் நிறை புத்தரிசி பூஜை நடந்தது. திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில், கரிக்ககம் சாமுண்டி கோவில், சபரிமலை அய்யப்பன் கோவில், குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது. பக்தர்கள் யாருமின்றி இந்த ஆண்டு அய்யப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது.

எளிமையாக நடந்த பூஜை
சபரிமலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் தலைமையில் பக்தர்கள் இன்றி நிறை புத்தரிசி பூஜை மிக எளிமையாக நடந்தது. சபரிமலை வரலாற்றில் முதன் முறையாக பக்தர்கள் இன்றி நிறை புத்தரிசி பூஜை எளிமையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு கருதி பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த பூஜைகளில் ஒரு சில அதிகாரிகள் மற்றும் கீழ் சாந்திகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

நிறை புத்தரிசி பூஜை
குமரி மாவட்டம் கேரளாவில் இருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்த பின்னரும் இங்குள்ள கோயில்களில் இந்த வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வருடம் நிறை புத்தரிசி வழிபாடு நேற்று காலை மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில், பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயில், குமாரகோவில், வெள்ளிமலை முருகன் கோயில்கள் உள்பட திருக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

நெற்கதிர்கள் ஊர்வலம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆடி நிறை புத்தரிசி பூஜை நேற்று அதிகாலை 6 மணி முதல் 6.30 மணி வரை நடந்தது. நேற்று அதிகாலை கோயிலுக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக்கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோயிலில் கொண்டு வந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு அந்த நெல்மணிக்கதிர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர் அவை பகவதி அம்மன் முன் மூலஸ்தான மண்டபத்தில் படைத்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சிறப்பு பூஜை முடிந்தபின் நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது.

நெற்கதிர்கள் பிரசாதம்
நிறைபுத்தரிசி பூஜையையொட்டி பகவதி அம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு அம்மன் சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த பூஜையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications