ஐப்பசியில் பருவமழை அதிகமாக இருக்கும்... பங்குச்சந்தை உயரும் - பஞ்சாங்கம் கணிப்பு
துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது. நதிகளில் நீராடுவது புண்ணியம். இந்த மாதத்தில் மழை எப்படி? விலைவாசி கட்டுக்குள் இருக்குமா என பஞ்சாங்கம் கணித்துள்ளதை பார்க்கலாம்.
சென்னை: ஐப்பசி மாதம் மழை தேவைக்கு அதிகமாகவே பெய்யும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது. துலாமாதமான ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் எப்படி இருக்கும் பஞ்சாங்கம் என்ன சொல்கிறது என பார்க்கலாம்.
புரட்டாசியில் பல பகுதிகளிலும் மழை புரட்டி எடுத்தது. தமிழகத்தில் நீர் நிலைகள் பல பகுதிகளில் நிரம்பியுள்ளன. தென் மாவட்டங்களில் தாமிரபரணியில் மகாபுஷ்கரம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அனைத்து நதிகளும் காவிரியில் கலக்கும் இந்த மாதத்தில் புனித நீராடுவது புண்ணியம். ஐப்பசி மாதத்தில் விலைவாசி எப்படியிருக்கும்? என்னென்ன மாற்றங்கள் நிகழும் என பார்க்கலாம்.
எந்த ராசிக்கு வருமானம், யாருக்கு செலவு - ஐப்பசி மாத ராசிபலன்கள் 2018
பருவமழை பொழியும்
ஐப்பசி மாதம் வடகிழக்கு பருவமழைக்காலமாகும். துலாமில் சூரியன் இருக்க விருச்சிகத்தில் சுக்கிரன் இருக்கிறார். சூரியனுக்கு முன்பு குரு சஞ்சரிக்கிறார். அக்டோபர் 30ல் விருச்சிகத்தில் குரு புதன் இணைகின்றனர். அக்டோபர் 21ல் அஸ்தமனம் அடையும் சுக்கிரன் நவம்பர் 1ஆம் தேதி உதயமாகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் நாட்டில் தேவைக்கு அதிகமாகவே பெருமழை பெய்யும். அக்டோபர் 29 முதல் நவம்பர் 6 வரை கூட்டு கிரகங்களின் சேர்கையினால் இயற்கை சீற்றங்கள் அதிகமாக இருக்கும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.
பங்குச்சந்தை உயரும்
புரட்டாசி மாதத்தில் பங்குச்சந்தையில் கரடியின் ஆட்டம்தான். 4000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. இந்த மாதம் பங்குச்சந்தை சிறப்பாக இருக்கும் முதலீட்டாளர்களுக்கு வருமானம் பெருகுமாம். விலைவாசி கட்டுக்குள் இருக்கும். ஏற்றுமதி பெருகும். அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.
தங்கம் வாங்க நல்ல நாள்
தங்கம், வெள்ளி விலைகள் குறையும். ஐப்பசி 2 விஜயதசமி புது தொழில் தொடங்க நல்ல நாள். ஐப்பசி 19ஆம் தேதி தனத்திரியோதசி தங்கம் வாங்க நல்ல நாள். ஐப்பசி 20ஆம் தேதி தீபாவளி அதிகாலையில் லட்சுமி பூஜை செய்யலாம். 21ஆம் தேதி லட்சுமி குபேர பூஜை செய்யவும், கேதார கௌரி விரதம் இருக்கவும் ஏற்ற நாள். ஐப்பசி 27 கந்தசஷ்டி சூரசம்ஹாரம் முருகனை வழிபடலாம்.
ஊழல்வாதிகள் சிக்குவார்கள்
இந்த ஆண்டு பல பகுதிகளில் வெடியில்லாத தீபாவாளியாக இருக்குமாம். பிரபலங்களின் ஊழல் வெளிப்படுமாம். அக்டோபர் 19 முதல் 21 வரை 22 முதல் 30 வரை மழை பொழியும். 31ஆம் தேதி கடல் சீற்றமாக இருக்கும். நவம்பர் 2,6,9,11,13,16 ஆகிய நாட்களில் மழையும் பாதிப்பும் ஏற்படும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.