பங்குனி உத்திர விரதம் இருந்தால் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும் - திருமணம் கை கூடும்
மதுரை: பங்குனி உத்திர விரதம் இருந்தால் திருமண வரம் கிடைக்கும். மனம்போல் மாங்கல்யம் அமையும் என்பது முன்னோர்கள் வாக்கு. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரங்கமன்னார் திருமண வைபவத்தை கண்டால் களத்திர தோஷம் விலகி திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. பங்குனி உத்திரம் விரதம் இருந்தால் பெண்களின் ஜாதகத்தில் உள்ள மாங்கல்ய தோஷமும் நீங்கும்.
தமிழ் மாதங்களில் 12 வது மாதம் பங்குனி மாதம். ஜோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் 12 வது நட்சத்திரமாக வருகிறது உத்திரம். பங்குனி மாதத்தில் பவுர்ணமி தினமும் உத்திர நட்சத்திரமும் இணைந்து வரும் புனிதமான நாளையே நாம் பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம்.
இந்த நன்னாளில் பன்னிரு கரங்கள் கொண்ட முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் நமது வாழ்வில் குறையா செல்வம் சேரும், திருமண தடை அகன்று திருமணம் கை கூடும். அதோடு பங்குனி உத்திர விரதம் இருந்து முருகனை வணங்கினால் என்னென்ன சிறப்புகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

தெய்வீக திருமணங்கள்
பங்குனி உத்திர நாளில் தான் முருக பெருமான் தெய்வானையை மணந்துள்ளார். சிவன் பார்வதி, ராமன் சீதை, தேவேந்திரன் இந்திராணி போன்றோர்களின் திருமண நாளாகவும் பங்குனி உத்திர நன்னாள் விளங்குகிறது. சபரிமலையில் தர்ம சாஸ்தாவாக வீற்றிருக்கும் ஐயன் ஐயப்பன் இந்த பூமியில் அவதரித்ததும் இந்த நன்னாளில் தான். அன்னை மகாலட்சுமி பூமியில் அவதரித்ததும் இந்த நாளில் தான் என்கிறது புராணங்கள்.

பங்குனி உத்திர விரதம்
பங்குனி உத்திர நாளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும். இன்று முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம். வேலைக்கு செல்பவர்கள் , வேலையில் உள்ளவர்கள் ஓம் சரவண பவ என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன் மூலம் நமது மனமானது இறை சிந்தனையிலேயே இருக்கும்.

முருகன் கோவில் தரிசனம்
பங்குனி உத்திர நாளில் ஒரு வேலை மட்டுமே உணவு சாப்பிட்டு விட்டு விரதம் இருக்க வேண்டும். வயதானவர்கள், உடல் நலம் பாதிக்க பட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம். நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோயிலிற்கு செல்லலாம்.

தோஷங்கள் நீங்கும்
இன்றைக்கு பலருக்கும் 30 வயதிற்கு மேலும் திருமணம் நடைபெறாமல் உள்ளது. அதற்குக் காரணம் களத்திர தோஷம், சர்ப்ப தோஷம் என்று கூறுவார்கள். அதேபோல பெண்களின் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருந்தாலும் திருமணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும். ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் பங்குனி உத்திரம் நாளில் விரதம் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரங்கமன்னார் திருமணத்தை தரிசனம் செய்தால் திருமண வரம் கிடைக்கும்.

குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்
திருமணமான தம்பதியர் இடையே அடிக்கடி சண்டை நடைபெறும். கணவன் மனைவி இடையே பிரிவினைகளும் ஏற்படும். சண்டை சச்சரவாக இருக்கும் தம்பதியர் பங்குனி உத்திர நாளில் கோவில்களில் நடைபெறும் தெய்வீக திருமணங்களை தம்பதி சமேதராக தரிசனம் செய்தால் ஒற்றுமை மேலோங்கும்.

கோடீஸ்வர யோகம் கிடைக்கும்
பங்குனி உத்திர விரதம் இருந்தால் நோய்கள் நீங்கி கணவன் மனைவி ஆயுள் அதிகரிக்கும். வீட்டில் பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். செல்வ வளம் அதிகரிக்கும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். திருமணமான பெண்கள் பங்குனி உத்திர நாளில் புது தாலி மாற்றிக்கொள்வதன் மூலம் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.












Click it and Unblock the Notifications