கணவன் மனைவி சண்டையா.... ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை பாருங்க சந்தோஷம் குடியேறும்
ஒருவரின் ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தால் அவர்கள் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சேர்த்தி சேவையை தரிசித்தால் களத்திர தோஷம் நீங்கும்.
திருச்சி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடக்கிறது. நாளை தேரோட்டம் நடக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தால் அவர்கள் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சேர்த்தி சேவையை தரிசித்தால் களத்திர தோஷம் நீங்கும். கணவன் மனைவி இடையே ஓயாத சண்டை இருந்தால் சேர்த்தி சேவை பார்த்து சேர்ந்து வாழலாம்.
பங்குனி உத்திர நாளில் சூரியன் மீனத்தில் குருவீட்டிலும் சந்திரன் கன்னியில் உத்திர நட்சத்திரத்தில் புதன் வீட்டிலும் நின்று சம சப்தம சேர்க்கை பெறும் நாள் இது. இந்த நாளில்தான் லட்சுமிதாயார் பார்க்கவ மகரிஷியின் மகளாக பூமியில் பார்கவி என்னும் பெயரில் அவரித்தரித்தாள். கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் பங்குனி உத்திர நாளில் தான் நடந்தது. இந்த திருமணக் கோவலத்தைத் தான் சித்திரை விசுவன்று பொதிகையில் அகத்தியருக்கு தரிசனமாக்கினர்.
ராமன் சீதாதேவியையும், லட்சுமணன் ஊர்மிளாவையும், பரதன் மாண்டவியையும், சத்ருக்கனன் சுருதகீர்த் தியையும் கைப்பிடித்த நாளும் இது தான். முருகப்பெருமான் தெய்வானையை மணம் செய்த நாளும் இதுவே.
லோக்சபா தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் - விகாரி பஞ்சாங்கம் கணிப்பு
ஆதி பிரம்மோற்சவம்
பிரம்மதேவன் கொண்டாடிய முதல் உற்சவம் `பங்குனி உத்திரம்' என்கிறது ஸ்ரீரங்கத் தலபுராணம். எனவேதான் திருவரங்கத்தில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவத்தை ‘ஆதி பிரம்மோற்சவம்' என்கிறார்கள். பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே நடைபெற்ற ஊடல் முடிவுக்கு வந்து இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நாளில்தான். இந்த வைபவம் சேர்த்தி சேவை உற்சவம் என்று ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரப் பெருவிழாவின்போது கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் உற்சவரான நம்பெருமாள் ஸ்ரீரங்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்று வந்தார். இதன் ஆறாம் நாள் உற்சவத்தின்போது உறையூரில் அருள்பாலிக்கும் சோழகுல வல்லியான கமலவல்லி நாச்சியார் சந்நிதிக்கு சென்றார் நம்பெருமாள். புத்தாடை, சந்தனம், திலகம், மாலை அணிந்து புதுமாப்பிள்ளை போல் காட்சி அளித்த அவர், தான் அணிந்த மலர் மாலையை கமலவல்லி நாச்சியாருக்கு அணிவித்து, நாச்சியாரின் மாலையை தான் வாங்கி அணிந்துக் கொள்வார். பின்னர் இருவரும் திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்கின்றனர்.
ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி சேவை
கமலவல்லி நாச்சியாரை பார்க்கப் போனதால் நம்பெருமாள் மீது ஊடல் கொள்கிறார். அவரை பார்க்காமல் கதவை படாரென்று சாத்தி கோபத்தை காட்டுகிறார். ஆதி பிரம்மோற்சவத்தின் 9ஆம் நாளான இன்று இந்த ஊடலும் சேர்த்தி சேவையும் நடக்கிறது. இன்று நம்பெருமாள் சித்திரை மாதம் உத்திர வீதிகளில் வலம் வந்து தாயார் சந்நியில் எழுந்தருள்வார். அப்போதுதான் ஊடல் கொள்கிறார் தயார். ஒருவழியாக ஊடல் முடிந்து திருமஞ்சனம் முடிந்த பிறகு பெருமாளும் தாயாரும் தம்பதி சமேதராக சேவை சாதிப்பார்கள்.
மனைவியும் துணைவியும்
முதல் மனைவியின் சம்மதத்துடன் இரண்டாம் திருமணம் செய்துக்கொண்ட ஸ்ரீ ரங்கநாதருக்கே இவ்வளவு அவஸ்தைகள் என்றால் மனைவிக்கு தெரிந்தும் தெரியாமலும் இரண்டாவது திருமணம் செய்பவர்கள் அடையும் துன்பம் எத்தனை என்பதையே இந்த சேர்த்தி சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவையையொட்டி, இன்று தாயார் மற்றும் பெருமாள் சன்னதிகளில் மூலஸ்தான சேவை கிடையாது. இரவு 10 மணிக்கு சின்னப்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளி தாயார் சன்னதி சேருகிறார்.
ஜாதகத்தில் இருதார யோகம்
தெய்வங்கள் இருதாரங்களை மணந்ததை புராண கதைகளில் படித்திருக்கிறோம். பெருமாளுக்கும் தாயாருக்கும் நடந்த ஊடல் என்பது உலகமயமான ஊடல் போலத் தோன்றினாலும் அதன் உள்ளார்ந்த தத்துவம் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நிகழும் பாசப் போராட்டம். இதே போல மனிதர்களுக்கும் பலருக்கு இருதார யோகம் அமைகிறது. ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்தை அவருக்கு இருதார அமைப்பு உண்டா என்பதை அறிந்து கொள்ளலாம்.
இரண்டு கிரகங்களின் கூட்டணி
களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்திலும் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்திலும் இரண்டு கிரகங்கள் இருந்தால் இருதார யோகம் ஏற்படும். ஏழாம் அதிபதி கெட்டு கெட்டவன் வீட்டில் இருந்தால் இருதார யோகம் ஏற்படும். ஏழாம் வீட்டில் சுக்கிரன் சனி சேர்க்கை கண்டிப்பாக இருதாரயோகம் கொடுக்கும்.
உச்சம் பெற்ற கிரகம்
ஏழாம் வீட்டில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தாலும் ஏழுக்கு உடையவன் உச்சம் பெற்ற கிரகத்துடன் சேர்க்கை பெற்றாலும் அவனுக்கு இருதார யோகம் கொடுக்கும். பன்னிரெண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் இருதார யோகம் ஏற்படும். ஜாதகத்தில் இருதார தோஷம் பெற்றிருப்பவர்கள் இந்த சேர்த்தி சேவையில் ஸ்ரீ ரங்க நாயகி ஸமேத ரங்கநாதரை தரிதனம் செய்தால் தோஷம் நிவர்த்தியாகும்.
கணவன் மனைவி சண்டை தீரும்
களத்திர தோஷம் பெற்று திருமணம் நடைபெறாமல் தடைபட்டு தவிப்பவர்களும் இந்த சுக்கிர ஸ்தலமான ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெறும் சேர்த்தி சேவை தரிசித்தால் களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் ஆனவர்களும் களத்திர தோஷத்தால் பிரிந்து இருப்பவர்களும், வீட்டில் கணவன் மனைவி இடையே சண்டை போட்டுக்கொண்டிருப்பவர்களும் இந்த சேர்த்தி சேவையை தரிசித்தால் சண்டை நீங்கி மகிழ்சியான வாழ்வு அமையும்.