புரட்டாசி மாத ராசி பலன் 2022: சூரியன், புதன் சுக்கிரன் கூட்டணி.. குதூகலத்தை அனுபவிக்கப்போவது யார்?
மதுரை: புரட்டாசி மாதம் நவகிரகங்கள் சில ராசிக்காரர்களுக்கு அற்புத பலன்களைத் தரப்போகின்றன. புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னிகா மாதம் என்றும் அழைக்கப் படுகிறது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். இந்த மாதம் முழுவதும் வைணவ பக்தர்கள் மாமிச உணவு அருந்தாமல் விரதம் மேற்கொள்வார்கள்.செப்டம்பர் 18ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறக்கிறது. அக்டோபர் 17 ஆம் தேதி வரைக்கும் புரட்டாசி மாதம் உள்ளது. கன்னி ராசியில் மூன்று கிரகங்களின் கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரலாம் அதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் இந்த மாதத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
புரட்டாசி விஷ்ணு பகவானுக்கு உகந்த மாதம். பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். முன்னோர்களின் ஆசி கிடைக்கும் உன்னத மாதம் புரட்டாசி.புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவது குடும்பத்திற்கு சுபிட்சத்தை உண்டாக்கும். சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் கொழிக்கும். துன்பம் விலகி ஓடும். புரட்டாசி சனிக்கிழமைகளில் சனி பகவானை நினைத்து மனமுருக விரதம் இருந்தால் சனி தோஷம் நீங்கும். இந்த மாதத்தில் வரும் அமாவாசை மகாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது. விண்ணுலகம் சென்ற நமது முன்னோர்கள் மண்ணுலகுக்கு வந்து 15 நாட்கள் நம்மோடு தங்குகின்ற புண்ணிய காலமாகும்.
புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் ராகு அமர்ந்திருக்கிறார். ரிஷப ராசியில் இருக்கும் செவ்வாய் புரட்டாசி 29ஆம் தேதி மிதுன ராசிக்கு மாறுகிறார். புதன் கன்னி ராசியில் அமர்ந்திருக்கிறார். குரு மீன ராசியில் இருக்கிறார். சுக்கிரன் புரட்டாசி மாதம்7 ஏழாம் தேதி சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செல்கிறார். சனி மகரத்தில் அமர்ந்திருக்கிறார். கேது துலாத்தில் இருக்கிறார்.
தனுசு
வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
அப்பா... போன மாசம் பட்ட கஷ்டம் எல்லாம் காத்துல வச்ச கற்பூரம் போல கரைஞ்சு போச்சுங்க. கழுத்தை நெறிக்கும் கடனை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீங்க. குடும்பத்தோட சேர்ந்து உல்லாச பயணம் போவீங்க. நிலம் வாங்கி விக்கிறதுல நிலையான வருமானம் பார்ப்பீங்க. என்னதான் ஜாக்கிரதையா பேசினாலும் வார்த்தை சூடாகி வம்புல கொண்டு போய் விட்ருங்க. பிள்ளைகளுக்காக செலவு அதிகரிக்கும்முங்க. படிப்பு செலவு பாடா படுத்தும்முங்க. ஆன்லைன் வர்த்தகங்களில் அதிக கவனம் செலுத்துங்க. கட்டடம் கட்டுற தொழில் நல்லா நடக்கும்ங்க. வழக்கறிஞர்கள் பெரிய சாதனை படைப்பார்கள். பட்டமங்கலம் சென்று வாருங்கள். தொட்டதெல்லாம் துலங்கும்.
மகரம்
வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
கையில வாங்கினேன், பையில போடல, காசு போன இடம் தெரியலையே... அப்படின்னு மனம் சங்கட்டப்பட்டு பாட்டு பாடுற நிலையில இருக்கீங்க. அவசியமான செலவுகளை பண்ணி தான் தீரனும்ங்க. தொழில்ல சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் சீராக நடக்கும்ங்க. வியாபாரத்தில் அதிக அக்கறை காட்டுவீங்க. எதிர்கால நலனுக்காக பணத்தை சேமிப்பீங்க. குதர்க்கம்மா பேசுற உறவுகளை உதறி தள்ளுங்க. குடும்பத்துல குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ளுங்க. யாராவது கோள் மூட்டி வீட்ல நெருப்பு பத்த வைப்பாங்க. அதுக்கு இடம் கொடுக்காதீங்க. சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்முங்க. ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமாக வேலை பார்ப்பார்கள். திருநள்ளாறு தர்ப்ப ஆரண்ய ஈஸ்வரரை வழிபடுங்கள்.
கும்பம்
சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
நினைத்த காரியம் நடக்கவில்லையே அப்படின்னு மனம் சஞ்சலப்படும்க. பத்து நாள் பொறுத்துக்கோங்க. அப்புறம் பரபரப்பா மாறி போவீங்க. அடுத்தவருக்கு யோசனை சொல்றத நிறுத்திக்குங்க. தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருங்க. வெளியூர் பயணங்களில் அலைச்சல்தான் மிச்சமாகுமுங்க. எதிர்பார்த்த பலன் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டமுங்க. மணல் செங்கல் வியாபாரிகளுக்கு யோகமான மாதமுங்க. திருமண காரியங்கள் தடையில்லாமல் நடக்குமுங்க. அதற்கான பேச்சுவார்த்தைகள பெரியவங்க சமூகமாக முடிவுக்கு வருவாங்க. எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும்ங்க. கொடுத்த கடன் வசூலாகி மன நிம்மதி உண்டாகும். ஒத்தக்கடை யோக நரசிம்மரை வழிபடுங்கள். ஆயுள் விருத்தியாகும்.
மீனம்
பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே...
வேலை வேலைன்னு வீட்டை மறந்து இறக்கை கட்டி பறந்து திரிவீங்க. கூடி வாழ்ந்தால் கோடி நன்மைன்னு உறவினர்களிடம் இருந்த சண்டை சச்சரவுகளை ஒரு வழிக்கு கொண்டு வருவீங்க. நீங்க எதிர்பார்க்காத நேரத்துல சகோதரர் உதவி செய்வாருங்க. மனதில் இருக்கிற கவலைகள் மறைஞ்சு போகுமுங்க. எதிர்கால நலனுக்காக இப்பவே திட்டம் தீட்டி வியாபாரத்தை பெருக்குவீங்க. தொழில்ல எதிர்ப்புகள் வருமுங்க. ஆனால் அதை எல்லாம் துடைத்துவிட்டு முன்னேற்ற பாதையில் வெற்றி நடை போடுவீங்க. உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும்ங்க. வேலை தேடி அலைந்தவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்ங்க. அழகர் கோவில் கள்ளழகர் பெருமானை வழிபடுங்கள். தொழில் விருத்தி அடையும்.
உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி.