ராகு கேது பெயர்ச்சி.. தென் காளஹஸ்தி திருப்பாம்புரத்தில் சிறப்பு ஏற்பாடுகள்.. யாருக்கு பரிகாரம்
திருவாரூர்: குடவாசல் அருகே திருப்பாம்புரத்தில் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் ஆலயத்தில் வரும் 8ஆம் தேதி ராகு - கேது பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற உள்ளது. ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
'தென் காளகஸ்தி' என்றழைக்கப்படும் திருப்பாம்புரம் கோயில் தேவாரப்பாடல் பெற்ற பெருமை வாய்ந்ததாகும். இங்கு ஸ்ரீ வண்டுசேர்குழலி சமேத ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ராகுவும் - கேதுவும் ஏக சரீரமாக இருந்து இறைவனைப் பூஜித்து அருள் பெற்றமையால் இது ராகு - கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்தலத்திற்கு பாம்புபுரம் என்ற பெயர் உண்டு.

ஒருசமயம் கைலாயத்தில் முழுமுதற் கடவுள் உள்ளிட்ட சகல தேவர்களும் சிவபெருமானைத் தொழுது பணிந்து நின்றிருந்தனர். பெருமானின் கழுத்திலிருந்த பாம்பு 'தன்னையும் சேர்த்துத்தானே வணங்குகிறார்கள்'என்று சிலநொடிகள் கர்வம் கொண்டது. அதையுணர்ந்து சினம் கொண்ட பெருமான் "நாகர் இனம் முழுவதுமே சக்தி இழந்து போகட்டும்" என சபித்தார். இதனால் வலிவு குறைந்த நாகர்களால் பூமியைத் தாங்கும் பணியில் குறைவுபடுதல் ஏற்பட்டது. இதைக்கேட்டு அச்சமடைந்த நாகர்கள் சிவபெருமானிடமே முறையிட, "சிவராத்திரியன்று நான்கு காலங்களிலும் பூலோகத்திலுள்ள நான்கு தலங்களில் தம்மை வழிபட விமோசனம் கிடைத்திடும்" என்று சாப விமோசனம் அளித்தார்.
ஆண்டுதோறும் சிவராத்திரி நன்னாளில் முதல் காலத்தில் குடந்தையிலும் (நாகேஸ்வரர்), இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும் (நாகநாதர்), மூன்றாவது காலத்தில் திருப்பாம்புரத்திலும் (சேஷபுரீஸ்வரர்), நான்காவது காலத்தில் நாகூரிலும் (நாகநாதர்) வழிபட்டு நாகர்கள் சாபவிமோசனம் பெற்றனர் என்பது தலவரலாறு. திருப்பாம்புரம் தலத்தில் ராகுவும் - கேதுவும் ஒரே ரூபமாக ஈசனை இதயத்தில் வைத்து பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றார் என்பது தல வரலாறு. இத்தலம் ஒன்றை வழிபடுவதால், திருக்குடந்தை, திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம் மற்றும் காளஹஸ்தி ஆகிய 5 தலங்களை தரிசித்த பலன்களை அடையலாம் என்பது ஐதிகம்.
பாம்புகள் வழிபட்டதால் பாம்புரநாதர் என்றும்,ஆதிசேஷன் வழிபட்டதால் சேஷபுரீஸ்வரர் என்றும் இத்தலத்து பெருமானுக்கு திருநாமங்கள் உண்டாயின. தேவாரப் பாடல்பெற்ற இவ்வூரில் பாம்புகள் தீண்டி இதுநாள்வரை யாரும் மரணித்ததில்லை என்பதும், ஆலம் விழுதுகள் பூமியை தொடுவதில்லை என்பதும் வியப்பூட்டும் உண்மைகளாகும்.
புராணத்தகவலின்படி, ராகு கேது என்பன நிழல் கிரகங்கள். பாம்பினுடைய தலை உடைய கிரகம் ராகு என்றும்,எஞ்சிய உடல் பகுதி உடைய கிரகம் கேது என்றும் நம்பிக்கை உள்ளது. ராகுவிற்கு உரிய தலமாக திருநாகேஸ்வரமும்,கேதுவிற்கு உரிய தலமாகக் கீழ்பபெரும்பள்ளமும் சிறப்பாகப் பேசப்படுகின்றன. ஆனால் இராகு - கேது இரண்டிற்குமே உரித்தான ஒரே பரிகாரத் தலமாக விளங்கிடுவது திருப்பாம்புரம்தான் என்பது சிறப்பு.
ஜெனனகால ஜாதகத்தில் சர்ப்ப தோஷங்கள், களத்திர தோஷம், புத்திர தோஷம், ஆகியன இருப்பவர்களும், இராகு - கேது தசாபுத்தி நடப்பு உடையவர்களும் இத்தலத்தில் வழிபட்டு பரிகார நிவர்த்தி பெறுகிறார்கள். அதுபோல, விஷக்கடிகளால் அல்லல் படுபவர்கள், கனவில் பாம்புகளைக் கண்டு துன்புறுபவர்களும் இத்தலத்தில் தோஷ நிவர்த்திக்கான பரிகார பூஜைகள் செய்து பலனடைகின்றனர்.

ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடியும், வன்னிமரத்தடியில் கல்நாகர்களை பிரதிஷ்டை செய்தும் தோஷ நிவர்த்தி பெறுவது பக்தர்களால் பின்பற்றப்படுகிறது. இத்தலத்தில் ஆதிசேஷனுக்கு மூல விக்கிரகமும், உற்சவர் விக்கிரகமும் உள்ளது தனிச்சிறப்பு. நாகர்கள் தவிர அம்பிகை, பிரம்மன்,சூரியன், சந்திரன், அகத்தியர், தட்சன், இந்திரன், கங்கை ஆகியோர்கள் இத்தலத்தில் வழிபட்டு பேறு பெற்றிருக்கின்றனர்
திருப்பாம்புரம் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் திருக்கோயிலில் வருகின்ற புரட்டாசி மாதம் 21 ஆம் தேதி 08.10.2023 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.40 மணிக்கு இராகு பகவான் மேஷ இராசியிலிருந்து மீன இராசிக்கும், கேது பகவான் துலாம் இராசியிலிருந்து கன்னி இராசிக்கும் இடம் பெயர்கின்றனர். இவ்விழாவினை முன்னிட்டு பக்தர்கள் நலன் கருதி 08.10.2023 முதல் 09.10.2023 முடிய இரண்டு தினங்களுக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பாக சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் அர்ச்சனை ஆகியவை சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்க கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். ராகு கேது பெயர்ச்சி லட்சார்ச்சனை, பால் அபிஷேகம், தோஷ பரிகார பூஜை செய்பவர்கள், 18 மாதங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி கட்டளை அர்ச்சனை செய்பவர்கள் செயல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். திருக்கோயில் தொலைபேசி எண்-87547 56418. கும்பகோணம் (to) காரைக்கால் வழித்தடம், கற்கத்தி வழியாக திருப்பாம்புரம் அடையலாம். மயிலாடுதுறை (to) கொல்லுமாங்குடி கற்கத்தி வழியாக திருப்பாம்புரம் கோவிலுக்கு செல்லலாம். திருவாரூர் (to) சன்னாநல்லூர், பேரளம் வழியாக திருப்பாம்புரம் கோவிலுக்கு செல்லலாம். காரைக்கால் (to) பேரளம் வழி கற்கத்தி வழியாக திருப்பாம்புரம் செல்லலாம்.












Click it and Unblock the Notifications