சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைத் தேரோட்டம் - வீட்டில் படம் வைத்து படையலிட்டு வழிபட்ட பக்தர்கள்
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைத்தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் வீட்டிலேயே, மஞ்சளில் தேர் வரைந்து, அதன் முன்பாக அம்மன் படத்தை வைத்து படையலிட்டு பயபக்தியுடன் வணங்கினர்.
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு அம்மன் சப்பரத்தில் எழுந்தருளினார். கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்கவில்லை. பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் வீட்டிலேயே, மஞ்சளில் தேர் வரைந்து, அதன் முன்பாக அம்மன் படத்தை வைத்து படையலிட்டு பயபக்தியுடன் வணங்கினர்.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதால் இக்கோவிலுக்கு தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவது உண்டு. கோவிலில் நடைபெறும் பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும்.
சித்திரை மாதம் பிறந்து வரும் முதல் செவ்வாய் கிழமையன்று சமயபுரம் அருள்மிகு மாரியம்மனுக்கு தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். பக்தர்களின் துயரினை அழித்து தர்மத்தை காப்பதற்காகவே பச்சை பட்டினி விரதமிருந்து சித்திரை தேரில் பவனிவரும் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மனை மனதார நினைத்தாலே வாழ்வில் வளம் சேரும் என்பது நிதர்சனம்.

பக்தர்கள் படையல் வழிபாடு
சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுவட்டார கிராமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் விரதம் இருந்து அம்மனை வழிபடுவார்கள். தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில், தேரோட்டம் நடைபெறும் 3 நாட்களுக்கு முன்பு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டில் அம்மன் படத்தை வைத்து, இளநீர், துள்ளுமாவு, கொழுக்கட்டை, மாவிளக்கு வைத்தும், தேங்காய் உடைத்தும் வணங்குவது வழக்கம்.

சித்திரைத் தேரோட்டம்
இந்தநிலையில், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அதிகரிப்பு பாதிப்பின் காரணமாக தேர்த்திருவிழா கோவிலின் உள்பிரகாரத்தில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தேர்திருவிழாவில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏமாற்றம் பக்தர்கள் இடையே நிலவி வருகிறது. அதனால், நேற்று இரவு ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் வீட்டிலேயே, மஞ்சளில் தேர் வரைந்து, அதன் முன்பாக அம்மன் படத்தை வைத்து படையலிட்டு பயபக்தியுடன் வணங்கினர்.

மாரியம்மன் விரதம்
அனைத்து உயிரினங்களும் நன்றாக வாழ்வதற்காக இறைவியே அதாவது ஆதிபராசக்தியே விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மட்டும் தான். பச்சைப்பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களும் அம்பாளுக்கு நைவேத்யம் படைப்பது கிடையாது. இளநீர், பானகம், நீர் மோர், கரும்பு சாறு உள்ளிட்ட பானங்களே ஆகாரம். இதற்கு பச்சை பட்டினி விரதம் என பெயர். பச்சை பட்டினி விரதம் முடிந்ததும் அம்பாள் பூச்சொரிதல் கண்டருளினார்.

தேரோட்டம் கோலாகலம்
பூச்சொரிதல் முடிந்த நிலையில் சித்திரை திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற வில்லை. அதற்கு பதிலாக அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி கோயில் 2வது பிரகாரத்தை வலம் வந்து, அபிஷேக மண்டபத்தை அடைந்தார். இந்த நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications