Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன்: 30 ஆண்டுகளுக்குப் பின் கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரும் சனி .. இனி அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனி பகவான் கும்ப ராசியில் வக்ரநிலையில் இருந்து இன்று முதல் வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் பயணம் செய்கிறார். சனி பகவானின் பார்வை வலிமையடைகிறது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசிகளை பார்வையிடுகிறார். இனிதான் உண்மையான சனியின் ஆட்டத்தை உணரப்போகிறார்கள். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

திருநள்ளாறு: காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீதர்பாரணேஸ்வரர் தேவஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். சனிப்பெயர்ச்சியின்போது தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாருக்கு வந்திருந்து நலங்குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை எள்தீபம் ஏற்றி வணங்கி செல்வார்கள்.

Sani peyarchi palan 2023: Sani Vakra Nivarthi Tirunallaru Sani Bhagavan Temple 20th December Sani Peyarchi

சனி பெயர்ச்சி எப்போது: சனிப்பெயர்ச்சிக்கு முன்னதாக 48 நாட்களும் சனிப்பெயர்ச்சி முடிந்து 48 நாட்களும் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும். திருநள்ளாறு கோயில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனி பெயர்ச்சியானது வரும் மார்கழி மாதம் அதாவது வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாருக்கு என்ன சனி: இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷம் லாப சனி, ரிஷபம் தொழில் சனி, மிதுனம் பாக்ய சனி, கடகம் அஷ்டமத்து சனி, சிம்மம் கண்டச்சனி, கன்னி ருண ரோக சத்ரு சனி, துலாம் புண்ணிய சனி, விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி, தனுசு தைரிய சனி,மகரம் பாத சனி, கும்பம் ஜென்ம சனி, மீனம் லாப சனி என பலன்கள் கிடைக்கும். சனிபகவானை பார்த்து நல்லது நடப்பதற்கு நன்றி சொல்லி விட்டு வாருங்கள்.

ஏழரை சனி: மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி காலமான 30 மாதமும் பாதிப்புகள் குறைய கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். சனி சாந்தி பூஜை செய்ய வேண்டும். திருநள்ளாறுதான் போகவேண்டும் என்று இல்லை எந்த ராசிக்காரர்கள் எந்த கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும் என்று பார்க்கலாம்.

மேஷம்: லாப சனி காலம் என்பதால் பலன்களும் நன்மைகளும் அதிகரிக்க மேஷம் ராசியில் பிறந்தவர்கள் திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக்குறிச்சியில் இருக்கும் ஸ்ரீபூமாதேவி சமேத ஆதிவராகப் பெருமாளை வழிபட்டால், மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ சிவன், ஸ்ரீ பார்வதி ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

ரிஷபம்: தொழில் சனி காலம் என்பதால் வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சனீஸ்வரரை வணங்கலாம். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இடையாற்று மங்கலத்தில் இருக்கும் லட்சுமி நாராயணனை வணங்கி வந்தால், மேலும் சிறப்பானப் பலன்களைப் பெறலாம். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றலாம்.

மிதுனம்: பாக்யசனி காலம் என்பதால் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளையும், ஸ்ரீராமானுஜரையும் வழிபட்டு வர, சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் அதிகரிக்கும். மேலும் ஸ்ரீ விநாயகரை வணங்கலாம். உங்களின் குல தெய்வத்தை விடாமல் கும்பிடுங்கள். வாலாஜாபேட்டையில் எழுந்தருளும் லட்சுமி வராகப்பெருமாளை வணங்க மேலும் நன்மைகள் நடைபெறும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி காலம் என்பதால் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் மிகுதியான நன்மைகளைப் பெறலாம். திங்கட்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று வரலாம். குச்சனூரில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை வழிபட்டு வருவது நல்லது.

சிம்மம்: கண்டச்சனி காலம் என்றாலும் கவலை வேண்டாம். வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்கினால் நன்மைகள் நடைபெறும். காரமடை அருகே இருக்கும் இருளர்பதி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் சுயம்பு பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டால், நல்ல பலன்களைப் பெறலாம். புதன்கிழமைகளில் பெருமாள், மஹாலட்சுமி, சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவான், பைரவரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

கன்னி: ஆறாம் வீட்டில் பயணம் செய்யும் ருண ரோக சத்ரு ஸ்தான சனி என்பதால் திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

துலாம்: 5ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் சனி புண்ணிய சனி காலம் என்பதால் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் மிகுதியான நன்மைகளைப் பெறலாம். திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்தால் வாழ்க்கை மேன்மையுறும். மேலும் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ துர்கை ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

விருச்சிகம்: நான்காம் வீட்டில் சனி பகவான் அர்த்தாஷ்டம சனியாக பயணம் செய்வதால் வாலாஜாபேட்டை பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்க நன்மைகள் நடைபெறும். வேலூர் மாவட்டம், பெரிய மணலியில் இருக்கும் நாகரத்தினசுவாமி திருக்கோவிலுக்குச்சென்று நாகேஸ்வரசுவாமியை வழிபட்டால், நல்ல பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

தனுசு: ஏழரை சனி முடிந்து தைரிய சனி ஆரம்பித்து விட்டது. பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூரில் அமைந்திருக்கும், அருள்மிகு விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரரை வணங்கி வரலாம். திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

மகரம்: ஏழரை சனியில் குடும்ப சனி பாதசனி காலம் என்பதால் வாலாஜாபேட்டையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வழிபடலாம். சனி சாந்தி பரிகார ஹோமம் செய்யலாம். திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரையும், அபிராமியையும் வணங்கி வர சிறப்பான பலன்களைப் பெறலாம். சனீஸ்வர பகவான், சிவன் பார்வதியை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

Sani peyarchi palan 2023: Sani Vakra Nivarthi Tirunallaru Sani Bhagavan Temple 20th December Sani Peyarchi

கும்பம்: ஜென்ம சனி காலம் என்பதால் கும்ப ராசிக்காரர்கள் தேனி மாவட்டம், சின்னமனுர் அருகேயிருக்கும் குச்சனூரில் சுயம்புவாக அருள்பாலிக்கும் சனீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சனீஸ்வர பகவானை தினசரி வழிபட நன்மைகள் நடைபெறும். வாலாஜாபேட்டையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வழிபடலாம். சனி சாந்தி பரிகார ஹோமம் செய்யலாம்.

மீனம்: ஏழரை சனி தொடங்குவதால் மீன ராசிக்காரர்கள் வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ணசனீஸ்வரரை வணங்கலாம்.விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் இருக்கும் வாலீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ நவக்கிரகம், ஸ்ரீ ஐயப்பன் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+