சனி பெயர்ச்சி பலன் 2023: நினைத்ததை நிறைவேற்றும் பூர்வ புண்ணிய சனி.. பண விசயத்தில் உஷார்!
சென்னை: புண்ணிய சனி காலம் துலாம் ராசிக்காரர்களுக்கு பூர்வ புண்ணிய பலன்களைத் தரப்போகிறது. சுப காரியங்கள் நடைபெறுவதில் இதுநாள்வரை இருந்த தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும் காலம் வரப்போகிறது. திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் டிசம்பர் மாதம் சனி பெயர்ச்சி நிகழ உள்ள நிலையில் துலாம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சனி பெயர்ச்சி: துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 4 மற்றும் 5ஆம் வீட்டு அதிபதி. அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார். இனி அலைச்சல்கள் இருக்காது. இதுநாள் வரை இருந்த மருத்துவ செலவுகள் முடிவுக்கு வரும். பிள்ளைகள் மீதான கவலைகள் நீங்கும். சனிபகவானின் பார்வை கும்பம் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம், லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது. பணவரவு அதிகரிக்கும், குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும், குதூகலம் கூடும். செய்யும் தொழிலில் லாபம் கூடும். கனவு நனவாகும் காலம் கனிந்து வருகிறது.

தடைகள் நீங்கும்: கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவானால் அதிக நன்மைகள் நடக்கப்போகிறது. தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும், திருமணம் கைகூடி வரும், காதல் மணியடிக்கும். காதலர்களுக்கு கல்யாணம் கை கூடி வரும். வீட்டில் எப்போது உற்சாகமாக இருப்பீர்கள். உங்களின் அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும்.
ஆரோக்கியம் அதிகரிக்கும்: அர்த்தாஷ்டம சனியால் நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். இன்னும் சில மாதங்கள்தான் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அம்மாவின் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். சிலருக்கு குழந்தைகளால் பிரச்சினை ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகே குழந்தை பாக்கியம் அமையும்.
கவனம் தேவை: வண்டி வாகனங்கள் வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தந்தை மற்றும் தாய் வழி சொத்துக்கள் எதிர்பாராமல் வர வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை மட்டும் தாரக மந்திரமாக எண்ணினால் செயல்களில் வெற்றி பெற முடியும். உங்கள் பணம், விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்தவும். தங்க நகைகள், பணம் பறிபோகவோ திருடு போகவோ வாய்ப்பிருக்கிறது எனவே பத்திரப்படுத்துங்கள்.
தடைகள் நீங்கும்: பெண்களுக்கு தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும், குழந்தைபேறு கிடைக்கும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பெண்களுக்கு நகைகள் சேரும், ஆடை ஆபரணக்சேர்க்கை கிடைக்கும். வீட்டில் கணவன் மனைவி உறவு உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. சுறுசுறுப்பாக இருந்தாலும் அடிக்கடி உடல் அசதி, சோர்வு அலைச்சல்களால் ஏற்படும்.
எச்சரிக்கை தேவை: வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாகும். விரும்பிய வேலை கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் ஏற்படும். 2024ஆம் ஆண்டில் முதலில் கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்த பின் உங்களை ஸ்த்திரபடுத்திக் கொள்ளுங்கள்.
பங்குச்சந்தை முதலீடுகள்: பங்கு சந்தையில் தேவையற்ற முதலீடுகள் செய்ய வேண்டாம். விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்தல் நலம். ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம் இவைகளில் அதிகக் கவனம் தேவை. இவற்றிலிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது ஆகும். சுய தொழில்களில் முதலீடு செய்வதில் அதிகக் கவனம் தேவை. உங்கள் பணம், உழைப்பினால் அடுத்தவர்கள்தான் ஆதாயம் அடைவார். எனவே முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. பணம் பொருள் மாட்டிக் கொள்ளும் என்பதால் கவனம் தேவை.
பண வருமானம்: சனிபகவான் இரண்டாம் வீடு, ஏழாம் வீடு, 11ஆம் வீட்டை பார்ப்பதால் உங்களுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும். சுபகாரியங்கள் வீட்டில் அதிகம் நடைபெறும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். உங்களின் பயணங்களினால் நன்மைகள் நடைபெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். இந்த சனி பெயர்ச்சி காலத்தில் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று ஆலய தரிசனம் செய்யும் காலமாக அமையும். திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு சனிபகவானை தரிசனம் செய்து வர பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெறும்.












Click it and Unblock the Notifications