சங்கரன்கோவில் ஆடித்தவசு விழா - சிம்மவாகனத்தில் கோமதி அம்மன் வீதி உலா
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிம்ம வாகனத்தின் கோமதி அம்மன் வீதி உலா வந்தார்.
திருநெல்வேலி: சங்கரன்கோவில் ஆடித்தவசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3ஆம் நாளன்று அம்மன் சிம்ம வாகனத்தில் உலா வந்தார். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஆடிச்சுற்றாக பிரகாரத்தை 108 முறை வலம் வந்து வழிபட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சைவ-வைணவ தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று.
சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கரலிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், ஒரே உருவில் வலப்பக்கம் ஈசனாகவும், இடப்பக்கம் திருமாலாகவும் வீற்றிருப்பார். மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவியர் கோமதி அம்மனாக வீற்றுள்ளார். அம்பாள் முன் ஆக்ஞா சக்கரம்! பொதுவாக ஸ்ரீசக்ர பிரதிஷ்டை காலடிகளில் தான் இருக்கும்! ஆனால் இங்கு சன்னிதி முகப்பில் பெரிதாக ஸ்ரீசக்ர அமைப்பு! மன மாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட, அதில் உட்கார்ந்தும் தியானித்துக் கொள்ளலாம்!
உலகத்தின் உயிர்களாகிய நாம் சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று வேறுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமாள் கோமதிஅம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்கமூர்த்தியாகவும் இந்த ஆலயத்தில் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சி ஆடித்தவசு விழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அரியும் சிவனும் ஒன்றே... என்ற உலகத்தத்துவத்தை உணர்த்துகிறது இந்த திருவிழா.

தவசு விழா கொடியேற்றம்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு விழா ஆடி மாதம் தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை நேரங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
இத்தகைய சிறப்புமிக்க ஆடித்தவசு விழா கொடியேற்றம் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. கோமதி அம்பாள் சன்னதிக்கு முன்பு அமைந்துள்ள தங்ககொடிமரத்தில் காலை 8.15 மணிக்கு மேல் வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க வெண்பட்டு கொடியேற்றப்பட்டது.

அம்மன் வீதி உலா
கொடியேற்றம் செய்யப்பட்ட நாளில் இருந்து தினசரியும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். மூன்றாம் நாளான நேற்று சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார் கோமதி அம்மன். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் அம்பாளுக்குக் காட்சி தருகிறார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார்.

108 முறை சுற்றி வழிபட்ட பக்தர்கள்
கோமதி அம்பாள் தவம் இருந்து சங்கரநாராயணர் திருக்கோலத்தை கண்டதால் கொடியேற்றம் துவங்கியதில் இருந்து கோமதிஅம்பாள் தவமிருக்கும் காலத்தில் கோவிலின் வெளிபிரகாரத்தை பக்தர்கள் 108 ஆடிச்சுற்றுகள் சுற்றுகள் சுற்றி வழிபடுவது வழக்கம்.
அரியும் சிவனும் ஒன்று என்ற மிக அரிய காட்சி கிடைத்த தவக்காலத்தில் கோமதி அம்மனை சுற்றினால் தங்களது வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். கொடியேற்றம் துவங்கியதிலிருந்து தினமும் ஆயிரக்கனக்கான பக்தர்கள் அம்மனின் அருள் வேண்டி காலை, மாலை வேளைகளில் கோயில் பிரகாரத்தில் சுற்றி வருகின்றனர்.

தவக்கோலத்தில் அம்மன்
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 25ஆம் தேதி நடக்கிறது. ஆடித்தவசு விழா 27ஆம் தேதி முதல் காட்சி மாலை 5 மணிக்கும், இரண்டாம் காட்சி இரவு 9 மணிக்கும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

யார் பெரியவர்கள்
சங்கன், பத்மன் என்ற இரண்டு நாக அரசர்கள். நண்பர்களாக இருந்தாலும் எப்போதும் சர்ச்சைதான். சிவனா? விஷ்ணுவா? இருவரில் யார் பெரியவர்? என்பதுதான் அவர்களின் சர்ச்சைக்கு மூலகாரணம். சங்கனோ சைவன், பத்மனோ வைணவன். இருவருமோ தங்களின் கருத்தை நிலை நிறுத்த வேண்டி அன்னை பார்வதியை சரணடைந்தனர். அன்னையும் என்ன செய்வாள்? இருவருமே ஒருவர்தான் என்பதை நிரூபிக்க அந்த சிவனிடமே வரம் கேட்டாள்.

தவமிருந்த கோமதியம்மன்
சிவபெருமானும் மனமுவந்து, 'அகத்திய முனிவர் தவமியற்றிய பொதிகை மலைப்பகுதியில் புன்னை விருட்சமாகப் பலர் தவம் இயற்றுவர். அங்கு நீயும் தவம் செய்தால், நீர் விரும்பிய திருவுருவில் காட்சி தருவேன்" என்றார். சிவனை வணங்கிய பார்வதியும் புன்னைவனத்துக்குப் புறப்பட்டார். சங்கரன்கோவிலில் சிவனை நோக்கி உமாதேவியார் முனிவர்கள், தேவர்கள், தெய்வப் பெண்களுடன் தவமியற்றினார். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஆடிப் பௌர்ணமியில் புன்னை வனத்தில் 'சங்கரநாராயணராக", உமாதேவியார் உள்ளிட்ட சகலருக்கும் காட்சிகொடுத்தார். இந்த நாளே ஆடித்தவசு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.












Click it and Unblock the Notifications