செவ்வாய் பெயர்ச்சி 2018: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் - பரிகாரங்கள்
மகர ராசியில் கேது உடன் சில மாதங்கள் தங்கியிருந்த செவ்வாய் இப்போது தனியாக பிரிந்து கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம்.
சென்னை: செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு 45 நாட்களுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடைகிறார். மேஷம், விருச்சிகம் சொந்த வீடு. கடகத்தில் நீசமடையும் செவ்வாய் மகரகத்தில் உச்சமடைகிறார். நவம்பர் 6ஆம் தேதி வரை மகரத்தில் கேது உடன் சஞ்சாரம் செய்து வந்தார். கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். டிசம்பர் 23ஆம் தேதி வரை கும்ப ராசியில் சஞ்சரிப்பார் செவ்வாய்.
தனுசு ராசியில் அமர்ந்துள்ள சனியின் பார்வை கும்பத்தில் உள்ள செவ்வாய் மீது விழுகிறது. இந்த கால கட்டத்தில் நெருப்பு தொடர்பான பிரச்சினை, ஆலயங்கள், கல்வி நிறுவனங்களில் தீ விபத்துகள் ஏற்படலாம். செவ்வாயின் பார்வை தமிழகத்தில் போராட்டங்கள் வர வாய்ப்பு உள்ளது.
செவ்வாய் ரத்தத்திற்கும் விபத்திற்கும் காரகர். உடன் பிறப்புகளுக்கும் காரகர். ராணுவம், காவல்துறை போன்ற பணி செய்பவர்களுக்கும் காரகராக திகழ்கிறார். செவ்வாய் பகவான் கோச்சாரப்படி 3,6,11 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் காலம் நன்மை செய்யக்கூடியதாகும். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் திருமண தடையை ஏற்படுத்துகிறது. இந்த செவ்வாய் பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்களை தருகிறது என பார்க்கலாம் அதற்கேற்ப பலன்களையும் பார்க்கலாம்.
மேஷம்
உங்கள் ராசி நாதன் செவ்வாய் கேது உடன் 10ஆம் வீட்டில் மகரத்தில் சஞ்சரித்து வந்தார். இப்போது 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது அற்புதமான கால கட்டம். ராசி அதிபதியே லாபத்தில் அமர்ந்திருப்பதால் காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்று பாடக்கூடிய கால கட்டமாகும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும். எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் துறைகளில் பணி செய்பவர்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். திருச்செந்தூர் சென்று முருகனை தரிசிக்கலாம்.
ரிஷபம்
செவ்வாய் உங்கள் ராசிக்கு 10 ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமர்வதால் உற்சாகமாக காணப்படுவீர்கள் என்றாலும் பணியில் கவனம் தேவை. பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். கூடவே செலவும் அதிகரிக்கும் என்பதால் சிக்கனமாக இருக்கவும். தம்பதியர் இடையே ரொமான்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும். கோபம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஆலய வழிபாடு மன அமைதியை தரும். மலைமேல் இருக்கும் முருகனை வழிபட மேலும் நன்மைகள் கிடைக்கும்.
மிதுனம்
உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டில் பாக்கிய ஸ்தானத்தில் அமரும் செவ்வாயினால் சின்னச் சின்ன பிரச்சினைகள் வர வாய்ப்பு உண்டு. விபத்தில் சிக்காமல் தவிர்க்க ரத்த தானம் செய்யுங்கள். கையில் இருந்த பணம் கரையக்கூடும் என்பதால் கவனமாக செலவு செய்யவும். கண்டச்சனியின் 3ஆம் பார்வை செவ்வாய் மீது விழுகிறது. உடன்பிறப்புகளுடன் வாக்குவாதங்கள் வந்து செல்லும் உரிய பரிகாரம் செய்தால் பலன் கிடைக்கும். செவ்வாய் கிழமைகளில் முருகன் ஆலயங்களுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபடலாம். சிவப்பு நிற ஆடைகளை அணியலாம்.
கடகம்
எட்டாம் வீட்டில் அமரும் செவ்வாயினால் எதைக்கண்டாலும் பயம் உண்டாகும். சிரமமான கால கட்டம்தான் என்றாலும் பரிகாரம் செய்தால் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். தேவையற்ற கோபமும் எரிச்சலும் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் மீதே கோபப்பட்டு சண்டைக்கு செல்வீர்கள். சின்னச் சின்ன உடல் உபாதைகள் வந்து செல்லும். செவ்வாய் தலமாக திகழும் பழனிக்கு சென்று மலைமேல் முருகனை தரிசனம் செய்து வர பிரச்சினைகள் தீரும்.
சிம்மம்
களத்திரஸ்தானமான ஏழாம் வீட்டில் செவ்வாய் பகவான் அமர்ந்திருப்பதால் வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் பலரின் செயல்கள் எரிச்சலை தரும். வேலைப்பளு அதிகரிக்கும். கண்களில் எரிச்சலுடன் கூடிய வலி வந்து நீங்கும். உடல் சூட்டினால் வயிறு வலி வரும். கோபம், எரிச்சல் தீர சோலைமலை முருகனை தரிசனம் செய்யுங்கள்.
கன்னி
ஆறாம் வீட்டில் செவ்வாய் அமர்வது அற்புதமான கால கட்டம். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். புதிய உத்தியோகம் மாற வாய்ப்பு உள்ளது. சிலர் புதிய தொழில்களை தொடங்குவார்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். கடலோரத்தில் எழுந்தருளியிருக்கும் திருச்செந்தூர் முருகனை வியாழக்கிழமைகளில் வணங்க எண்ணற்ற நன்மைகள் நடைபெறும்.
துலாம்
ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருக்க பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படும். உடல் உபாதைகளும் எதிர்ப்புகளும் ஏற்படும் என்றாலும் அதனை சமாளிக்கும் தைரியம் பிறக்கும். அதிக செலவுகளினால் அவதிகள் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் அதிக எச்சரிக்கை தேவை. பிள்ளைகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். பாதிப்புகளில் இருந்து தப்பிக்க சுவாமிமலை முருகனை சரணடையுங்கள்.
விருச்சிகம்
நான்காம் வீட்டில் செவ்வாய் அமர்ந்து உள்ளதால் வீடு, நிலம் தொடர்பான பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உடல் உபாதைகள் ஏற்படும். மனதில் சஞ்சலம் பிறக்கும். கடன் தொல்லைகள் அதிகரிக்கும் என்பதால் இந்த கால கட்டத்தில் லட்சுமி நரசிம்மரை வணங்கி வர மனக்குழப்பங்களும், போராட்டங்களும் நீங்கும்.
தனசு
மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருக்க முயற்சிகள் வெற்றியடையும். எங்கிருந்தாவது பணம் கொட்டும். பங்குச்சந்தைகள் மூலம் லாபம், மறைமுகமான வருமானம் கிடைக்கும் கால கட்டம் இதுவாகும். வருமானம் அதிகரித்து பாக்கெட்டில் பணம் நிறைய மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வீடு, வாகனம், நிலம் வாங்க ஏற்ற கால கட்டம் என்பதால் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவும்.
மகரம்
இதுநாள் வரை உங்கள் ராசியில் இருந்த செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும். கலக்கமும், கலவரமும் அதிகரிக்கும். பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். யாரிடமும் கொடுத்து ஏமாந்து போக வேண்டாம். அதிக செலவுகளைப் பார்த்து அஞ்ச வேண்டாம் திருப்பரங்குன்றம் முருகனுக்கு செவ்வாய்கிழமைகளில் பாலபிஷேகம் செய்ய நன்மைகள் நல்லதே நடக்கும்.
கும்பம்
ராசிக்குள் செவ்வாய் அமர்ந்துள்ளார். பகையாளி சனியின் வீட்டில் செவ்வாய் அமர்வது சிறப்பானதல்ல. சனியின் பார்வையும் உங்கள் ராசியில் உள்ள செவ்வாய் மீது விழுவதால் கவனமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் உள்ளவர்கள் செய்யும் வேலையில் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் வருவது சகஜம்தான் டென்சனாகாமல் இருப்பது நல்லது. செவ்வாய்கிழமைகளில் பயணத்தை தவிர்ப்பது நல்லது. பழனிமலை ஆண்டவரை படியேறி தரிசனம் செய்ய தீமைகள் விலகி நன்மைகள் அதிகம் நடைபெறும்.
மீனம்
விரைய ஸ்தானமான 12வது வீட்டில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். உடல்நலப்பிரச்சினைகள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். உங்களின் வேலையில் பிறரை தலையிட விட வேண்டாம். குறை சொல்பவர்களைப் பற்றி கண்டு கொள்ள வேண்டாம். பயணத்தை ஒத்திப்போடுங்கள். இந்த காலகட்டத்தில் ரத்த தானம் செய்யுங்கள் மிகப்பெரிய பாதிப்பில் இருந்து விடுபடலாம்.