ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து கருட வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீரங்கம் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9ஆம் நாள் கருட மண்டபத்தில் நம்பெருமாள் கருட வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து அருள்பாலித்தார்.
திருச்சி: சித்திரை தேர்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்களை அணிந்து கருட வாகனத்தில் கம்பீரமாக காட்சிஅளித்தார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை நம்பெருமாள் அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது.
பெண்களுக்கு டிக்கெட் விலை ரூ.2 மட்டுமே... நாமக்கல் தனியார் டவுன் பஸ் நிறுவனம் அசத்தல்..!
கருட வாகனம், அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார் நம்பெருமாள். கொரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி 2ம் ஆண்டாக விழா நடைபெறுகிறது.
குதிரை வாகனத்தில் நம்பெருமாள்
7ம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.சனிக்கிழமை காலையில் வெள்ளி குதிரை வாகனம், மாலை தங்க குதிரை வாகனத்தில் கருடமண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டாள் சூடிய மாலை
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்தமும், உறவும் மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் இருந்து வந்தது. ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் மங்களப்பொருட்கள் பரிவர்த்தனை நடத்து வருகிறது.
கோவிலில் ஊர்வலம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு சனிக்கிழமையன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட ஆண்டாள் அணிந்த மாலை, பட்டு வஸ்திரங்கள், மலர்கள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட கிளிகள், பழங்கள் உள்ளிட்ட மங்கள பொருட்கள் ரங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. பின்னர் அவை கோவில் வளாகத்திற்குள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
நம்பெருமாள் அருளாசி
9ஆம் திருநாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை நம்பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்களை அணிந்து கருட வாகனத்தில் கம்பீரமாக எழுந்தருளினார். கருடமண்டபத்தில் நம்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளிய அழகினை பக்தர்கள் நேரலையில் கண்டு தரிசனம் செய்தனர்.
ஆளும் பல்லாக்கு
திங்கட்கிழமை சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான செவ்வாய்கிழமை நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளுகிறார். இத்துடன் சித்திரை தேர்த்திருவிழா நிறைவடைகிறது.