2019ஆம் ஆண்டு பருவமழை எப்படி இருக்கும் - புயல் தமிழகத்தை தாக்குமா? - பஞ்சாங்கம் கணிப்பு
2019ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்குப் பருவமழை தவறாது பெய்யுமா? புயல், மழை, சூறாவளி எப்படி இருக்கும் என்று தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது.
மதுரை: பருவமழை தவறாது பெய்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் தடுமாறாமல் இருக்கும். 2018ஆம் ஆண்டில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட அதிகமாகவே பெய்தது, அணைகள் நிரம்பி வழிந்தன. வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் இல்லை. கஜா புயல் டெல்டா மாவட்டங்களை சூறையாடிச் சென்று விட்டது. 2019 ஆங்கில புத்தாண்டில் பருவமழை எப்படியிருக்கும் வெள்ளமா? வறட்சியா என தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது.
2019ஆம் ஆண்டின் பருவமழை காலமான ஆனி மாதம் தொடங்கி (ஜூன்) மார்கழி வரை ( டிசம்பர்) மழை பெய்வதற்கான நாட்களையும், அந்த நாட்களில் மழை பெய்தால் நாடு சுபிட்சமாக இருக்கும் என்றும் சித்தர்கள் கணித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு ஜூன் 25, ஜூலை 24, ஆகஸ்ட் 23, செப்டம்பர் 21,அக்டோபர் 6, அக்டோபர் 19, நவம்பர் 17, டிசம்பர் 17 ஆகிய தேதிகளில் மழை பெய்தால் நல்லது என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.
புழுக்கம் அதிகமாகும்
ஏப்ரல், மே மாதங்களில் இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருக்கும் புழுக்கம் அதிகமாகும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. ஜூன் தொடக்கத்தில் அதிகமாக காற்று வீசும் சேதம் அதிகமாகுமாம். சென்னையில் வெப்பத்தினால் தவிப்பார்கள் என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
ஆடி முதல் கார்த்திகை வரை மழை
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விகாரி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. அந்த ஆண்டின் மேகாதிபதியாக சனி வருவதால் எட்டு திக்கும் புயலுடன் நல்ல மழை பெய்யும். தேவையான நேரத்தில் மழை பெய்யாமல் தேவையில்லாத நேரத்தில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆடி, ஆவணி மாதங்களில் பகல், மாலை, இரவில் நல்ல மழை பெய்யும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புயல் வெள்ளம்
ஐப்பசி மாதம் எங்கும் காற்றுடன் அடைமழை பெய்யும் எனவும், தாம்பரத்திற்கு கிழக்கே புயல் ஆரம்பமாகும். அந்தமானில் சூறாவளியுடன் மழை பெய்யும் என பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, கேரளா, மதுரை,விருதுநகரில் வெள்ள பாதிப்பு ஏற்படும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.
புயாலால் தீபாவளி நாளில் மழை
ஐப்பசி மாதம் அடைமழைக்காலம் என்று கணித்திருந்தாலும் தீபாவளி வியாபாரம் பாதிக்கும் அளவிற்கு மழை பெய்யும் என்றும், புயல் பாதிப்பு ஏற்படும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. மழையால் விளைச்சல் அதிகமாகி விலைவாசி குறையும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
வானியல் மாற்றங்கள்
வானிலை ஆய்வு மையம் புயல் மழை பற்றி சில வாரங்களுக்கு முன்பு கணித்து கூறினாலும் பஞ்சாங்கம் மூலம் ஓராண்டுக்கு முன்பே மழை, புயல் பற்றி முன்பே கணிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருவெள்ளம், குமரியை தாக்கிய ஓக்கி புயல், டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜாபுயல் பற்றி முன்பே பஞ்சாங்கம் கணித்துள்ளது. அதே போல வரும் ஆண்டிலும் மழை, வெள்ளம், புயல் பற்றி பஞ்சாங்கம் கணித்து மக்களை எச்சரித்துள்ளது.