தஞ்சாவூர் கும்பாபிஷேகம் பார்க்க போறீங்களா தட்டு, வீணை, தலையாட்டி பொம்மை வாங்கிட்டு வாங்க
தஞ்சை மாநகருக்கு பிரகதீஸ்வரர் ஆலயம் மட்டும் பெருமையில்லை. பல்வேறு சிறப்புகளை கொண்ட அந்த நகரத்தில் கலைப்பொக்கிஷங்களும் நிறைய உள்ளன. தலையாட்டி பொம்மை, தட்டு, வீணை, ஓவியங்கள் போன்றவைகளுக்கும் தஞ்சாவூர்
தஞ்சாவூர்: ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அழகின் கம்பீர சாட்சியாக நிற்கும் மிகப்பெரிய கோயில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் அந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெறும் இந்த நேரத்தில் தஞ்சை மாநகரத்தின் பல்வேறு சிறப்புகளை பார்க்கலாம். தஞ்சை நகரத்தில் கலைப்பொக்கிஷங்களும் நிறைய உள்ளன. தலையாட்டி பொம்மை, தட்டு, வீணை, ஓவியங்கள் போன்றவைகளுக்கும் தஞ்சாவூர் பிரசித்தி பெற்றதுதான். பெருவுடையார் கோவில் கும்பாபிஷேகம் காண போகிறவர்கள் மறக்காமல் இதை வாங்கிக்கொண்டு வந்து உங்க வீட்டை அலங்கரியுங்கள்.
மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட திருக்கோயில். இந்தியாவின் சிற்பக் கலைக்கு தஞ்சைப் பெரிய கோயில்தான் முகவரி. இருபக்கமும் அகழிகள் சூழ, இன்னொரு பக்கம் ஆறும் அணைக்கட்டும் அரணாக நிற்கின்றன. பிரகதீஸ்வரர் கோயில் கொண்டுள்ள இந்த ஆலயத்தின் கருவறையில் இருந்தே இதன் விமானம் எழுந்து நிற்பது இதன் தனிச் சிறப்பு.
தஞ்சாவூரில் ஆலயம் மட்டுமே சிறப்பல்ல கும்பாபிஷேகத்திற்கு செல்லும் மக்களை அங்கே கிடைக்கும் கலைப்பொக்கிஷங்களையும் கண்ணார கண்டு வரலாம். தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் தலையாட்டி பொம்மை தஞ்சாவூரின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுபவை.
காவிரிக் கரையோர களிமண் கொண்டு செய்யப்படும் தலையாட்டி பொம்மைகள் உலகப் புகழ் பெற்றவை எனலாம். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை எந்தப் பக்கம் சாய்த்தாலும் கீழே விழாமல் ஆடும். அதற்கான தனிச்சிறப்புடன் இந்த பொம்மையின் அடிப்பாகம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம் எனப் பல்வேறு கலைகளுக்குப் பெயர் பெற்ற தஞ்சாவூரில் 19-ம் நூற்றாண்டில்தான் இப்பொம்மைகள் முதலில் உருவாக்கப்பட்டன. சரபோஜி மகாராஜாவின் காலத்தில் இப்பொம்மைகளை உருவாக்கும் கலைஞர்கள் சிறப்பு பெற்று விளங்கினர். மற்றவர்களால் நன்கு மதிக்கப்பட்டனர். மண் சார்ந்த பொருட்களுக்கான புவிசார் குறியீடு குறித்த 1999ஆம் ஆண்டு சட்டத்தின்படி இந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூருக்கே உரித்தான ஒன்று என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது
கர்நாடக இசை உலகில் அதி உன்னத இடத்தைப் பெற்றது தஞ்சாவூர் வீணை. பல மாநிலங்களில் வீணை உருவாக்கப்பட்டாலும் தஞ்சாவூரில் தயாராகும் வீணை தனித்தன்மை வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது. எனவே, மத்திய அரசு இதற்கு 2010ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
தஞ்சாவூர் கலைத்தட்டு உலகப்பிரசித்தி பெற்றது. உலக அங்கீகாரம் கிடைக்கும் வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் ஓவியங்கள் தனித்துவம் மிக்கவை. இவை நம் வீட்டை அலங்கரித்தால் நமது வீட்டிற்கே தனி அங்கீகாரம் கிடைக்கும் என்றால் மிகையாகாது.
தஞ்சாவூருக்கு கும்பாபிஷேகம் காணப்போகும் மக்களே மறக்காமல் இவற்றை எல்லாம் வாங்கிட்டு வாங்க.