சந்திராஷ்டமமா? திருப்பதி பெருமாளை வணங்குங்க. நிம்மதி கிடைக்கும்!
Recommended Video

சென்னை: தற்காலங்களில் காலையில் எழுந்தவுடன் எதை செய்கிறார்களோ இல்லையோ! இன்று யாருக்கு சந்திராஷ்டமம் என்பதை பார்த்துவிட்டு தான் அடுத்தது காபி சாப்பிடலாமா வேண்டாமா என முடிவு செய்யுமளவிற்க்கு சந்திராஷ்டமத்தின் தாக்கம் அனைவரிடமும் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சிலரோ சந்திராஷடமம் என்று தெரிந்தவுடன் யாரிடமும் சரியாக பேசமாட்டார்கள். “உம்” என்று முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். சந்திராஷ்டமம் முடிந்துவிட்டது என்று தெரிந்தவுடன் தான் “அப்பாடா” என நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.

இன்று பல ஜோதிடர்கள் உருவாக காரணம் சந்திராஷ்டமம் என்றால் மிகையாகாது. ஜோதிடமே தெரியாதவர்கள் கூட முதலில் சந்திராஷ்டம தினங்களை கவனிக்க ஆரம்பிக்கிரார்கள். பின் தினம் தினம் குடும்பத்திலுள்ள அனைவரின் சந்திராஷ்டம தினங்களையும் கவனிக்க ஆரம்பிக்கிறார்கள். இதுவே ஒருவர் ஜோதிடத்தின் மீது ஆர்வம் காட்டவும் ஜோதிடத்தை கற்றுக்கொள்ளவும் முதல்படியாகிறது. சந்திராஷ்டமம்னா என்ன? எல்லோரும் சந்திராஷ்டமத்தை கண்டு பயந்து நடுங்க காரணம்தான் என்ன?
மனோகாரகன் சந்திரன்:

"சந்த்ரமா மனஸோ ஜாத:" என்று புருஷ சூக்தம் போற்றும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவனே உடலுக்கு காரகன். சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும். ஜனன லக்னத்தின்படி நல்ல பலன்களை ஒரு ஜாதகத்தில் காண முடியவில்லை எனில், சந்திரனை லக்னமாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும் என்று விதி இருக்கிறது. இதையே 'விதி கெட்டால் மதியைப் பாரு விதியை மதியால் வெல்லலாம் என்ற பழமொழி உணர்த்துகிறுது. யாராவது அறிவீனமான செயல்களை செய்துவிட்டால் "மதி கெட்டவனே" என திட்டுவதை காணலாம். இதிலிருந்து ஒருவர் புத்திசாலியாக இருக்க சந்திரன் எவ்வளவு முக்கியம் என்பதை உணரலாம்.
சந்திராஷ்டமம்:
ஒருவர் பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் ராசிக்கு ஒவ்வொரு மாதமும், சந்திரன் எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும். இதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன்+அஷ்டமம் = சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் 'சந்திராஷ்டம' காலம் என்கிறோம். இந்த இரண்டேகால் நாட்களிலும் சந்திரன் ஒருவருக்கு பிரச்சனையை தருமா என்றால் அதுதான் இல்லை. ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம வேளையாகும்.
பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனசங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர்பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன. ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்யமாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள்.
சந்திராஷ்டம் எப்படி ஏற்பட்டது?
மனோகாரகனான சந்திரன் கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் நீசம் அடைகிறது. எனவே விருச்சிக ராசியில் சந்திரன் வரும்போது எண்ண அதிர்வுகளில் சில மாற்றம் ஏற்படுகிறது. பொதுவாகவே கால புருஷனுக்கு எட்டாம் வீட்டை எந்த கிரகம் கடந்தாலும் அது போகிற போக்கில் சில கெடுதல்களை செய்துவிட்டுதான் போகிறது. அந்த விதத்தில் சந்திரன் மனோகாரகன் மற்றும் பயண காரகன் என்பதால் மனதிலும் பிரயாணத்திலும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதன் அடிப்படையில்தான் சந்திரன் எட்டாம் இடத்தில் வரும்போது சந்திராஷ்டமம் என அனுஷ்டிக்க ஆரம்பிக்கப்பட்டது.
விநாயகரும் சந்திரனும்:
ஒருமுறை முழுமுதற்கடவுள் என்று அழைக்கப்படும் விநாயகப் பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். புதிய பொறுப்பினை ஏற்றுக்கொண்ட விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார். எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் சந்திக்கச் சென்றார். சந்திரன் தான் ஒரு முழுவெண்மதி என்பதால், யானையின் முகத்தை ஒத்த விநாயகரின் திருவுருவை பார்த்து பரிகசித்தான்.

இதனால் கோபமுற்ற விநாயகப்பெருமான் 'உன் அழகு இன்று முதல் இருண்டு உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள்’ என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. முழு வெண்மதியாக இருந்த சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தியதுடன், ஈசனை நோக்கி கடும் தவம் இருந்து பழையபடி முழுவெண்மதியை பெற்றான். சந்திரனின் நிலையை உலகிற்கு உணர்த்தவே மாதத்தின் பாதிநாள் தேய்பிறையாகவும், அடுத்த பாதிநாள் வளர்பிறையாகவும் வலம் வருகின்றான் என்பது நியதி.
தேய்பிறை சந்திரனும் சந்திராஷ்டமும்:
வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு தன்மை அதிக பலம் உள்ளது. சந்திரனை மனநிலைக்கு உரியவன் (மனோகாரகன்) என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மறைவுஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவிண்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் நிகழும். மேலும் சந்திராஷ்டம காலத்தில் வெளியில் பயணம் செய்யும் பொழுது அதிக கவனம் தேவை.
சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும், உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புக்களில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடுபலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.
சந்திராஷ்டமத்தால் எல்லொருக்கும் கெடுதல் ஏற்படுமா?
சந்திராஷ்டமம் ஒரு கெட்ட நாளாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் சந்திராஷ்டமம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. சில நேரங்களில் முடிக்க முடியாத வேலைகள் கூட சந்திராஷ்டம தினங்களில் முடிவதை பார்க்கலாம்.
ஒருவர் ராசிக்கு எட்டாமிடத்தில் புணர்பு தோஷத்தை தரும் சனைஸ்வரன், கிரஹன தோஷத்தை தரும் ஸர்ப கிரகங்களான ராகு கேது, சந்திரனுக்கு அஷ்டங்க தோஷத்தை ஏற்படித்தி சந்திரபலம் இல்லாத அமாவாசை ஏற்படுத்தும் சூரியன் போன்ற கிரகங்களுடன் சேர்ந்து சந்திராஷ்டமம் ஏற்படும்போது மட்டுமே கெடுபலன்கள் ஏற்படுகின்றன.
கீழ்கண்ட நிலைகளில் சந்திராஷ்டமம் கெடுதல் செய்வதில்லை:

1. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு எட்டாம் வீடு குருவின் வீடாகவோ அல்லது எட்டாம் வீட்டிற்க்கு குருவின் பார்வையோஅல்லது சேர்க்கையோ ஏற்பட்டால் சந்திராஷ்டம கெடுபலன் ஏற்படாது.
2.சந்திரனுக்கு எட்டாம் வீட்டில் சுக்கிரன் நின்று சந்திராஷ்டமம் ஏற்பட்டால் அப்போது தீமையை காட்டிலும் நன்மையை ஏற்படும். அதிலும் சுக்கிரன் ஆட்சிபலம் பெற்றுவிட்டால் உங்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் அதிக நற்பலன்கள் ஏற்படும்.
3.ஒருவர் ஜாதகத்தில் ஜெனன சந்திரன் குரு பார்வை பெற்ற நிலையில் அவருக்கு சந்திராஷ்டமம் கெடுதல் செய்யாது.
4. ஜெனன ஜாதகத்தில் சந்திரன் அதிக ஷட்பலம் பெற்று நின்றாலும், சந்திரன் பின்னாஷ்டகவர்க பரல்களாக 6 க்கு மேற்பட்ட பரல்கள் பெற்றுவிட்டாலும், சந்திரன் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனாக நின்றாலும் சந்திராஷ்டம பாதிப்புகள் ஏற்படுவதில்லை.
5. ஒருவர் சந்திராஷ்டமம் அடையும் நக்ஷத்திரம் குருவின் நக்ஷத்திரமாகவோ சுக்கிரனின் நக்ஷத்திரமாகவோ அமைந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் கெடுபலன் அளிப்பதில்லை.
சந்திராஷ்டமத்திற்கான பரிகாரங்கள்:

1.சந்திராஷ்டம தினங்களில் அபிராமி அந்தாதி எனும் பாடலை பாடிவர சந்திராஷ்டம தோஷங்கள் நம்மை அனுகாது. சந்திரபலம் குறைந்த அமாவாசை நாளில் தன்னை மறந்த நிலையில் அபிராமி பட்டர் பெளர்ணமி என கூறியதை மெய்பிக்கும் வகையில் அபிராமி அந்தாதி பாடியவுடன் வானில் நிலவினை தோற்றுவித்த சிறப்பு அபிராமி அந்தாதிக்கு உண்டு.
2. சந்திராஷ்டம தினத்தில் சந்திர ஸ்தலமான திருப்பதி, குணசீலம் ஆகிய கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்வது சந்திராஷ்டமத்தில் தொல்லைகள் குறைவதோடு மிகச்சிறந்த சாதனைகள் செய்ய ஏற்ற தினமாக மாறிவிடும்.
3. சந்திராஷ்டம தினத்தில் சந்திரனின் காரகம் பெற்ற உப்பு, அரிசி ஆகிய பொருட்களை தானமாக வழங்குவது சந்திராஷ்டம தோஷத்தை குறைக்கும்.
4. கடலும் கடல் சார்ந்த இடமுமான சந்திரனின் காரகம் பெற்ற கடற்கரையில் காற்று வாங்குவது மனதுக்கு அமைதி தருவதோடு சந்திராஷ்டம தோஷமும் நீங்கிவிடும்.
5. சந்திராஷ்டம தினத்தில் குருவின் ஸ்வருபமான பிராமணர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஜோதிடர்களுக்கு வெற்றிலை பாக்குடன் இயன்ற அளவு தாம்பூலம் அளிப்பது.
6. வினாயகர், அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேக பொருளாக வழங்கினால் சந்திராஷ்டம கெடுபலன்கள் நேராது.
7. சந்திரன் விருச்சிகத்திலிருந்து தனுசு ராசிக்கு வந்தவுடன் நீசத்தன்மை நீங்கிவிடுவதால் குருவின் ஆதிக்கம்பெற்ற விரளி மஞ்சளை கையில் காப்பாக கட்டிக்கொண்டால் சந்திராஷ்டம தோஷம் பலம் இழந்துவிடும்.
8. சந்திரன் மாத்ரு காரகன் என்பதால் சந்திராஷ்டம தினங்களில் அம்மாவிடம் ஆசிபெற்றுக்கொண்டால் சந்திராஷ்டம தோஷம் தாக்காது, அம்மா இல்லாதவர்கள் அவர்களின் படத்தின் முன் சிறிது நேரம் அமர்ந்து மெளனமாக கண்களை மூடி தியானம் செய்தால் சந்திராஷ்டம தோஷத்தை பற்றி கவலை பட வேண்டாம்.
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
9498098786












Click it and Unblock the Notifications