திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் தேரோட்டம் கோலாகலம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று வடம் பிடித்தனர்.
நெல்லை: நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பியார் கோவில் பங்குனித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. 108 வைணவத் திருத்தலங்களில் புகழ்பெற்ற இத்தலத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதி பங்குனித் திருவிழா தொடங்கியது.
நெல்லை மாவட்டம் களக்காடு அடுத்த திருக்குறுங்குடியில் அழகிய நம்பிராயர் கோயில் உள்ளது. 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றாகத் திகழும் இங்கு எம்பெருமான் நம்பிராயர், நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி என்று 5 கோலங்களில் அருள்பாலித்து வருகிறார்.
இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடப்பது வழக்கம். நடப்பாண்டுக்கான விழா கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

கருட வாகனத்தில் எழுந்தருளல்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நம்பி சுவாமிகள், சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் வைபவம் 5ம் திருநாளான கடந்த 4ஆம் தேதி நடந்தது. நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி ஆகிய 5 நம்பி சுவாமிகளும் விஷேச அலங்காரத்தில் தனித்தனி கருட வாகனங்களில் கோயிலில் இருந்து புறப்பட்டனர். ரத வீதிகள் வழியாக உலா வந்து மேற்கு நோக்கி எழுந்தருளி மகேந்திரகிரி மலையில் வாழும் தேவகந்தர்வ சித்தர்களுக்கு காட்சி அளித்தனர். அப்போது நம்பி சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.

பங்குனி தேரோட்டம்
10ஆம் நாளான நேற்று தேரோட்டம் கோலாகலத்துடன் நடந்தது. இதையொட்டி அதிகாலை நம்பி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நம்பி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தேவியர்களுடன் தேரில் எழுந்தருளியதும் காலை 9.35 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் துவக்கி வைத்தனர்.

ஆடி அசைந்த தேர்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் திரண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா, கோபாலா என்ற பக்தி முழக்கத்துடன் திருத்தேரை இழுத்தனர். விழாவையொட்டி திருத்தேர் பல வண்ண துணிகளாலும், பூக்களாலும் கண்களை கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரதவீதிகளை சுற்றி வந்து தேர் நிலைக்கு வந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருக்குற்றாலநாதர் கோவில்
தேனி, கம்பம், ராஜபாளையம், விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரோட்டத்தை தரிசனம் செய்தனர். இதேபோன்று குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோவில் சித்திரை விசு திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
படங்கள்: யு. காதர் மஸ்தான்












Click it and Unblock the Notifications