தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் கோலாகலம்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையாருக்கும் பெரியநாயகி அம்மனுக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
தஞ்சாவூர்: மாமன்னன் முதலாம் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் இன்றைக்கும் தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றி கொண்டிருக்கிறது. பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருக்கல்யாணம் தஞ்சை பெரியகோவிலில் நேற்று எளிமையான முறையில் நடைபெற்றது.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்று வருகிறது.
திருமண தோஷமுடையவர்கள் தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகவும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஆண்டுதோறும் திருக்கல்யாண நாளில் ஏராளமான பக்தர்கள் பழங்கள், குங்குமம், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்ய சரடு, வெற்றிலை சீவல் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி திருக்கல்யாண வைபோகத்தில் வழக்கமாக பங்கேற்பார்கள்.
கொரோனா தொற்று காரணமாக தற்போது கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
நேற்றைய தினம் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் புதன்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் பக்தர்கள் இன்றி மிக எளிமையாக திருக்கல்யாணம் நடைபெற்றது. பழங்கள், குங்குமம், மஞ்சள்கிழங்கு, மஞ்சள் திருமாங்கல்ய சரடு, வளையல், சீப்பு, குங்குமசிமிழ், கண்ணாடி, ரிப்பன், இனிப்பு, பூ, வெற்றிலைபாக்கு, சீவல், ஜாக்கெட் பிட் போன்ற சீர்வரிசை பொருட்கள் சாமி அம்மனுக்கு படைக்கப்பட்டன.
மேள, தாளங்கள் முழங்க பெருவுடையாரிடம் இருந்து திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார் எடுத்து பெரியநாயகி அம்மனுக்கு அணிவித்தார். இதையடுத்து பெருவுடையார்- பெரியநாயகி அம்மன் திருக்கல்யாண கோலத்தில் காட்சி அளித்தனர்.