திருவண்ணாமலை தீபத்திருவிழா 2019: துர்க்கையம்மன் உற்சவம் தொடங்கி சண்டிகேஸ்வரர் வரை கோலாகலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபத்திருவிழா 1ஆம்தேதி தொடங்க உள்ள நிலையில் நாளை துர்க்கையம்மன் உற்சவம் நடக்கிறது.
திருவண்ணாமலை: உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்க உள்ளது. சிவ பெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் கார்த்திகை மகாதீப திருவிழா வருகிற 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை யொட்டி வியாழக்கிழமையன்று துர்க்கையம்மன் உற்சவம் நடைபெற உள்ளது. இரவு சுமார் 8.30 மணியளவில் துர்க்கையம்மன், காமதேனு வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது.
சனிக்கிழமையன்று பிடாரியம்மன் உற்சவம் நடக்கிறது. அன்று அம்மன் சிம்ம வாகனத்தில் வீதிஉலா நடைபெற உள்ளது. 30-ந்தேதி விநாயகர் உற்சவம் நடக்கிறது. அப்போது விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி போன்றவை செய்யப்பட்டு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் வீதிஉலா வருகின்றனர்.

டிசம்பர் 1ஆம் தேதியன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து 7.05 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழா நடைபெறும் நாட்களில் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளின் வீதி உலா நடைபெற உள்ளது.

டிசம்பர் 1ஆம் தேதியன்று கொடியேற்றத்தை தொடர்ந்து கொடியேற்றத்தை தொடர்ந்து காலையில் வெள்ளி விமானங்களில் அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன், விநாயகர், முருகர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது. இரவில் மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, ஹம்சம், சிம்ம வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி ரதம் வருகிற 6ஆம்தேதி வெள்ளிக்கிழமை இரவு நடக்கிறது. அன்று காலையில் 63 நாயன்மார்கள் வீதி உலா நடக்கிறது.

7 ஆம் சனிக்கிழமை மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. காலை 7.05 மணிக்கு மேல் 8.05 மணிக்குள் தேராட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேரும், அடுத்து முருகர் தேரும் வலம் வரும். தொடர்ந்து பெரியதேர் ரத வீதிகளில் வலம் வரும். இதில் ஆண்கள் ஒருபுறமும், பெண்கள் ஒருபுறமும் நின்று தேர் வடம் பிடித்து இழுப்பார்கள். பெரிய தேர்நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேர் வலம் வரும். அந்த தேரை பெண்கள் மட்டுமே இழுத்து செல்வது சிறப்பம்சம். அதைத் தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேர் வலம் வரும்.

தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் டிசம்பர் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அன்று காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இறுதியாக 14ஆம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறும். அன்று மாலை சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதிஉலா வருகிறார்.












Click it and Unblock the Notifications