திருக்கார்த்திகை தீப திருவிழா : திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த ஐந்து தேர்கள்
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான அருணாச்சலேஸ்வரர் தேரோட்டம் இன்று நடைபெற்றது.
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தினமும் திருவிழா தான் என்றாலும், கார்த்திகை மாதத்தில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா தான் அனைத்திற்கும் மகுடம் சூட்டுவதாக இருக்கும். கார்த்திகை மாதம் என்றாலே, நம் நினைவில் சட்டென்று நிழலாடுவது, அருணாச்சலேஸ்வரர் கோவிலும், கிரிவலமும், அங்கு ஈசனே மலையாக வீற்றிருக்கும் திருவண்ணாமலை குன்றின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபமும் தான்.
பத்து நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வே ஏழாம் நாள் நடைபெறும் அருணாச்சலேஸ்வரர் தேரோட்டமும், பத்தாம் நாளன்று மாலை வேளையில் மலையின் மீது ஏற்றப்படும் மஹா தீபம் தான். இந்த நிகழ்வுகளைக் காண்பதற்காகவே லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் தங்கியிருந்து இரண்டு நிகழ்வுகளையும் தரிசித்துவிட்டு செல்வதுண்டு.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று பஞ்சமூர்த்திகளின் தரிசனத்துடன், கொடியேற்றப்பட்டு அதிகாரபூர்வாக தொடங்கியது. திருவண்ணாமலையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தாலும், அன்றிலிருந்து திருவண்ணாமலையே பக்தர்களின் கூட்டத்தால் அலைமோதுகிறது.
கார்த்திகை தீபத்திருவிழாவின் 4ஆவது நாளான கடந்த புதனன்று இரவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் பிள்ளையார், வெள்ளி மயில் வாகனத்தில் சுப்ரமணியர், வெள்ளி கற்பகவிருட்ச வாகனத்தில் உண்ணாமுலை அம்மன் உடன் அண்ணாமலையார், வெள்ளி காமதேனு வாகனத்தில் அன்னை பராசக்தி, வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவர்கள் மாட வீதிகளில் வலம் வந்து காத்திருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தொடர்ந்து 5ஆம் நாளான வியாழனன்று முற்பகல் 11 மணியளவில் மூஷிக வாகனத்தில் பிள்ளையாரும், கண்ணாடி ரிஷப வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரரும், அருணாச்சலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரத்திற்கு எதிரில் அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். பின்பு அங்கு சிறப்பு பூஜையும் தீபாராதனையும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து 6ஆம் நாளான நேற்று வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளி விமானத்தில் பிள்ளையார், வெள்ளி ஆச்சி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணியர், வெள்ளித் தேரில் உண்ணாமுலை உடன் அண்ணாமலையார், வெள்ளி இந்திர விமானத்தில் அன்னை பராசக்தி அம்பாள், வெள்ளி விமானத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முன்னதாக இன்று காலையில் 63 நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் நாயன்மார்களை சுமந்து மாடவீதிகளில் வலம் வந்தனர்.
தீபத்திருவிழாவின் ஏழாவது நாளான இன்று மகா தேரோட்டம் எனப்படும் 5 தேர்கள் பவனி இன்று காலை தொடங்கியது. காலை 7.05 மணிக்கு விநாயகர் தேர் ஊர்வலம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுப்பிரமணியர் தேர் மாடவீதியில் பவனி வந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுந்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர்கள் பவனி வந்தது. மதியம் 2 மணி அளவில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் அருள்பாலிக்கும் பெரிய தேர் எனப்படும் மகா ரதம் ஊர்வலம் நடைபெறுகிறது. மகா ரதம் நிலையை அடைந்ததும் பராசக்தி அம்மன் புறப்பாடு நடைபெறும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து செல்வது அதன் தனிச்சிறப்பாகும். தேரோட்டத்தின் நிறைவாக சண்டிகேஸ்வரர் தேர் பவனி நடைபெறும்.
ஐந்து தேர்கள் பவனி வந்த பின்னர் பிள்ளை வரம் வேண்டி பிள்ளை பெற்ற பக்தர்கள் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். தேரோட்டத்தை தரிசிப்பதற்காகவே லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். தேரோட்டத்தை முன்னிட்டு சுமார் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.