திருமண தடையா? - வைகாசி தேய்பிறை சஷ்டியில் முருகனை வழிபடுங்கள்
வைகாசி மாத தேய்பிறை சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களுக்கு நெடு நாட்களாக திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு தங்கள் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள்.
மதுரை: வைகாசி மாதம் முருகனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் தேய்பிறை சஷ்டியில் விரதம் இருந்து முருகனையும் சுக்கிரனையும் வணங்க தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்.
சூரியன் ரிஷப ராசியில் பிரவேசிக்கும் காலம் வைகாசி மாதம். ரிஷப ராசி என்பது நவக்கிரகங்களில் சுக்கிர பகவானுக்குரிய ராசியாக இருக்கிறது. இன்று வைகாசி தேய்பிறை சஷ்டி சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமை தினத்தில் வருவதால் இந்த தினத்தில் சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடுவர்களுக்கு சுக்கிர பகவானின் அருளும் சேர்ந்து கிடைக்கும். செல்வ சேர்க்கை அதிகரிக்கும்.
வைகாசி மாத தேய்பிறை சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு திருமண தடைகள் நீங்கி மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமையும். செய்யும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகள் உண்டாகும். பொருளாதார கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். எதிரிகள் தொல்லை ஒழியும்.

களத்திர தோஷம்
களத்திர ஸ்தானம் என்பது லக்னத்திற்கு 7வது இடத்தைக் குறிக்கும். இந்த 7வது வீடு பாவக் கிரகங்களால் பாதிப்படைந்து இருக்கக்கூடாது.
லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தாலோ அல்லது சேர்ந்திருந்தாலோ இந்த அமைப்பு கொண்ட ஜாதகம் களத்திர தோஷ ஜாதகம் ஆகும்.

திருமணம், புத்திரபாக்கியம் தடை
ஜாதகத்தில் லக்னத்திற்கு 4ஆம் இடத்தில் சனி, செவ்வாய், ராகு அல்லது கேது சேர்ந்திருந்தாலும், 2, 7ஆம் இடத்து அதிபதிகளும், சுக்கிரனும் கூடி பாவக் கிரகங்களுடன் சேர்ந்து 6, 8, 12-ம் இடத்தில் இருந்தாலும் களத்திர தோஷமாகும். களத்திர தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். சுக்கிரன் சந்திரன் 7ஆம் வீட்டில் இணைந்திருந்தால் திருமணம் நடப்பது சந்தேகம்.நடத்தால் புத்திர பாக்கியம் தடை ஏற்படும்.

குடும்ப கட்டம் சரியில்லையே
திருமணம் தாமதம் ஆவதற்கு சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தாலோ, களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் கடுமையாக பாதிக்கபட்டு இருந்தாலோ ஜாதகருக்கு திருமணம் வாழ்க்கை கிடைப்பதில் தடையோ தாமதமோ ஏற்படும். ஒருவேளை ஜாதகருக்கு திருமண வயது வரும் பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் திருமணம் தாமதம் ஆக வாய்ப்பு உண்டு.

முருகனை வழிபடலாம்.
தமிழ் மாதங்களில் இரண்டாவதாக வருகின்ற வைகாசி மாதம் ரிஷப மாதமாகும். இது சுக்கிரனுக்கு உரிய மாதம். விசாகன் எனும் அரக்கனை இம்மாதத்தில் முருகப்பெருமான் வதம் செய்ததால் இது வைகாசி மாதம் என அழைக்கப்படுகிறது. முருகப்பெருமானை வழிபடுவதற்கும், அவருக்கு விரதமிருப்பதற்கும் கார்த்திகை மாதம் போலவே வைகாசி மாதமும் ஒரு சிறந்த காலமாக இருக்கிறது.

முருகன், சுக்கிரன் அருள்
வைகாசி மாதத்தில் வருகின்ற வைகாசி தேய்பிறை சஷ்டி அன்று முருகப் பெருமானுக்கு விரதமிருப்பது நன்மை உண்டாகும். இன்றைய தினம் வைகாசி தேய்பிறை சஷ்டி சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமை தினத்தில் வருகிறது. எனவே இந்த தினத்தில் சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடுவர்களுக்கு சுக்கிர பகவானின் அருளாசிகளையும் சேர்த்து பெற முடிகிறது.

முருகன் வழிபாடு
வைகாசி மாத தேய்பிறை சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டு பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி, கேசரி அல்லது ஏதேனும் இனிப்புகளை நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை பாடி முருகனை வழிபடலாம்.

சஷ்டி விரதம்
அன்றைய தினம் உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும். மேலும் நவகிரக சந்நிதியில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். இந்த விரதம் இருந்தால் திருமண தடை நீங்கி மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள். செய்யும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகள் உண்டாகும்.












Click it and Unblock the Notifications