வைகாசி விசாகம் 2020: முருகனுக்கு விரதமிருந்தால் செவ்வாய் தோஷம் நீங்கும்
செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் அவர்கள் யோகக்காரர்கள்தான். நல்ல வேலை, வருமானம் அமையும்.
சென்னை: செவ்வாய் பகவானை தோஷ காரகனாகத்தான் பார்க்கிறார்கள். செவ்வாய் யோக காரகன். தைரியகாரகன், சகோதரகாரகன், செவ்வாயின் யோகம் ஒருவருக்கு கிடைத்து விட்டால் தசாபுத்தியும் சரியாக அமைந்து விட்டால் அவர் பதவி பட்டங்கள் பெற்று வாழ்வார். செவ்வாய் தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வைகாசி விசாகம் நாளில் விரதம் இருந்து முருகனை வணங்கினால் தோஷங்கள் நீங்கும்.
வைகாசி விசாகம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் செவ்வாய் பகவானின் அதிபதியும் தமிழ் கடவுளுமான முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு. திருமணமாகி நீண்ட நாட்கள் குழந்தை இல்லாத தம்பதிகள் விசாகத்தில் விரதம் இருந்து முருகனை மனதார வணங்கினால் அடுத்த வைகாசி விசாகத்திற்குள் புத்திரபாக்கியம் கிடைத்து விடும் என்பது நம்பிக்கை.
முருகப் பெருமானுக்கு விரதமிருந்து மனமுருகி வேண்டிக் கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது உறுதி. குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டால், அடுத்த வருடம் வைகாசி விசாகத்திற்குள் மடியில் குழந்தை தவழுவது உறுதி.

செவ்வாய் வலிமை காரகன்
செவ்வாய் பகவான் மங்களகாரகன். செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் வலிமை பெற்றிருந்தால் ஏதாவது ஒரு வேலையை செய்து சம்பாதித்துக்கொண்டு இருப்பார். அண்ணன் தம்பிகளின் உதவி தவறாது கிடைக்கும். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலோ, பத்தாம் வீட்டில் திக் பலம் பெற்றிருந்தாலோ எந்த தொழில் செய்தாலும் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.
தமிழ்நாட்டையும் கேரளா மாநிலத்தையும் இயக்கும் கோள் செவ்வாய். எனவேதான் இந்த இரு மாநிலத்தவர்களும் எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

புகழ் செல்வாக்கு தரும் செவ்வாய்
செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று கேந்திரத்தில் அமர்ந்தால் ருசக யோகமாக அமையும். புகழோடு செல்வம் செல்வாக்கும் அதிகரிக்கும். ஜாதகத்தில் செவ்வாய் சந்திரனோடு சேர்ந்தால் சந்திரமங்கள யோகம் கூடி வரும். குருவோடு செவ்வாய் சேர்ந்தால் குரு மங்கள யோகமும், சுக்கிரனோடு செவ்வாய் சேர்ந்தால் பிருகு மங்களயோகமும் அமையும்.

வீடு மனை வண்டி வாகனம்
சந்திரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருப்பது சந்திர மங்கள யோகம். வீடு மனை, செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். பூமி, மனை சேர்க்கை அதிகரிக்கும். குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருப்பது குருமங்களயோகம் இதனால் வீடு, மனை, வண்டி, வாகன யோகம், நீண்ட ஆயுள் அமையும்.

செல்வ வளம் தரும் செவ்வாய்
செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை பிருகு மங்கள யோகம். அதுவும் கேந்திர ஸ்தானங்களான 4,7,10ஆம் இடங்களில் செவ்வாய் சுக்கிரன் சேர்ந்திருந்தால் சகல வளங்களும் பூரணமாக கிடைக்கும். தலைமை தாங்கும் பண்பும், தனி திறமையும் சேர்ந்திருக்கும். அரசு துறையில் வேலை அமையும். ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்ந்திருக்கப் பெற்றவர்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு போய் வணங்கி வர பாதிப்புகள் நீங்கும்.

செவ்வாய் அதிபதி முருகன்
செவ்வாய் கிரகத்தின் அதிபதி முருகப்பெருமான். செவ்வாய் கிழமை விரதம் இருந்து முருகனை வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும், சகோதரர்கள் ஒற்றுமை அதிகரிக்கும். வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, சஷ்டி விரதம், கார்த்திகை சோமவார நாட்களில் முருகப்பெருமானை வணங்க வேண்டும்.

திருமண தடை நீங்கும்
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் நவகிரகத்தில் செவ்வாய் பகவானுக்கு செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரையில் பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். திருமணம் ஏற்படுவதில் இருந்த தடைகள் நீங்கும். பவள மோதிரம் அணியலாம். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கலாம். தினசரி கந்தர் சஷ்டி கவசம் படிக்க அரசு வேலை வாய்ப்பு, நிலம்,வீடு பிரச்சினைகள் தீரும்.












Click it and Unblock the Notifications