கணவனுக்கு நீண்டஆயுளை தந்து தீர்க சுமங்கலி யோகம் தரும் வட சாவித்திரி விரதம்!
சென்னை: நாளை வியாழக்கிழமை (28/6/2018) பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டி வடசாவித்திரி விரதம் அனுஷ்டிக்கும் நாளாகும். ஆண்டுதோறும் கோடைகாலத்தில் ஆஷாட மாத பெளர்ணமியில் பெண்கள் அனுஷ்டிக்கும் வட சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்கு பூஜை செய்து சாவித்திரியை வழிபடும் நாள் இது. வடம் என்றால் கயிறு என்றும் பொருள். நம்ம ஊர்ல காரடையான் நோன்பு என அனுஷ்டிப்பதைதான் வட நாட்டில் "வட சாவித்திரி விரதம்" என அனுஷ்டிக்கின்றனர்.
வடசாவித்ரி விரதம்:
வடசாவித்திரி விரதம் என்றவுடன் இது என்னவோ வட நாட்டினர் மட்டும் கொண்டாட வேண்டிய விரதம் என நினைத்துவிடாதீர்கள். வடம் என்றால் விழுது என பொருள். ஆலமரத்தின் பலமே அதன் விழுதுகளில் தான் இருக்கிறது. அதுப்போல ஒரு பெண்ணின் பலம் அவளின் கணவனை பொருத்துதான் இருக்கிறது. இனிய கணவன் அமையவும் மாங்கல்ய பலம் பெருகவும் கன்னிப்பெண்களும் சுமங்கலி பெண்களும் ஆல மர விழுதுகளில் பூஜை செய்து அனுஷ்டிக்கும் தினமாகும்.

ஆண்டுதோறும் கோடைகால பவுர்ணமியில் பெண்கள் அனுஷ்டிக்கும் வட சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்கு பூஜை நடக்கும். சாவித்திரியை வழிபடும் நாள் இது. வட நாட்டு பெண்கள் விரதம் இருந்து ஆலமரப்பூக்களை சாப்பிடுவார்கள்.ஆண்டுதோறும் கோடைகாலத்தில் பவுர்ணமி அன்று பெண்கள் வழிபாடு நடத்தும் சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்கு பூஜை நடக்கும்.
பெண்களுக்கு மாங்கல்ய பலம் அருளும் விரதம் இது. கணவரின் ஆரோக்கியமும் ஆயுளும் சிறக்க வேண்டும் எனும் பிரார்த்தனையுடன் சுமங்கலிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். கன்னிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, வழிபடுவதால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்; மனதுக்கினிய கணவர் வாய்ப்பார்.

ஆலமரத்தின் சிறப்பு:
"ஆல்போல் தழைத்து அருகு போல்வேரோடி
மூங்கில் போல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்க"
புதுமணை புகுவிழாக்களில் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்துவதை பார்த்திருப்பீர்கள். எவ்வளவு பொருள் பொதிந்த வாழ்த்து!
ஆல மரம் போல் வேரெந்த மரமும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஆல மரம் நம்முடைய வாழ்க்கை நெறிகளையும், நாம் வாழ வேண்டிய விதத்தையும் நாம் கற்றுக் கொள்ள நமக்கு ஒரு ஆணி வேராக இருக்கிறது. ஆல மரத்தை நன்கு கூர்ந்து கவனித்த நம் பெரியோர்கள் ஆல் போல் தழைத்து என்று சொல்லி இருக்கிறார்கள் ஆஹா எவ்வளவு அருமையான சுந்தரத்தமிழ் வார்த்தை "தழைத்து" நம் நாவினால் இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே எவ்வளவு ஆரோக்கியமாக உணர்கிறோம். தழைத்தல் என்றால் பெருகுதல், செழித்து வளருதல் என பொருள். எவ்வளவு மங்கலகரமான வார்த்தைகளை நம் முன்னோர் உபயோகப் படுத்தி இருக்கின்றனர் ஆச்சரியமாக இருக்கிறது.

ஜோதிட ரீதியாக பெண்களுக்கு தீர்க சுமங்கலி தன்மையை தரும் கிரஹ அமைப்புகள்:
1.ஜோதிடத்தில் புனிதமான விஷயங்களுக்கெல்லாம் குரு பகவான் தான் காரகராவார். குருபகவானை குறிக்கும் விதமாக தான் திருமாங்கல்யம் மஞ்சள் கயிற்றில் தங்கத்தில் செய்யப்படுகிறது. வேதம் ஓதும் அந்தணர்களுக்கும் காரகர் குருபகவானே ஆகும். கணவனின் ஆயுள் நிலைக்கவும் மனைவியின் மங்கலத்தன்மை நிலைப்பதற்க்காகவும் குருவின் அருள் நிறைந்த திருமாங்கல்யம் அணியப்படுகிறது.
2.கணவன் மனைவி இருவர் ஜாதகத்திலும் லக்னம் பலம் பெற்று மனைவியை குறிக்கும் சுக்கிரனும் கணவனை குறிக்கும் மங்களன் எனும் செவ்வாயும் நல்ல நிலையில் ஆட்சி உச்சம் மூல திரிகோன பலம் மற்றும் திக் பலம் பெற்று இருக்க வேண்டும்.
3.பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் ஏழாமிடத்தோடு தொடர்பு கொண்டிருக்க கூடாது. ஏழாமிடம் சுத்தம் நன்மை பயக்கும். மேலும் ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் செவ்வாய் அசுபர்களுடன் சேர்ந்து லக்னம்,குடும்பம்,சுகம், களத்திரம், ஆயுள் மற்றும் மாங்கல்யம், அயன சயன சுகம் ஆகிய வீடுகளில் தொடர்பு பெறகூடாது.
4. லக்னம், குடும்பம், களத்திரம், ஆயுள் மற்றும் மாங்கல்யம் (1,2,7,8) ஸர்ப கிரஹங்களான ராகு கேது தொடர்பு கொள்ள கூடாது.

5.பலமிழந்த நீச சந்திரன் 6/8 வீடுகளில் தொடர்பு பெறாமல் இருக்க வேண்டும்.
6.அசுப கிரகங்கள் உச்சம் பெற்று எட்டாமிடத்தில் நிற்க கூடாது.
7. செவ்வாயும் ராகுவும் அல்லது செவ்வாயும் சனியும் சேர்க்கை பெற்று 7/8ம் வீடுகளில் நிற்க்க கூடாது.
8. இரண்டு மற்றும் ஏழாமிடங்கள் மற்றும் அதன் அதிபதியோடு உச்ச கிரஹ தொடர்புகள் இருக்க கூடாது.
இவற்றோடு ரஜ்ஜு பொருத்தம் இருக்க வேண்டும்.
ஜோதிடத்தில் ஆல மரம்:
1. பாலுள்ள மரங்களெல்லாம் சந்திரன் மற்றும் சுக்கிரனின் காரகம் பெற்றதாகும். ஆலமரத்தின் விழுதுகள் அந்த மரத்தை பல நூற்றாண்டுகளுக்கு தாங்கி நிற்கும் ஆற்றலை கொண்டது என்றால் அதில் இருந்து கிடைக்கும் மருந்தின் ஆற்றலைப்பற்றி கூறவேண்டியதில்லை. ஆலமரத்தின் விழுதுகள் ரத்தத்தை சுத்திகரிக்கச்செய்கிறது.
2. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும். தளர்ந்த மார்பகங்களை நிமிரச்செய்யும். ஆண்மை குறைபாட்டை நீக்கும். ஆலமரத்தின் விழுதின் நுனிப்பகுதியில் சிவப்பு நிறத்தில் இருப்பதை பறித்து அதை அரைத்துமார்பகத்தில் பூசி வந்தால் தளர்ந்த மார்பகம் பழைய நிலைமைக்கு திரும்பிவிடும்.
3. ஆலம் விழுது தொழு நோயை குணமாக்கும்.
4. ஆண்மைக்கோளாறுகள், குழந்தை பாக்கியம், ஜலதோஷம், இந்திரியத்தில் உயிரணுக்கள் குறைவாக இருப்பது போன்றவற்றிற்கு ஆலம் இலை மருந்தாகிறது.

5. நீரிழிவு நோய் போக்கி உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். அகத்தியர் தன் குணபாடத்தில் உடலில் உண்டான கட்டிகளுக்கு ஆல இலையை அரைத்து கட்டிகள் மீது தடவினால் கட்டி உடைந்து சீழ் வெளியேறும் என்று விளக்குகிறார்.
6.நீரிழிவு நோயாளிகளுக்கு ஆறாத புண்கள் மீது ஆலம்பாலைத் தடவி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.
7.சிறந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று, சுளுக்கு, ரத்தக்கட்டு மீதும் ஆலம் பாலைத் தடவி வந்தால் எலும்புகள் இணைவதுடன், ரத்தக் கட்டுகளையும் நீக்கும். எலும்புகள் வலிமையடையும்.
ஆலமரம் சுக்கிரனின் காரகம் பெற்றதென்றாலும் விழுதுகள் மற்றும் கயிறுகள் போன்றவை கேதுவின் காரகம் நிறைந்ததாகும். ஒருவருக்கு மாங்கல்ய பலம் நிலைக்க (திருமாங்கல்ய சரடு நிலைக்க) சுக்கிரனின் அருளோடு கேதுவின் அருள் மிகவும் முக்கியமாகும். எனவேதான் ஆலமரத்தை கேதுவின் ஆதிபத்யம் நிறைந்த மக நக்ஷத்திரகாரர்கள் வணங்க வேண்டிய விருஷமாக அமைந்திருக்கிறது போலும்.
தமிழ்நாட்டில் ஆறு பெரிய கோவில்களில் ஆலமரம் ஸ்தல விருட்சம் (மரம்) ஆக திகழ்கிறது. ஆலங்காடு, திரு ஆலம்பொழில், திரு அன்பிலாந்துறை, திரு மெய்யம், திருப் பழவூர், திரு வில்லிப் புத்தூர். இந்த ஊரில் இறைவன் இறைவி மற்றும் ஸ்தல விருஷமான ஆல மரத்தை இந்த வட சாவித்திரி விரத நாளில் வணங்கினால் மாங்கல்ய பலம் பெருகும். திருமணமாகத கன்னிப்பெண்களும் இந்த விரதத்தில் கலந்துக்கொண்டால் விரைவில் தாலிபாக்கியம் கிட்டும் என்பது நிதர்சனம்!
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
9498098786












Click it and Unblock the Notifications