விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-20: ரிஷபத்திற்கு எதிர்பாராத பணவரவு கூடவே செலவும் வரும்
விகாரி தமிழ் புத்தாண்டு சித்திரை 1ஆம் தேதி ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி, கடக லக்னத்தில் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவும் கூடவே திடீர் செலவுகளும் ஏற்படும்.
சென்னை: விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியைப் பொறுத்து 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் மாறுபடும். ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புத்தாண்டில் அஷ்டம சனியோடு குருவும் இணைவதால் எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும்.
திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு தினத்தன்று கடக லக்னம் லக்னத்தில் சந்திரன், மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய் மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு, சனி, கேது கும்ப ராசியில் சுக்கிரன், மீனம் ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
விகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27,2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
முயற்சிகளில் வெற்றி
களத்திரகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசியில் பிறந்த நீங்கள் வாழ்க்கை என்றாலே ஏற்ற இறக்கம் நிறைந்ததுதான் என்பதை உணர்ந்து இருப்பீர்கள். சோதனைகள் வந்தாலும் அமைதியை கடைபிடித்து வெற்றிக்கனியை பறிப்பீர்கள்.
இந்த புத்தாண்டு உங்கள் ராசிக்கு மூன்றாவது இடமான முயற்சி ஸ்தானத்தில் பிறக்கிறது. உங்களின் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
பணவரவு கூடவே திடீர் செலவு
தம்பதியரிடையே இருந்த கசப்புணர்வுகள் மறைந்து சந்தோஷம் அதிகரிக்கும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த புத்தாண்டில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு ஏற்படும். இந்த ஆண்டும் அஷ்டமத்து சனி தொடர்வதால் சிலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும். சிலருக்கு தூக்க குறைபாடு ஏற்படும்.
குருவின் சஞ்சாரம்
வருட ஆரம்பத்தில் அதிசாரமாக எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கும் குருவினால் பணவரவு உண்டு. தனுசு ராசியில் இருந்து படிப்படியாக வக்ரமடைகிறார். ஏழாம் வீடான விருச்சிகத்திற்கு குரு திரும்புவதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அக்டோபர் மாதத்தில் மீண்டும் நேரடியாக குரு தனுசு ராசிக்கு செல்வதால் வீண் அலைச்சல் ஏற்படும். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்பும் மரியாதையும் கூடும். சிலருக்கு பதவி உயர்வும் கூடவே சம்பள உயர்வும் கிடைக்கும். வரவே வராது என்று நினைத்திருந்த பணம் வந்து சேரும்.
பணப்பற்றாக்குறை தீரும்
இந்த ஆண்டு முழுவதும் ராகு இரண்டாவது வீட்டிலும் கேது எட்டாவது வீட்டிலும் நீடிக்கின்றனர். பணம் வந்தாலும் பற்றாக்குறை ஏற்படும்.
உடைகிற மூங்கிலாக இருப்பதை விட வளைந்து கொடுக்கிற நாணலாக இருப்பதே நல்லது என்பதை உணர்ந்தவர்கள் நீங்கள், இந்த ஆண்டில் வீடு, மனை, இடங்களை வாங்கும் போது கவனமாக இருக்கவும். அவசர முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை.
பாதிப்பு குறைய பரிகாரம்
உங்களுக்கு அஷ்டமச்சனியால் அந்தஸ்து, பதவி, கௌரவத்திற்கு பாதிப்பு வரலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை வெளிநாடு செல்வதற்கு யோகம் கூடி வரும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். எச்சரிக்கை தேவை. அட்டமச் சனியாக இருப்பதால் கணபதி, ஆனுமனை வணங்கி வெற்றிலை மாலை சாற்றலாம். சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு எள் விளக்குப் போடலாம். திருநள்ளாறு சென்று வரவும் தீமைகள் குறையும்.