2021 புத்தாண்டில் கொரோனா முடிவுக்கு வருமா? என்ன தொழில் வளர்ச்சியடையும் - பாலாஜிஹாசன் கணிப்பு
2021ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. புத்தாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும். தொழில் வளம், விவசாயம் எப்படி இருக்கும் என்று கணித்திருக்கிறார் இளம் ஜோதிடர் பாலாஜிஹாசன்
சென்னை: 2020ஆம் ஆண்டு கொரோனாவின் பிடியில் சிக்கியிருந்தது. இப்போது உருமாறிய கொரோனா பரவி வருகிறது. எட்டு மாதங்களுக்கு மேல் தொழில் வளர்ச்சி தடை பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிவரைக்கும் கொரோனாவின் பாதிப்பு இருக்கும் என்கிறார் இளம் ஜோதிடர் பாலாஜிஹாசன். 2021ஆண்டில் நாட்டில் மருத்துவ சுற்றுலா வளர்ச்சியடையும் என்றும் பெண்கள் தொடர்பான அழகு சாதன தொழில் துறை வளர்ச்சியடையும் என்றும் கணித்துள்ளார் பாலாஜிஹாசன்.
நவகிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் ராசிபலன் கணிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் பிறக்கும் போது மேஷம் ராசியில் ஆட்சி பெற்ற செவ்வாய், கடகம் ராசியில் ஆட்சி பெற்ற சந்திரன், தனுசு ராசியில் சூரியன்,புதன், மகரம் ராசியில் ஆட்சி பெற்ற சனியோடு இணைந்திருக்கும் நீச பங்கம் பெற்ற குரு என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
2020ஆம் ஆண்டில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. 2021ஆம் ஆண்டிலாவது தொழில் வளர்ச்சியடையுமா பணப்புழக்கம் நன்றாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ஆண்டில் எப்படி இருக்கும் எந்த தொழில் வளர்ச்சியடையும், எந்த தொழிலில் முதலீடு செய்யலாம் என்று கணித்துள்ளார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன்.
கொரோனாவின் பிடியில் இந்தியா
உலகமே கொரோனாவின் பிடியில் இருக்கிறது. 2021 ல் குருபகவான் கும்பத்திற்கு போகும் போதுதான் கொரோனா முடிவுக்கு வரும் பொருளாதாரத்தில் எச்சரிக்கை தேவை. கடந்த ஆண்டைப் போல இந்த பொருளாதார வளர்ச்சி குறைவுதான். இப்போது நிலம் வாங்கி முதலீடு செய்பவர்கள் யோசிக்கவும். ரியல் எஸ்டேட் தொழில் பெரிதாக வளர்ச்சி அடையாது.
விமான சேவை
2020ல் விமான சேவை முடக்கப்பட்டது. சுற்றுலா தொழில் முடங்கியது. இந்த ஆண்டு இந்திய சுற்றுலா நன்றாக இருக்கும். மருத்துவ சுற்றுலா வளர்ச்சி அடையும். மகரம் ராசிக்கு தர்ம கர்மாதிபதி யோகம் கிடைத்துள்ளது. மகரம் ராசியில் குரு, சனி சேர்க்கை ஏற்பட்டுள்ளது. மருத்துவ துறை முக்கியத்துவம் அடையும்.
சிறுதானிய உற்பத்தி
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை அதிகம் பெய்யும். நல்ல மழை விவசாயம் செழிக்கும். கோவிட் 19னால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவார்கள். சிறுதானிய உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். ராணுவத்தில் ஆயுதங்கள் உற்பத்தி அதிகரிக்கும். முப்படைகளின் பலம் அதிகரிக்கும்.
தங்கம் விலை
இரும்பு, தொழில் வளர்ச்சி அடையும். கொரோனாவினால் மூடப்பட்ட தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு செழிப்படையும். தொழிலாளர்களின் அமைப்பு சிறப்பாக இருக்கும். குருபகவான் நீசபங்கம் பெற்றிருக்கிறார். வங்கித்துறை கரன்சி துறை வளர்ச்சியடையும். தங்கம் விலை உயரும். வங்கித்துறையில் முதலீடு செய்பவர்கள் யோசித்து செய்யவும்.
உலக அழகிப்போட்டி
பெண்கள் தொடர்பான தொழில்கள் வளர்ச்சியடையும். பெண் தொழில் முனைவோர் அதிகரிப்பார்கள். அழகுத்துறை சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடையும். மிஸ் யுனிவர்ஸ், உலக அழகிப் போட்டியில் இந்திய பெண்கள் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது. தனியார் கல்லூரி நிறுவனங்கள் மூடப்பட வாய்ப்பு உள்ளது. பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருக்கும்.
விவசாய சாதனங்கள்
சனியின் பார்வையில் அதிகம் புதனும், சுக்கிரனும் இருப்பதால் ஜவுளித்துறை தொழில் குறைவாக இருக்கும். வாகன உற்பத்தி அதிகரிக்கும். விவசாயத்திற்கு உதவி செய்யக்கூடிய பொருட்கள் அதிகம் உற்பத்தியாகும். சனிபகவான் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். ராணுவத்தில் உள்ள குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. 2021ஆம் ஆண்டில் தீர்ப்புகள் விநோதமாக இருக்கும்.
இளம் நடிகர்களுக்கு பாதிப்பு
சினிமாதுறையில் புதிய ட்ரெண்ட் செட்டிங் வரலாம். புதிய ஹீரோ ஜெயிக்க வர வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் இளம் நடிகர்களுக்கு ஆபத்து உள்ளது. இந்தியாவின் கிழக்கு பகுதியில் நெருப்பினால் சேதம் ஏற்படும். 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் தோல் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்தியா நேபாளம்
இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே போர் பதற்றம் ஏற்படும். வேலை வாய்ப்பு நன்றாக இருக்கும். புதிய வேலைகள் நிறைய இளைஞர்களுக்கு கிடைக்கும். தமிழ்நாட்டிற்கு பன்னாட்டு முதலீடுகள் அதிகம் கிடைக்கும். நெருப்பு தொடர்பான விபத்துகள் அதிகம் நடைபெறும். காலமிருத யோகம் மூலம் தொழில் துறை அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.
எமன் கோவில்
ஆன்மீக வளர்ச்சி அதிகரிக்கும். எமன் கோவில் வரும். மக்கள் புதிதாக எமனை வழிபட ஆரம்பிப்பார்கள். புதிய மதம் வளர்ச்சி அடையும். ஒன்பதாம் வீட்டில் புதன் சூரியன் சேர்க்கையால் மனித உழைப்பு அதிகரிக்கும். இலங்கைக்கு அருகில் உள்ள தீவுகள் காணாமல் போகும். சுய தொழில் தொடங்குபவர்கள் அதிகரிப்பார்கள். புனர்பு தோஷம் ஏற்படுவதால் நிறைய தடைகள் ஏற்படும். பெரிய திட்டங்கள் தள்ளிப்போகும்.
வெளிநாட்டு தொழில் முதலீடுகள்
இந்த ஆண்டு பிற நாடுகளை விட இந்தியாவின் வளர்ச்சி நன்றாகவே இருக்கும். நிறைய பேருக்கு வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் அங்கேயே செட்டில் ஆக யோசிக்கவும். இப்போதைக்கு இந்தியா திரும்ப வேண்டாம்.
2021ஆம் ஆண்டு அரசு வேலை வாய்ப்புக்காக யாரும் பணம் கொடுக்க வேண்டாம். ஜூலை மாதத்திற்குப் பிறகு முடிவு செய்யலாம்.
2021ல் கொரோனா பாதிப்பு
குருபகவான் நீசமடைந்து சனியோடு இணைந்திருப்பதால் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுக்கும். 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டுக்குள் வந்து மீண்டும் பரவும். 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் குரு பகவான் கும்பத்திற்கு போகும் போதுதான் கொரோனா கட்டுக்குள் வரும். பொறியியல் படிப்புக்கும், அரசு கல்லூரிக்கும் பொது நுழைவுத் தேர்வு வரும். 2021ஆம் ஆண்டு தேர்வுகள் நடைபெற வாய்ப்புகள் குறைவுகள். ஜூன் மாதத்திற்குப் பிறகே பள்ளிகள் மெதுவாக இயங்கத் தொடங்கும்.