அசுர வளர்ச்சி.. திடீர் அதிர்ஷ்டம் - கும்பம் ராசிக்கு அள்ளி கொடுக்கும் சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி பலன்கள்: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி இன்று (மார்ச் 29 ஆம் தேதி) சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.
நீதிமான், கர்மக்காரகன், முடவன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கும் ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். கும்ப ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்பட போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம் - கும்ப ராசிக்கு ஜென்ம சனி விலகி, சனி பகவான் இரண்டாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார்.ஜென்ம சனி விலகுவதால் மன நிம்மதி கிடைக்கும். சனி இரண்டாம் இடத்துக்கு வருவதால் பண புழக்கத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. ஜென்ம ராசியில் ராகு வருவதாலும், குரு பார்வை ராகு மீது நேரடியாக வருவதாலும் அசுர வளர்ச்சி பெற போகிறீர்கள்.
தொழில்
அலைச்சல், ஞாபக மறதியால் அவதிப்பட்ட நீங்கள் அந்தப் பிரச்னைகளில் இருந்து விலகி நிம்மதியாக இருக்கும் பொன்னான காலம். பொருளாதாரம் சீராக இருக்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். நகை, பாத்திரம், மளிகை, தள்ளுவண்டி உள்ளிட்ட அன்றாட பயன்பாடு சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்போருக்கு நல்ல ஏற்றம் உண்டு.
சொந்த வீடு
உங்களின் தாயின் சொற்களை கேட்டு நடந்தால் எல்லாவற்றிலும் வெற்றிகள் குவியும். நீண்ட காலமாக உள்ள சொந்த வீடு கனவு நிறைவேறும். வீடு, நிலம், நகை உள்ளிட்ட ஆபரணங்கள் சேரும் காலமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். கடன் சுமை குறையும்.
சுப காரியம்
சுப காரியங்கள் நிறைவேறும். திருமணம் ஆகாமல் அவதிப்படுவோருக்கு இந்த காலத்தில் திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக குழந்தை இல்லாத தம்பதிக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. உடல்நலத்தில் இருந்த பிரச்னைகள் விலகி ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
லாபம்
தொட்டது துலங்கும் அற்புதமான காலம். நீங்கள் எதிர்பாராத நேரத்தில் கூட திடீர் அதிர்ஷ்டம் வந்து உங்களை திக்கு முக்காட செய்யும். தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு இது சரியான காலம். முதலீடு மூலம் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
மதிப்பெண்
தொழில், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் 100க்கு 80 சதவீதம் சிறப்பாக இருக்கும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்
குடும்பத்தில் அவ்வப்போது பிரச்னைகள் வந்து நீங்கும். முகம், பல், மூக்கு ஆகியவற்றில் சின்ன சின்ன பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. வார்த்தைகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் விரயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே பண வரவு இருக்கும்போதே சேமிப்பிலும் கவனம் செலுத்துவது நல்லது.
பரிகாரம், வழிபாடு
பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சென்று வழிபடுவது தடைகளை நிவர்த்தி செய்து நல்ல பலன்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications