சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-23: இந்த 4 ராசிக்காரர்களில் யாருக்கு ராஜயோகம் தெரியுமா
சனிப்பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி டிசம்பர் 27ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷம் முதல் கடகம் வரை நான்கு ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம
மதுரை: சனி பகவான் ஜீவன காரகன், ஆயுள்காரகன். வாக்கியப்பஞ்சாங்கப்படி சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். மகரம் ராசியில் அமரும் சனிபகவானால் நாட்டில் தொழில் வளர்ச்சியடையும். தொழிலாளர்களின் வேகம் அதிகரிக்கும். பெரும்பாலோனோருக்கு அசைவ உணவு மீது ஆர்வம் அதிகரிக்கும். அநேகம் பேருக்கு உடல் நலக்குறைவு வரலாம் எச்சரிக்கை தேவை. இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பாதிப்பு வரும் பலன்கள் என்ன கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சனி பகவான் ஒருவரின் ஜாதகத்தில் பலமாக இருக்க வேண்டும். அவர் பலவீனமாக இருந்தால் தொழில், ஜீவனம் ஆயுள் சுமாராகவே இருக்கும். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் சனி நன்றாக இருக்க வேண்டும். அரசியலில் ஜெயிக்க சனியின் ஆதரவு அவசியம் தேவை. அரசியலோ, நீதிபதியோ தலைமைப்பதவி கிடைக்க சனியின் அருள் தேவை சனிபகவான் அருள் இருந்தால் மக்கள் ஆசியோடு தலைவராகலாம்.
சனிபெயர்ச்சி என்றாலே பலருக்கும் பயம்தான் காரணம் சனிபகவான் ஏதாவது கெடுதல் வந்து விடுமோ என்ற பயம்தான்.
சனிபகவான் நல்லவர்களுக்கு நல்லதே செய்வார். மகரம் ராசி சனியின் ஆட்சி வீடு. மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரும் சனிபகவான் 27-12-2020 முதல் 19-12-2023 வரை அங்கேயே அமர்ந்திருப்பார். இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
சனிபகவான் பத்தாவது வீட்டில் சஞ்சரிப்பதால் நல்லதே நடைபெறும். உத்யோகத்தில் உத்யோக ஸ்தான அதிபதி அமர்வதால் வேலையில் கவனம், விழிப்புணர்வும் தேவை. தர்மகர்மாதிபதி யோகம் கிடைக்கப் போகிறது. தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்க உங்களுடைய பயணத்தை ஆரம்பிப்பீர்கள். நான்காம் வீட்டை சனிபகவான் பார்வையிடுவதால் குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். வீடு மாறுவீர்கள். படிப்பில் அக்கறை காட்டுங்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையை சில பிரச்சினைகள் வரலாம். சந்தோஷம் அதிகரிக்க விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. 12ஆம் வீட்டினை சனிபகவான் பார்வையிடுவதால் உறக்கத்தில் சில பிரச்சினைகள் வரலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். காரிய ஸ்தானத்தில் காரிய அதிபதி அமர்வதால் கவனம் தேவை. உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நீங்க உண்டு உங்க வேலை உண்டு என்று இருங்கள். உயர்பதவிகளில் இருப்பவர்கள், அரசியல் தலைவர்கள் கவனமாக இருக்கவும். சனிபகவான் உங்களுக்கு யோகமான நட்சத்திரங்களான உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களில் பயணிக்கப் போகிறார். உங்களின் வளர்ச்சி அதிகரிக்கும். இனி உங்களின் பயணத்தில் கவனம் தேவை. சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள். விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடுங்கள் பாதிப்புகள் குறையும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் யோகாதிபதி. மிகப்பெரிய யோகத்தை தரக்கூடிய சனிபகவான் 9ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதுநாள் வரை பட்ட அவமானங்கள் அசிங்கங்கள் முடிவுக்கு வரும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெற்றவர்களின் ஆசி கிடைக்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பண வருமானம் அதிகரிக்கும். குடும்ப கஷ்டத்திற்காக அடகு வைத்த நகைகளை மீட்டெடுப்பீர்கள். ஆறாம் வீடான ருண ரோக கடன் பிரச்சினை தீரும். சனி பகவான் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். வீடே சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். திருமணம், சுப காரியம் கை கூடி வரும். பிள்ளைகளுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். சிவன் ஆலயங்களில் நடைபெறும் பிரதோஷ நேரத்தில் சென்று பாலபிஷேகத்தில் பால் வாங்கிக் கொடுக்கலாம். பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.
மிதுனம்
சனிபகவான் மிகப்பெரிய யோகாதிபதி. கண்டகச் சனியாக இருந்த சனிபகவான் இனி அஷ்டமத்து சனியாக எட்டாவது வீட்டில் அமர்வதால் உங்களுக்கு பயம் வரலாம். அச்சப்படத்தேவையில்லை. அஷ்டமத்தில் சனி வரும் காலத்தில் அந்நிய தேசத்தில் புகழ் பெறுவான் என்ற பாடல் அதை நிரூபிக்கும். சனிபகவான் தன்னுடைய பாதிப்புகளை குறைத்துக்கொள்வார். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் சேமிப்பு அதிகரிக்கும். சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு இடம் மாறும் சந்தர்ப்பம் அமையும். மனரீதியாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி உறவில் இருந்த கசப்புணர்வு மறையும். சண்டை சச்சரவுகள் நீங்கும். வேலையில் நிம்மதி கிடைக்கும். கவலைகள் மறையும். எட்டாம் வீட்டு அதிபதி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகத்தை தேடி வந்து கொடுக்கும். மாணவர்களுக்கு சில நேரங்களில் ஞாபகமறதி வரும் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் இரவு நேர பயணங்களை தவிர்த்து விடுங்கள். உடல் ஊனமற்றவர்களுக்கு உதவுங்கள் அஷ்டமத்து சனி யோகத்தை கொடுக்கும்.
கடகம்
கடகம் ராசிக்காரர்களே சனிபகவான் கண்டகச்சனியாக ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மகரம் ராசியில் அமர்ந்து சனிபகவான் ஏழாவது பார்வையாக உங்கள் ராசியை பார்வையிடுகிறார். உணவு விசயத்தில் கவனமாக இருக்கவேண்டும். என்ன மாதிரியான நோய் வந்திருக்கிறது என்று தெரியாமலேயே நீங்கள் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருப்பீர்கள் உங்களின் பிரச்சினை தீர தண்ணீர் தானம் கொடுக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையை மூன்றாம் நபரை தலையிட விட வேண்டாம். கூடா பழக்கம் வரும். பணம் நகை திருடு போக வாய்ப்பு உள்ளது. முதலீடுகளில் கவனம் தேவை. அகலக்கால் வைக்க வேண்டாம். கூட்டுத்தொழிலில் பிரச்சினைகள் வரும் எச்சரிக்கை தேவை. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். சனிபகவான் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. அது தவிர உங்க ராசிக்கு நான்காம் வீடு, ஒன்பதாம் வீடுகளின் மீது விழுகிறது. பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்க சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபடுங்கள் பாதிப்புகள் குறையும்.