செப்டம்பர் மாத ராசி பலன் 2022.. இந்த 3 ராசிக்காரர்களின் வீடு தேடி வந்து அதிர்ஷ்டம் கதவை தட்டும்!
சென்னை: செப்டம்பர் மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களின் வாழ்வில் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. திடீர் வருமானம் வந்து திக்குமுக்காட வைக்கப்போகிறது. இந்த மாதத்தில் சூரியன் சிம்மம், கன்னி ராசிகளில் பயணம் செய்வார். புதன் உச்சம் பெற்று கன்னி ராசியில் பயணம் செய்வார். மாத பிற்பகுதியில் சூரியனும் உச்சம் பெற்ற புதனும் இணைந்து புதாத்திய யோகத்தை தரப்போகின்றனர். செப்டம்பர் மாதத்தில் கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
செப்டம்பர் மாதம் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் ரிஷப ராசியில் செவ்வாய், சூரியன் 17ஆம் தேதி கன்னி ராசிக்கு சென்று உச்சம் பெற்ற புதனோடு இணைகிறார். சுக்கிரன் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். குரு மீன ராசியிலும் சனி பகவான் மகர ராசியிலும் வக்ரமடைந்து பயணம் செய்கின்றனர்.
கன்னி ராசியில் உச்சம் பெற்றிருக்கும் புதன் செப்டம்பர் 10 ஆம் தேதி வக்ரமடைகிறார். மாத இறுதியில் சுக்கிரன் கன்னி ராசியில் புதன், சூரியனுடன் இணைகிறார். இது புதுவித யோகத்தை தரப்போகிறது. நவகிரகங்களினால் கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
செப்டம்பர் மாத ராசி பலன் 2022.. கஜகேசரி யோகம் போல கர்ஜனை செய்யப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது. இடமாற்றங்கள் ஏற்படும். ராசிநாதன் புதன் ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்துள்ளார். இது உங்களுக்கு பத்ர யோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாத பிற்பகுதியில் சூரியனும் இணையப்போவதால் புதாதித்ய யோகத்தை தரப்போகிறது. செவ்வாய் பகவான் பாக்ய ஸ்தானத்தில் இருப்பதால் நன்மைகள் நடைபெறும். நிறைய நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கப்போகிறது. நல்ல வேலையில் இருப்பவர்கள் இதே வேலையில் தொடருங்கள் புதிய வேலை மாற்றத்திற்கு முயற்சிகள் வேண்டாம்.
திருமணம் சுபகாரியம்
குடும்பத்தில் இருந்த சின்னச் சின்ன பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. சுக்கிரன் சூரியன் உடன் மாத முற்பகுதியில் இருப்பதால் திருமண முயற்சிகள் கை கூடி வரும். குரு பார்வை இருப்பதால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. வரன் பார்க்கலாம். குரு பலன் வந்து விட்டது. புத்திரபாக்கியம் கை கூடி வரப்போகிறது. தடைகளைத் தாண்டி முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு நல்ல மாதம் நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்கும். புதிய முயற்சிகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் கிரகங்கள் சாதகமான நிலையில் உள்ளன. ராகு கேதுவினால் மனகுழப்பங்கள் வந்து நீங்கும். சனிபகவான் பார்வை பத்தாம் வீட்டில் இருப்பதால் வேலையில் பளு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்வீர்கள். அலுவலகத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. விட்டுக்கொடுத்து செல்லுங்கள். இந்த மாதம் பொறுமையும் நிதானமும் அவசியம்.
நிதானம் தேவை
குடும்பத்தில் கார சார விவாதங்கள் வந்து செல்லும். அஷ்டம செவ்வாயினால் பொறுமையாக விட்டுக்கொடுத்து செல்லுங்கள். எதையும் தவிர்த்து விடுங்கள். காதல் பிரச்சினையில் வரும் மோதல் ஏற்படும். பிரச்சினைகளை விட்டு விலகி விடுங்கள். வண்டி வாகனங்கள் வாங்குவதற்கு முயற்சி செய்வீர்கள் எனவே உங்களுடைய வாழ்க்கை துணையின் பெயரில் வாங்குவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். சின்னச் சின்ன நோய்கள் வந்து நீங்கும். கூர்மையான ஆயுதங்கள், மின்சாதன பொருட்களை கையாளும் போது கவனம் அவசியம். மாணவர்கள் பொறுமையாக யோசித்து முடிவு செய்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் ராசி நாதன் ஏழாம் வீட்டில் பயணம் செய்வது சிறப்பு. ராசிநாதன் பார்வையும் கிடைக்கிறது. வேலையில் புரமோசன் கிடைக்கும் பத்தாம் வீட்டில் சூரியன் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் சாதகமாக உள்ளது. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திடீர் வருமானம் வரும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும்.
வெற்றிகரமான மாதம்
திருமண முயற்சிகள் கை கூடி வரும். காதல் இனிக்கும் உறவினர்கள் ஆசியுடன் திருமணத்தில் முடியும். புது வீடு குடியேற கிரகப்பிரவேசம் செய்யலாம். மாணவர்களுக்கு இது அற்புதமான மாதம். அரசு தேர்வு எழுதுபவர்களுக்கு இது சாதகமான மாதம். கடன் பிரச்சினை குறையும். பெண்களுக்கு பொன்நகை, ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிவர்த்தி அடையும். நீங்கள் நினைத்த காரியம் கைகூடி வரும் மாதமாக செப்டம்பர் மாதம் அமைந்துள்ளது.