திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா - ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி
திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா வாக்கியப்பஞ்சாங்கப்படி டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆன்லைனில் பதிவு செய்து அடையாள அட்டையை கொண்டு வருபவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
சென்னை: திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா வாக்கியப்பஞ்சாங்கப்படி டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பக்தர்கள் www.thirunallarutemple.org என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து அடையாள அட்டையை கொண்டு வருபவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப் பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு வரும் டிசம்பர் 27-ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் அர்ஜுன் சர்மா தலைமையில் ஆலய நிர்வாக அதிகாரி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் திருநள்ளாறு தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா கூறியதாவது வரும் டிசம்பர் 27-ஆம் தேதி அன்று நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி விழாவிற்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆன்லைன் மூலமாக பதிவு செய்து அடையாள அட்டையுடன் வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
உள்ளூர் மற்றும் வெளியூர் சேர்ந்த பக்தர்கள் www.thirunallarutemple.org என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து அடையாள அட்டையை கொண்டு வருபவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறிய ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா, சனிப்பெயர்ச்சி முந்தைய வாரம் முதல் சனிப்பெயர்ச்சி தொடர்ந்து 4 வாரம் என ஆறு வாரங்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் செய்து தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் வரும் பக்தர்கள் அனைவரும் வெப்பமானி பரிசோதனைக்கு பின்னரே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அறிகுறிகளுடன் வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா தெரிவித்தார்.
நளன் தீர்த்த குளத்தில் புனித நீராட அனுமதிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications