திருச்செந்தூர் மாசி திருவிழா 2021 இன்று கொடியேற்றம் - 26ல் தேரோட்டம், 27ல் தெப்ப உற்சவம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. வரும் 26ஆம் தேதி தேரோட்டமும், 27ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணிய சவாமி கோவில். இங்கு ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடந்து வருகின்றன. மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழா தேரோட்டத்துடன் பன்னிரெண்டு நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்திலும் சுவாமி அம்பாள் எழுந்தருளி வீதி உலா வருவதைக் காண கண் கோடி வேண்டும்.
மாசித்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நள்ளிரவு 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. பின்னர் அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் மாசித்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் மாசி திருவிழா
மாசி மாதம் பௌர்ணமியும் மகம் நட்சத்திரமும் கூடி வரும் நாளில் தேரோட்டம் நடைபெறும். "கயிலை மலையனைய செந்திற்பதிவாழ்வே" என திருச்செந்தூரில் வாழ்வது கயிலாய வாழ்விற்குச் சமமானது என்று அருணகிரியார் போற்றிப் புகழ்கிறார். அப்புகழ் பெற்ற திருச்செந்தூரில் மாசித்திருவிழாவில் முருகப் பெருமானை தரிசனம் செய்வது மனதிற்கு நிம்மதியையும் நிறைவையும் தரக்கூடியது.
தங்க மயில் வாகனம்
5ஆம் நாள் திருவிழா நாளன்று 21ஆம் தேதியன்று மெல்லகோவில் குடவரவாயில் தீபாரதனையும் சுப்ரமணிய சுவாமி தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் மாடவீதிகளில் உலா வருகிறார்கள். 6ஆம் நாள் திருவிழாவாக முருகன் கோ ரதத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பந்தல் மண்டபம் சேர்கிறார். இரவு அம்மன் வெள்ளித் தேரில் இந்திர விமானத்திலும் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.
உருகு சட்டச் சேவை
ஏழாம் நாள் திருவிழா மற்றும் எட்டாம் நாள் திருவிழாவில் மட்டுமே பிரதான உற்சவர் சண்முகக் கடவுளின் தரிசனம் பக்தர்களுக்கு கிடைக்கின்றது. 23ஆம் தேதியன்று ஏழாம் திருவிழா அன்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் 5.00 மணிக்குள் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.அதனைத் தொடர்ந்து காலை சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்தடைவார்.
சிவனும் முருகனும்
அன்றைய தினம் மாலை நான்கு மணிக்கு மேல் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தியில், சிகப்புப் பட்டாடைகளாலும் சிகப்பு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சிவபெருமானும் தானும் ஒருவரே என்பதைக் குறிப்பாக உணர்த்தும் விதத்தில் முருகப்பெருமான் இவ்வாறு காட்சி தருகிறார்.
எட்டாம் திருவிழா
24ஆம் தேதி எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தியில் சண்முகர் எழுந்தருளி, திருவீதி வலம் வருகிறார். படைக்கும் தொழிலைப் புரிகின்ற பிரம்மாவும் நானே என்பதை உணர்த்தும் விதத்தில் இவ்வாறு வலம் வருகிறார்.
பச்சை சாத்தி
எட்டாம் திருவிழா நாளன்று பகல் 12.00 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவில் சேர்கிறார். "காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலும் நானே" என்பதைக் குறிக்கும் விதமாகக் காட்சி தருகிறார். பச்சை சாத்தியில் வருகின்ற முருகப்பெருமானை லட்சக் கணக்காண பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் செய்து தேங்காய், பழம் படைத்து வழிபடுவார்கள். இதனால் நகரின் ரத வீதிகளில் பன்னீர் வாசனையை நாள் முழுவதும் பக்தர்கள் உணர முடியும்.
மாசித் தேரோட்டம்
ஒன்பதாம் நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நாளான பத்தாம் திருவிழாத் தேரோட்டம் வரும் 26ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் துவங்கும். பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் திரு வீதி வலம் வந்து நிலை சேர்கிறது.
தெப்ப உற்சவம்
பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு 27ஆம் தேதி இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி செந்தூர் நகரின் ரத வீதிக்கு மெற்கே உள்ள தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை சுற்றி வரும் தெப்போற்சவம் நடைபெறும். 12ஆம் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறும்.