மிதுனம், கடகம் ராசியினருக்கு எக்கச்சக்க மாற்றங்கள்.. மொத்தமாக மாறும் வாழ்க்கை
ராசி பலன்: பங்குனி மாதத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மிதுனம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
இரண்டு வார ராசி பலன்
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். கடந்த மார்ச் முதல் வருகிற மே மாதம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ்ந்தது. தமிழ் புத்தாண்டும் பிறந்துவிட்டது. விரைவில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சியும் நிகழ உள்ளது. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

16.04.2025 - 30.04.2025
பங்குனி மாதம் நிறைவடைந்து சித்திரை மாதம் பிறந்துள்ளது. புதிய நம்பிக்கையுடன் பிறந்துள்ள விசுவாவசு தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் நல்ல மாற்றத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 16.04.2025 - 30.04.2025 மிதுனம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகவும், தெளிவாகவும் பார்க்கலாம்.
மிதுனம்
உத்யோகம் மற்றும் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். இதுநாள் வரை உத்யோகம் மற்றும் தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டு. தொழிலில் புதிய முயற்சி அல்லது புதிய தொழில் தொடங்குவோருக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
பயணம்
கல்வியிலும் எதிர்பார்த்த மாற்றங்களுடன் நல்ல முன்னேற்றம் காணப்படும். பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணத்தால் ஆதாயம் அடைவீர்கள். கலை மற்றும் ஊடகத்துறையினருக்கு இந்த காலகட்டம் அற்புதமாக இருக்கும். மன வருத்தங்கள் நீங்கும். வாகனங்களில் இருந்த பிரச்னைகளும் விலகி அதனால் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள்.
வெற்றி
நீண்ட காலமாக திட்டமிட்ட சில காரியங்களில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உறவுகளுடன் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் ரத்தபந்த உறவுகளில் தேவையில்லாத பிரச்னையும், அதன் மூலம் மனச்சங்கடங்களும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே குடும்ப உறவுகளிடம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.
கவனம்
ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. எலும்பு, சளி, ஒவ்வாமை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. உங்கள் வீட்டின் அருகில் உள்ள பெருமாள் கோயில் மற்றும் குலதெய்வ கோயில்களுக்கு சென்று வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும். வெள்ளிக்கிழமை மதியம் அன்னதானம் செய்வது வீண் விரயங்களை தவிர்க்க உதவும்.
கடகம்
உங்களின் வாக்கு ஸ்தானம் பலமடைய போகிறது. சமூகத்தில் உங்களின் பேச்சுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்திலும், வெளி வட்டாரத்திலும் கொடுத்த வாக்கை காப்பாற்றி மதிப்பு, மரியாதை அதிகரித்துக் கொள்வீர்கள். மன அழுத்தம் குறையும். உத்யோகம், தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். பெற்றோர், குழந்தைகளால் அணுகூலம் ஏற்படும்.
சுப காரியம்
சுப காரியங்களில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும். வாழ்க்கை துணையால் நன்மை ஏற்படும். அடுத்தடுத்து நன்மைகளால் வாழ்வில் நல்ல முன்னேற்றமும், மன மகிழ்ச்சியும் ஏற்படும். குழந்தைகளிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். வண்டி, வாகனத்தில் அதிக கவனம் தேவை. மனதில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். முடிவுகள் எடுக்க சிரமப்படுவீர்கள்.
தொழில்
தொழிலில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் அதிக எச்சரிக்கை அவசியம். பிறரின் ஆலோசனைகளை காது கொடுத்து கேட்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்களின் ஆரோக்கியத்தை பொறுத்தவரை ரத்த அழுத்தம், வயிறு ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளை அலட்சியமாக எடுத்துக் கொள்ள கூடாது. அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடுவது காரிய தடைகளை நீக்கி நன்மையை தரும்.












Click it and Unblock the Notifications