சிம்மம், கன்னி ராசிக்கு வாயில கண்டம்.. உணர்ச்சியை கட்டுப்படுத்துங்க இல்லாட்டி ரொம்ப கஷ்டம்
வார ராசி பலன்: சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 21 முதல் 27 ஆம் தேதி வரை எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் 12 ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பெற்றோர் பெரியோரிடம் கோபதாபத்தை தவிர்ப்பது நல்லது. அவர்களிடம் மனம் விட்டுப் பேசிக் கொள்வது நல்லது. பசு மாடுகளுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் உணவு தானமாக அளிப்பது நல்ல பலன்களைத் தரும். அனுமன் சாலிசா கேட்பது அமோக பலன்களைத் தரும். நவக்கிரகத்தில் இருக்கும் குருவிற்கு விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
கோபத்தை தவிர்ப்பது நல்லது
மேலதிகாரிகள், அண்டை அயலாரிடம் கோபதாபத்தை தவிர்ப்பது நல்லது. பயணங்கள் சமயத்தில் புதியதாக அறிமுகமாகும் நபர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில், இருக்கும் இடத்தில் பொறுமையாக இருப்பது நல்லது. உணர்ச்சிவசப்படுவது, கோபப்படுவது, ரோஷப்படுவதைத் தவிர்க்க வேண்டும். பொறுமையாக இருப்பது நல்லது.
வாய்க்கு பூட்டு
அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு சனி அஷ்டமத்தில் இருப்பதால் நிதானமாக இருக்க வேண்டும். மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசுவது, மற்றவர்கள் உங்களைப் பற்றிதான் பேசுகிறார்கள் என்று நினைப்பதை தவிர்க்க வேண்டும். எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம், லாபத்தைக் காண்பீர்கள்.
புதிய தொழில்
புதிய தொழில், புதிய அமைப்பு உண்டாகும். கணவன், மனைவிக்குள் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வேகத்தை தவிர்ப்பது நல்லது. அனுகூலமாக காலகட்டமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு அதிக அளவிலான விரையம் ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை தோறும் மதிய வேளைகளில் சாப்பாடு தானமாக கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் சித்திரை மாதம் முழுவதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிறைய மாற்றங்கள் உண்டாகும். உத்தியோக மாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், தொழில் மாற்றம், இடமாற்றம் என எந்த மாற்றம் வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வது நல்லது.
பேச்சில் கவனம்
கன்னி ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை தவிர்ப்பது நல்லது. உங்களுடைய பேச்சு நல்லா இருக்கும் விஷயங்களைக் கூட கெடுத்துவிடும் காலகட்டம். அஷ்டமத்தில் சூரியன் உச்சம் பெற்றிருப்பதால் சட்ட சிக்கல்கள் உண்டாகும் வாய்ப்புள்ளது. பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது. பதட்டமான காலகட்டமாக இருக்கும்.
முருகர், பெருமாள் வழிபாடு
சளி, தலைவலி பிரச்சனைகள் ஏற்படும். வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெருமாள், முருகர் வழிபாட்டைக் கடைப்பிடிப்பது நல்லது. சுப்பிரமணி புஜங்கத்தை கேட்பது பெரிய பலத்தையும் கொடுக்கும். உத்தியோகம், வேலை, படிப்பில் அவசரப்படாமல் இருப்பது நல்லது. பொறுமையுடன் இருப்பது நல்லவிதமான ஏற்றத்தை தரும்.












Click it and Unblock the Notifications