தமிழ்நாட்டின் அடையாளத்தையே மாற்றும்.. 963-கிமீ தூரத்திற்கு வரப்போகும் தரமான 4 வழிச்சாலை! அப்படி போடு
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 963-கிமீ தூரத்திற்கு நான்கு வழிச் சாலைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் சாலைப் போக்குவரத்து கணிசமாக மேம்படும். அதே சமயம் புதிய சாலைகள் காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் 72ல் இருந்து 90 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மத்திய அரசாலும், மாநில அரசாலும் பல்வேறு சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் மாநில அரசு சார்பாக சென்னை, கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் சாலைகளை அகலப்படுத்துவது, புதிய புட் கோர்ட்டுகளை உருவாக்குவது, சாலை ஓரம் புதிய அலங்கார அமைப்புகளை உருவாக்குவது போன்ற பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த உள்ளனர்.

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) சுமார் 20,000 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
963 கிமீ தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் வேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இதில் 767 கிமீ சாலைகள் அடுத்த 12-15 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே 60-70% நிறைவடைந்துள்ளன.
போடி (தேனி) முதல் உசிலம்பட்டி (மதுரை) வரையிலான பசுமை வழி சாலை விரைவில் நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது. அதோடு திண்டுக்கல்-தேனி-குமுளி நெடுஞ்சாலை NH-183ல் 138 கிமீ நீளமுள்ள நான்கு/ஆறு வழிப்பாதைக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிப்பதற்காக NHAI டெண்டர் விடுத்துள்ளது.
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை 15.7 கோடி ரூபாயை செலவு செய்ய உள்ளது. இதன் மூலம் கிண்டியில் இருந்து தாம்பரம் வரை போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில்தான் ஜிஎஸ்டி சாலையில் சாந்தை ரோடு மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்பில் ரூ. 82 கோடி செலவில் அரசு மேம்பாலம் கட்டியது. இந்த பாலம் 12 மீட்டர் அகலம் கொண்டது, 1.5 கிமீ நீளம் கொண்டது என்றாலும் கூட, இது ஒரு வழி சாலையாக உள்ளது. அதாவது தாம்பரம் டூ கிண்டி செல்லும் ஒரு வழி சாலையாக உள்ளது.
இதனால் கீழே பல்லாவரம் - குரோம்பேட்டை செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் எதிர் திசையில் ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இங்கே இருக்கும் பாதுகாப்பு படைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த அரசு முயன்று வந்தது.
திண்டுக்கல்-பொள்ளாச்சி (131.9 கி.மீ.) நான்கு வழிச்சாலையின் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. ஒட்டன்சத்திரம்-மடத்துக்குளம் பிரிவு சமீபத்தில் நிறைவடைந்து குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள கமலாபுரம் (திண்டுக்கல்) - ஒட்டன்சத்திரம் மற்றும் மடத்துக்குளம் - பொள்ளாச்சி பிரிவுகள் முடியும் தருவாயில் உள்ளது, பாறைப்பட்டி மற்றும் கோமங்கலத்தில் சுங்கச்சாவடிகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.
விக்கிரவாண்டி சாலை:
சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி விக்கிரவாண்டி வழியாக செல்லும் சாலைக்கான கடைசி டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது. 6 ஆண்டு தாமதத்திற்கு பின் இறுதி டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் விரைவில் அங்கே பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தனை காலம் அந்த சாலையில் லேன் மாறி மாறி.. பலர் பயணம் செய்து இருப்பார்கள். இந்தியாவில் இருக்கும் மோசமான சாலைகளில் ஒன்றாக அந்த சாலை திகழ்ந்து வந்தது. தற்போது அந்த கொடூரத்திற்கு முடிவு கட்டப்பட உள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மேற்கொண்ட ஆய்விற்கு பின் இங்கே நடக்கும் பணிகள் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக முடிக்கப்படாமல் இருந்த விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தை கடந்த வாரம் ஆய்வு செய்தது கவனம் பெற்றுள்ளது.
இத்திட்டம் டெல்டா பகுதிக்கான முக்கியமான உள்கட்டமைப்பு வளர்ச்சியை கொடுக்கும். விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய வழித்தடமாக அமையும்.
செப்டம்பர் 2020க்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த திட்டம் இப்போது வரை முடிக்கப்படவில்லை. கஜா புயல், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் நிதி ஒதுக்குவதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முழு திட்டமும் தாமதமானது என்று மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. முக்கியமாக நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் இந்த சாலை அமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications