1 நாளில் நடக்கும் மேஜிக்.. சென்னையில் எல்லா சாலையிலும் களமிறக்கப்படும் ட்ரோன்கள்.. ஷாக் ஆகப்போறீங்க
சென்னை: சென்னையில் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை ஒரு நாள் நோட்டீஸ் கொடுத்து அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதற்கான SOP தயாராகி வருகிறது.
வில்லிவாக்கத்தில் உள்ள எம்.டி.எச். சாலையோரம் நடைபாதைகளில் கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் நாளின் பெரும்பாலான நேரம் ஆக்கிரமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்காலிகக் கடைகள், தள்ளுவண்டிகள், கடைகளின் முன் வைக்கப்படும் பொருட்கள், இருக்கைகள் மற்றும் இதர ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை ஒரு நாள் நோட்டீஸ் கொடுத்து அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை மாநகராட்சி ஆணையர் அக்டோபர் 3 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையில், நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள நிரந்தரக் கட்டுமானங்கள் மற்றும் தற்காலிகக் கடைகளை உடனடியாக அகற்றுவதற்கான நிலையான இயக்க நடைமுறை (SOP) விளக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கோட்டத்திலும் உள்ள உதவிப் பொறியாளர்கள், வியாபாரப் பகுதிகளைத் தவிர்த்து, அனைத்து ஆக்கிரமிப்பு இடங்களையும் கணக்கெடுத்து, அந்த விவரங்களை தங்களது உதவிச் செயற்பொறியாளர்களுக்குத் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அகற்றும் பட்டியல்கள் மண்டல வாரியாகத் தொகுக்கப்பட்டு, மண்டல அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்.
இந்த கணக்கெடுப்புகள் மாநகராட்சி செயலி (GCC App) மூலம் நடத்தப்பட வேண்டும். இதில், நடைபாதைகளில் உள்ள தற்காலிகக் கடைகள், தள்ளுவண்டிகள், நிரந்தரக் கடைகளுக்கு முன் வைக்கப்படும் பொருட்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பிற ஆக்கிரமிப்புகள் ஆகியவை வகைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகல்நேரப் பணிக்குழு, இருப்பிடங்களுடன் கூடிய புகைப்படங்களை மாநகராட்சி செயலியில் பதிவேற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்ட மறுநாளே அகற்றப்பட வேண்டும். இதற்கு ஒரு நாள் முன்னதாக நோட்டீஸ் வழங்கப்படும். தேவைப்படும் இடங்களில், உதவிச் செயற்பொறியாளர்கள் காவல் துறையுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வார்கள்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மற்றும் அதைச் சரிவர செய்யாததற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட பொறியாளர்களையே சாரும். மக்கள் அடர்த்திக்கு ஏற்ப வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். பாதுகாப்பு நெறிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.
சென்னை தீவிர ஆய்வு
ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு, அதற்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பதிவேற்றப்பட வேண்டும். அகற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடத்தில் குப்பையாகக் கொட்டப்பட வேண்டும். தினசரி அறிக்கைகள் சம்பந்தப்பட்ட மண்டல துணை ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்புகள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பு அமலாக்கக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் ஏற்படும் குறைபாடுகள் பரிசீலிக்கப்படும் எனவும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.
களமிறக்கப்படும் டிரோன்கள்
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) சென்னையில் உள்ள 408 கிமீ சாலைகளை ட்ரோன்கள் மற்றும் AI- மூலம் இயக்கப்படும் கேமராக்களைப் பயன்படுத்தி ஆய்வு செய்ய உள்ளது.
சாலையின் உண்மையான அகலங்களை கண்டுபிடிக்கவும், ஆக்கிரமிப்புகளை நீக்கவும் இந்த ஏ ஐ மேப் உருவாக்கப்பட்டு வருகிறது. அதாவது ஏஐ மூலம் ஒரு சாலையின் உண்மையான நீளம், அகலம் கண்டுபிடிக்கப்படும். அதன்பின் அந்த சாலையில் ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும்.
பெங்களூருவைச் சேர்ந்த ரோட்மெட்ரிக்ஸ் நிறுவனம் இந்த பணியை மேற்கொள்ள உள்ளது. முதல் கட்ட பணிகள் மார்ச் மாதத்தில் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை போன்ற முக்கிய சாலைகள் ஆய்வு செய்யப்படும்.












Click it and Unblock the Notifications