ரூ.3000 இருந்தால் போதும்.. ஃபாஸ்டேக் பாஸ் வாங்கலாம்.. யார் எல்லாம் வாங்க முடியும்? வெளியான தகவல்
சென்னை: நெடுஞ்சாலை துறை சார்பாக வெளியிடப்பட உள்ள வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தினசரி நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் திட்டத்தை அரசாங்கம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் 2025 ஆகஸ்ட் 15 முதல் தொடங்க உள்ளது. இந்த வருடாந்திர பாஸின் விலை ரூ.3,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில், பயனர்கள் 200 முறை சுங்கச்சாவடியை கடக்கலாம் அல்லது ஒரு வருடம் வரை பாஸை பயன்படுத்தலாம். இதில் எது முதலில் வருகிறதோ, அதுவரை இந்த பாஸ் செல்லுபடியாகும்.

வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ்: யாருக்கு இது பொருந்தும்?
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (MoRTH) கூற்றுப்படி, இந்த திட்டம் வழக்கமாக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களின் ஆண்டு சுங்க கட்டணச் செலவை 70% வரை குறைக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.7,000 வரை சேமிக்க முடியும். இருப்பினும், டாக்சிகள், பேருந்துகள் அல்லது லாரிகள் உட்பட வணிகரீதியான போக்குவரத்து வாகனங்களுக்கு இது பொருந்தாது. வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸிற்கு யார் தகுதியானவர்கள், விண்ணப்பிக்கும் முறை என்ன என்பது குறித்த விவரங்கள் பின்வருமாறு:
வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ், கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற தனிப்பட்ட, வணிக நோக்கமற்ற வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். உங்கள் ஃபாஸ்டேக் செயலில் இருக்க வேண்டும், மேலும் சரியான முறையில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். அது செல்லுபடியாகும் வாகனப் பதிவுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், அது கருப்புப் பட்டியலில் இருக்கக் கூடாது அல்லது எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்கியிருக்கக் கூடாது.
வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ்: எப்படி, எங்கே விண்ணப்பிப்பது?
இந்த வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸைப் பெற பயனர்கள் ராஜ்மார்க் யாத்ரா செயலி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) அதிகாரப்பூர்வ இணையதளம் (www.nhai.gov.in) அல்லது www.morth.nic.in ஆகியவற்றை அணுகலாம். வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் பெறுவதற்கான படிப்படியான வழிமுறைகள் இங்கே:
முதலில், ராஜ்மார்க் யாத்ரா மொபைல் செயலியைப் பதிவிறக்கவும் அல்லது NHAI அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். அதில், வருடாந்திர ஃபாஸ்டேக் திட்டம் என்பதை கிளிக் செய்து, உங்கள் வாகனப் பதிவு எண் மற்றும் ஃபாஸ்டேக் ஐடியை உள்ளிடவும். அடுத்து, ரூ.3,000ஐ ஆன்லைனில் ஒரு முறை செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தி சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்ததும், வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் செயல்படுத்தப்பட்டதற்கான உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி (SMS) மூலம் உங்களுக்கு அனுப்பப்படும்.
குறிப்பாக, ஒரு வருடம் அல்லது 200 பயணங்களுக்குப் பிறகு, இது தானாகவே வழக்கமான ஃபாஸ்டேக்காக மாற்றப்படும். அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ரூ.3,000 செலுத்தி வருடாந்திர பாஸை நீங்கள் புதுப்பிக்கலாம்.
இந்த வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் திட்டம், நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் அவர்கள் சுங்க கட்டணத்தில் கணிசமான தொகையைச் சேமிக்க முடியும்.
ஆகஸ்ட் 15 முதல், வணிக நோக்கமற்ற தனியார் வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற பயணத்தை அனுபவிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பாஸ்ட்டேக் பாஸ் பெறுவதன் மூலம்.. வருடம் முழுக்க 200 பயணங்களை இவர்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications