எல்லாம் டெக்னாலஜி.. நாடு முழுக்க கடுமையாகும் சாலை விதிகள்.. வாகன ஓட்டிகளுக்கு வைக்கப்படும் செக்!
சென்னை: சாலை விதிமீறல்களை மின்னணு முறையில் தீவிரமாகக் கண்காணிக்க, மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை (Standard Operating Procedure - SOP) வெளியிட்டுள்ளது. இது சாலைப் பாதுகாப்பு மற்றும் சாலை விதிகளை அமல்படுத்துவதில் புதிய முறையாக பார்க்கப்படுகிறது.
இந்த SOP, 1989-ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிகளில் உள்ள 167A மற்றும் 1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தில் உள்ள 136A ஆகிய பிரிவுகளின் கீழ் தயாரிக்கப்பட்டது. இதன் முதன்மை நோக்கம், விபத்துகள் மற்றும் விதிமீறல்கள் அதிகம் நடைபெறும் அபாயகரமான, அதிகப் போக்குவரத்து கொண்ட சாலைகளில் கண்காணிப்பை பலப்படுத்துவதே ஆகும்.

ஒடிசா மாநிலம் ஏற்கனவே பல தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் "அறிவுசார் அமலாக்க மேலாண்மை அமைப்பை" (Intelligent Enforcement Management System) வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகிறது. இம்முறை, தொழில்நுட்ப உதவியுடன் சாலைப் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. இதை நாடு முழுக்க அமல்படுத்தப்படுத்த உள்ளன.
சாலை பாதுகாப்பு விதிகள் - மாறும் ரூல்ஸ்
ஒரு மூத்த போக்குவரத்து அதிகாரி இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசுகையில், நாடு முழுக்க போக்குவரத்து விதிகளை கண்காணிக்க கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படும். ஏஐ கேமரா தொடங்கி டிஜிட்டல் ரீடர் வரை களமிறக்கப்படும். தற்போதுள்ள அனைத்து கண்காணிப்பு இடங்களும் மறுஆய்வு செய்யப்படும். மேலும், சிறந்த கண்காணிப்புக்காக புதிய முக்கியமான சந்திப்புகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படும். இது போக்குவரத்து விதிகள் மீறப்படுவதை திறம்படக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த SOPல் பயன்படுத்தப்பட வேண்டிய மின்னணுச் சாதனங்கள் , என்ன மாதிரியான கேமராக்கள், ஏஐ கேமராக்கள், வேகக் கேமராக்கள், சிசிடிவி, ஸ்பீடு கன், உடலில் அணியும் கேமராக்கள், டேஷ்போர்டு கேமராக்கள், தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகார அமைப்புகள் (ANPR), மற்றும் எடை-இயக்கக் கருவிகள் ஆகியவை தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
ரகசியமாக நிறுவப்படும் சாதனங்கள்
இச்சாதனங்கள், போக்குவரத்துக்கோ, பார்வைக்கோ இடையூறின்றி பாதுகாப்பாக நிறுவப்பட வேண்டும். மேலும், கருவிகளைச் சரிபார்த்தல் (calibration), முறையாகப் பராமரித்தல் மற்றும் காலமுறை ஆய்வுகளுக்கான விதிகளையும் SOP கொண்டுள்ளது. போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாடுகள் குறித்தும் SOP வழிகாட்டுகிறது. வஹான் (Vahan), சாரதி (Sarathi) மற்றும் இ-டார் (eDAR) போன்ற தரவுத்தளங்களை (databases) ஒருங்கிணைத்து, இ-சலான் (e-challan) முறையை மேம்படுத்துவது இதன் ஒரு முக்கியக் குறிக்கோள்.
விதிமீறல்களைப் பதிவு செய்வது, குற்றவாளிகளைத் தொடர்புகொள்வது மற்றும் சலான்களை வழங்குவது எப்படி என்பதையும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தெளிவாக விளக்குகின்றன. நீண்ட காலமாக குற்றங்கள் செய்தவர்கள், விதிக்கு மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் இதில் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இது அமலாக்க நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையும், சீரான செயல்பாடும் உறுதி செய்யப்படும்.
நாடு முழுக்க போக்குவரத்துத் துறை இந்த SOP-ஐ அனைத்து மண்டல போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு அனுப்பியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், சாலைகளில் அமலாக்கம் வலுப்பெற்று, விபத்துகளும் விதிமீறல்களும் கணிசமாகக் குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications