இனி ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் உங்க ட்ரிப்பை கேன்சல் பண்ண முடியாது.. வந்தது அபராதம்.. அதிரடி
சென்னை: சென்னையில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் முதலில் ரைட் செய்ய ஒப்புக்கொண்டு அதன்பின் கேன்சல் செய்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. விபத்துகளை தவிர்க்கும் விதமாகவும், மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் விதமாகவும் பல்வேறு விதிகள் கொண்டு வரப்பட்டு வருகின்றன.

அந்த வகையில்தான் சென்னையில் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு முக்கியமான ஒரு விதி கொண்டு வரப்பட்டு உள்ளது. நாம் டாக்சி, ஆட்டோ புக் செய்தால், முன்பெல்லாம் நாம் போகும் இடத்தை கேட்டுக்கொண்டு பின்னர் அதை டிரைவர்கள் கேன்சல் செய்வார்கள்.
பல நேரங்களில் டிரைவர்கள் நம்மை நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டு அதன்பின் கேன்சல் செய்யும் வழக்கம் உள்ளது. இதனால் பயணிகள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமயங்களில் டிரைவர்கள் கேன்சல் செய்யும் டிரிப் காரணமாக பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் நிலை கூட ஏற்படும். இந்த நிலையில்தான் சென்னையில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் முதலில் ரைட் செய்ய ஒப்புக்கொண்டு அதன்பின் கேன்சல் செய்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி போக்குவரத்து சட்ட பிரிவு 178 3 பி சட்டத்தின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்படும். மொத்தம் 5 ஆயிரம் ரூபாய் வரை கூட அபராதம் விதிக்கப்படும். ஓலா, உபர் போன்ற நிறுவனங்களிடம் மக்கள் கொடுக்கும் புகார்களின் அடிப்படையில், அந்த புகார்களை கொண்டு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை மக்கள் இடையே இந்த புதிய விதி பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் இருப்பது மிகப்பெரிய குற்றம். இது எந்த வாகனமாக இருந்தாலும் அந்த அபராதம் பொருந்தும்.
தீயணைப்பு வண்டி, அவசர வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றாலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தேவையின்றி ஹார்ன் அடித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு வாகனங்களும் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே சரக்கை ஏற்றிச்செல்ல வேண்டும். அந்த வகையில் சென்னையில் கார், பைக் ஓட்டும் நபர்களுக்கு முக்கியமான அறிவுரை ஒன்று மாநகர போக்குவரத்து போலீசார் சார்பாக வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் வழக்கு பாயும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் பகலில் 40 கி.மீ. வேகத்திற்கு மேல் ஓட்ட கூடாது. அதேபோல் இரவில் 50 கி.மீ. வேகத்தை கடந்து வாகனம் ஓட்ட கூடாது. மீறி ஓட்டினால் அதிவேக பயணம் என வழக்கு பதியப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications