LIK Box Office Day 7: எல்ஐகே படத்தின் 7வது நாள் வசூல்.. சென்டிமென்டாக பேசியே விக்னேஷ் சிவன் கலக்கிட்டாரே!
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் கிருத்தி ஷெட்டி நடித்துள்ள "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்த படம், தற்போது வசூல் ரீதியாக மிதமான முன்னேற்றத்தைக் காட்டி வருகிறது.

எல்ஐகே பட கதை
இந்த திரைப்படம் 2040ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள விஞ்ஞானக் காதல் கதையாகும். மனிதர்களின் உறவுகளையே ஒரு செயலியின் மூலம் பாதுகாப்பு செய்யும் எதிர்கால உலகை மையமாகக் கொண்டு, இயல்பான காதலை நம்பும் இளைஞனின் பார்வையில் கதை நகர்கிறது. காலப்பயணம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
எல்ஐகே வசூல்
வசூல் நிலவரத்தைப் பார்க்கும்போது, இந்த படம் இதுவரை இந்தியாவில் சுமார் 34 கோடியே 4 லட்சம் ரூபாய் நிகர வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மொத்த இந்திய வசூல் சுமார் 39 கோடியே 32 லட்சம் ரூபாயாக உள்ளது. வெளிநாடுகளில் படம் 10 கோடியே 60 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதால், உலகளவில் மொத்த வசூல் 49 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது.

ஏழாவது நாள் வசூல்
நாள் வாரியாக பார்க்கும்போது, வெளியீட்டின் ஆறாவது நாளில் படம் சுமார் 1 கோடியே 95 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஏழாவது நாளில் வசூல் உயர்ந்து 2 கோடியே 44 லட்சம் ரூபாய் வரை சென்றுள்ளது. இதனால் வார நாட்களிலும் படம் ஒரு நிலையான வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது தெரிய வருகிறது.
படம் ஆரம்பத்தில் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தாலும், பின்னர் கலவையான விமர்சனங்கள் வெளிவந்ததால் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் உயர்வு இல்லை. குறிப்பாக கதை அமைப்பு மற்றும் அதிகமான தொழில்நுட்ப சிந்தனை சிலருக்கு எளிதாக புரியவில்லை என்ற கருத்துக்கள் வெளியானது.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனது வழக்கமான நடிப்பு மற்றும் நகைச்சுவை கலந்த அணுகுமுறையால் ரசிகர்களை ஈர்த்துள்ளார். அவருடைய வசனங்கள் மற்றும் நடிப்பு பாணி பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றாலும், சில இடங்களில் மற்ற நடிகர்களின் தாக்கம் இருப்பதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யோகி பாபு, சீமான், கவுரி ஜி கிஷன் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விக்னேஷ் சிவன் பேச்சு
படம் வெளியானதைத் தொடர்ந்து, படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் இயக்குநர் விக்னேஷ் சிவன் எமோஷனலாக பேசுகையில், "படம் உருவாக்க எங்களிடம் இருந்த அனைத்தையும் முதலீடு செய்தோம். நல்ல அம்சங்களையும் பேசுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். மேலும் விமர்சனங்கள் குறித்து தனது அனுபவத்தையும் பகிர்ந்தார். அதற்குப் பிறகு இந்த படத்தை பார்ப்பதற்காக ஆர்வம் கூடியிருப்பதாக பலரும் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
மொத்தத்தில், "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை எட்டாதிருந்தாலும், புதுமையான கதைக்களத்துடன் மிதமான வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications