Parasakthi: பராசக்தி சிவகார்த்திகேயனுக்கு ஒரு வைரக்கல், இந்த படம் பிரளயத்தை ஏற்படுத்தும்! பயில்வான் விமர்சனம்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் இன்று ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. வெளியீட்டுக்கு முன்பே இந்த படம் பேசுபொருளானது கதைக்காக மட்டும் இல்லை, சென்சார் போராட்டத்தால்தான். படத்தில் இடம் பெற்றிருந்த இந்தி திணிப்புக்கு எதிரான வசனங்கள் 52 இடங்களில் மியூட் செய்யப்பட்ட பிறகே படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்தது. வசனம் பேசாமல் மியூட் ஆகி இருந்தாலும், படத்தின் கருத்து மட்டும் சத்தமா பேசிக்கிட்டு இருக்கு என்பதே ரசிகர்களின் கருத்து.
இந்த நிலையில், பராசக்தி படத்தை பார்த்து பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தில், "பழைய பராசக்தி படத்தை கலைஞரின் வசனமும், சிவாஜி கணேசனின் நடிப்பும் அன்றைய காலத்தில் எப்படி ஒரு பிரளயத்தை ஏற்படுத்தியதோ, அதே மாதிரி இந்த பராசக்தியும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார். பெயரே பராசக்தி என்பதால், 'பழைய படத்தோடு ஒப்பிடாமல் எப்படி?' என்ற கேள்விக்கு பயில்வான் ரங்கநாதன் நேரடியாக பதில் சொல்லி விட்டார்.

1960களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், சிவகார்த்திகேயன் ஒரு சாதாரண அரசு ஊழியராக வருகிறார். வேலை முடிந்ததும் வீட்டுக்கு போற வகை கேரக்டர். ஆனால் அவரது தம்பியாக வரும் அதர்வா, கல்லூரி மாணவனாக இருந்து கொண்டு சமூக விழிப்புணர்வு போராட்டங்களில் தீவிரமாக இறங்குகிறார்.
குறிப்பாக இந்தி எதிர்ப்பு போராட்டம். "காலேஜ் போய் படிக்க வேண்டிய வயசுல போராட்டமா?" என்று அண்ணன் சிவகார்த்திகேயன் அறிவுரை சொன்னாலும், அதர்வா அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இந்த நேரத்தில் தான் படத்துக்குள் மாஸ் வில்லனாக ஜெயம் ரவி என்கிற ரவி மோகன் நுழைகிறார்.
காவல்துறை அதிகாரியாக, மேலிட உத்தரவின் பேரில் மாணவர் போராட்டங்களை எந்த விலையையும் கொடுத்து அடக்க வேண்டும் என்ற கொடூர மனநிலையுடன் செயல்படுகிறார். "சுட்டு தள்ளுங்கள்" என்ற உத்தரவு வரும்போது, அங்கிருந்து தான் படத்தின் அரசியல் தீவிரம் உச்சத்துக்கு போகிறது.
பயில்வான் ரங்கநாதன் சொல்வது போல, இதுவரை சாக்லேட் பாயாக பார்த்த ரவி மோகன், இந்த படத்தில் முழு வில்லத்தனமாக மிரட்டி இருக்கிறார். இந்த படத்தை பார்த்த பிறகு, "இனிமே ஹீரோவா வேண்டாம்... வில்லனா வந்தாலே போதும்" என்ற அளவுக்கு நடிப்பில் மிரட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம்.
அதே நேரத்தில், அதர்வாவின் நடிப்பும் படத்தில் பெரிய பலம். சில இடங்களில் "இவன் தான் ஹீரோவா, இல்ல சிவகார்த்திகேயன் தான் ஹீரோவா?" என்று குழப்பம் வருகிற அளவுக்கு அதர்வா தன் கதாபாத்திரத்தை உயிரோடே வாழ்ந்து காட்டியிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு அதர்வாவுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்பதில் சந்தேகமே இல்லை.
கதாநாயகியாக ஸ்ரீலீலா, வழக்கமான சினிமா ரூட்டில் சிவகார்த்திகேயனை விழுந்து விழுந்து காதலிக்கிறார். தமிழில் இது அவரின் முதல் படம் என்பதும், முதல் படத்திலேயே சொந்த குரலில் பேசியிருப்பதும் கவனிக்கத்தக்க விஷயம்.
ஆனால் இவர்கள் எல்லாரையும் தூக்கி சாப்பிடுற அளவுக்கு, சிவகார்த்திகேயன் நடிப்பு வேற லெவலில் போயிருக்கிறது. ஆரம்பத்தில் அமைதியான அரசு ஊழியர், பின்னர் ஒரு எழுச்சிமிகு போராட்ட வீரர் - இரண்டு விதமான சிவகார்த்திகேயனை ஒரே படத்தில் பார்க்க முடிகிறது. ரவி மோகன் கதைக்குள் வில்லனாக நுழைந்த பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பு அடுத்த கட்டத்துக்கு பாய்கிறது என்பதே பயில்வான் ரங்கநாதனின் முக்கியமான பாராட்டு.
60 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையை அந்த காலகட்டத்திற்கு ஏற்ற செட்கள், சூழல், வன்முறை சம்பவங்கள் அனைத்தையும் இயல்பாக காட்டியிருப்பதற்காக இயக்குநர் சுதா கொங்கராவையும் பயில்வான் பாராட்டியுள்ளார். இன்றைய தலைமுறைக்கு இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வரலாறு தெரியாத நிலையில், அந்த கதையை சினிமாவாக சொல்லியதற்காக நன்றியும் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில், வசனம் மியூட் செய்யப்பட்டாலும், கருத்து மியூட் ஆகாத ஒரு அரசியல் சினிமாவாக பராசக்தி உருவாகி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் வெற்றி மகுடத்தில் இன்னொரு மாணிக்க கல்லாக இந்த படம் சேரும் என்பதில் சந்தேகம் இல்லை என பயில்வான் ரங்கநாதன் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications