ஆர்பி சவுத்ரி மரணம் பொறாமையில் நடந்தது! கல்யாணத்திற்காக ராஜஸ்தான் போன இடத்தில்.. தம்பி ராமையா உருக்கம்
சென்னை: தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் ஆர்பி சவுத்ரியின் மறைவு குறித்து தொடர்ந்து பலரும் தங்களது நினைவுகளையும் வேதனைகளையும் பகிர்ந்து வருகின்றனர். ராஜஸ்தானில் ஏற்பட்ட கார் விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பல வெற்றி படங்களை தயாரித்து, நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வு கொடுத்த தயாரிப்பாளரின் இப்படியான திடீர் மரணம் இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.

நடிகர் தம்பி ராமையா பேட்டி
இந்த நிலையில், அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையா கண்கலங்கியபடி பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தம்பி ராமையா பேசும்போது, "திக்கு தெரியாமல் கோடம்பாக்கத்தில் சுற்றித் திரிந்த பலருக்கு கலங்கரை விளக்கமாக இருந்தவர் தான் ஆர்.பி. சௌத்ரி.
இயக்குநர்களுக்கு கலங்கரை விளக்கம்
'என்னிடம் நல்ல கதை இருக்கிறது... ஆனால் யார் உதவி செய்வார்கள்?' என்று ஏக்கத்தோடு வந்த பலருக்கு வாய்ப்பு கொடுத்தவர். நல்ல கதை இருந்தால் அதை கேட்டு, அந்த இயக்குநர்களை முன்னேற்ற என்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்வார். அவரால் தான் இன்று பல இயக்குநர்கள் பெரிய இடத்தில் இருக்கிறார்கள்" என்று உருக்கமாக கூறினார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, "அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு இப்படி ஒரு கொடூரமான மரணம் வரக்கூடாது. 70 வயதுக்கு மேல் வாழ்ந்தவர் என்பதால் இயல்பான முறையில் மறைந்திருந்தாலும் மனதை சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இன்று அவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார் என்று கேட்கும்போது மனசு உடைந்து போகிறது. அவர் யாரிடமும் அதிர்ந்து கூட பேச மாட்டார். எப்போதும் அமைதியாக இருப்பார்" என்று கண்ணீர் மல்க கூறினார்.
விபத்துக்கான காரணம்
"ராஜஸ்தானில் தன்னுடைய சொந்த அண்ணன் வீட்டுக் கல்யாணத்திற்கு போன அவரை அந்த ஊர் மண்ணு ரொம்ப நேசித்து விட்டது என்று நினைக்கிறேன். அந்த பொறாமையில்தான், 'நீ தமிழ்நாட்டுக்கு திரும்பி போனால் இங்கே வரமாட்டாய்' என்று அந்த மண்ணே அவரை சாலையில் அணைத்துக் கொண்டது போல இருக்கிறது" என்று தம்பி ராமையா பேசினார். இந்த வார்த்தைகளை கூறும்போதே அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் போனது.
கவலையில் ஜீவா
மேலும் அவர் பேசும்போது, ஜீவா குறித்து கூறிய விஷயமும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. "ஜீவாவை நான் எப்போதும் சிரித்த முகமாகத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று அவன் அழுது கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடியவில்லை" என்று அவர் கண்கலங்க கூறினார்.
அதேபோல், "தன்னுடைய மகன்கள் குறித்து சவுத்ரி சாருக்கு நிறைய கவலை இருந்தது. குறிப்பாக ஜீவாவுக்கு சமீப காலமாக பெரிய வெற்றி படங்கள் அமையவில்லை என்பதில் அவர் வருத்தப்பட்டார். ஆனால் கடைசியாக வெளியான 'தலைவர் தம்பி தலைமையில்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தின் ஆரம்பத்தில் இருந்தே நானும் கூட இருந்தேன். தன்னுடைய மகன் மீண்டும் வெற்றி பெற்றதை அவர் கண்குளிர பார்த்துவிட்டார். அது அவருக்கு கிடைத்த பெரிய ஆறுதல்"
என்று உணர்ச்சியோடு தெரிவித்தார்.
இறுதியாக, "ஜீவா, ரமேஷ், சுரேஷ் எல்லோரையும் அவர் நல்லபடியாக வாழ வைத்துவிட்டார். அவர் இல்லாவிட்டாலும் அவர் செய்த நன்மைகள் எப்போதும் இருக்கும்" என்று கூறிவிட்டு தம்பி ராமையா அங்கிருந்து கண்கலங்கியே வெளியேறினார்.
மறக்க முடியாத மனிதர்
ஆர்.பி. சௌத்ரி என்ற பெயர் தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளர் என்ற அளவுக்கு மட்டுமல்லாமல், பலரின் வாழ்க்கையை மாற்றிய மனிதர் என்ற மரியாதையோடும் பார்க்கப்படுகிறது. அவரது Super Good Films நிறுவனம் மூலம் ஏராளமான வெற்றி படங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக குடும்பக் கதைகள், உணர்ச்சி மிக்க திரைப்படங்கள் மற்றும் கமர்ஷியல் ஹிட் படங்கள் மூலம் அவர் தனித்துவமான இடத்தை பிடித்தார்.
ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், திரையுலகில் பலருக்கு நம்பிக்கை கொடுத்த மனிதராக வாழ்ந்த ஆர்.பி. சௌத்ரியின் மறைவு, தமிழ் சினிமாவுக்கு நிரப்ப முடியாத இழப்பாகவே பார்க்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications