விஜய்க்காக உருக்கமாக லெட்டர் எழுதிய சிபி சத்யராஜ்.. இவ்வளவு ஓபனா பேசிட்டாரே! இதனால்தான் சப்போர்ட் பண்றாராம்!
சென்னை: தமிழக அரசியலில் புதிய பாதையை தேர்ந்தெடுத்து களம் இறங்கியுள்ள நடிகர் விஜய் குறித்து தினமும் பல்வேறு கருத்துகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. ஒருபுறம் அவருக்கு மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் சில பிரபலங்கள் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சத்யராஜ் விஜயின் அரசியல் பயணத்தை விமர்சித்தது பெரிய பேசுபொருளாக மாறியது. ஆனால் அதே வீட்டில், அவரது மகனான சிபி சத்யராஜ் ஆரம்பத்தில் இருந்தே விஜய்க்கு சப்போர்ட் செய்து கொண்டே இருக்கிறார். அப்பா-மகன் கருத்து வேறுபாடு இருந்தாலும், அதை ஆரோக்கியமாக எடுத்துச் செல்கிறார்கள் என்பதற்கே இது ஒரு உதாரணம்.

சிபி சத்யராஜ் உருக்கமான பதிவு
சிபிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "1993 அக்டோபர் 3ஆம் தேதி பொள்ளாச்சி சக்தி ஹோட்டலில் அப்பாவின் பிறந்தநாள் விழாவில், எஸ்.ஏ. சந்திரசேகர் சார், கேப்டன் விஜயகாந்த் அங்கிளுடன் நீங்கள் வந்திருந்தபோது தான் நான் முதன்முதலாக உங்களை சந்தித்தேன். அப்போது அந்த எளிமையான இளைஞன், எதிர்காலத்தில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்று ஒரு பெரிய சக்தியாக மாறுவார் என்று எனக்கே தெரியாது," என்று அந்த நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
நான் உங்களுடன் தான்
விஜய் இனி நடிக்கப்போவதில்லை என்ற செய்தியை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், "ஒரு ரசிகராகவும், நடிகராகவும், சகோதரராகவும், நண்பராகவும், நீங்கள் எடுத்துள்ள புதிய பாதையை நான் மதிக்கிறேன். எப்போதும் உங்களுடன் நின்றுகொண்டே இருப்பேன்," என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையிலே விஜய்யின் தாக்கம்
சிபிராஜ் தனது பதிவில் எமோஷனலான சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார், "என் வாழ்க்கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் நீங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். என் பல நெருங்கிய நட்புகளும் உங்களைப் பற்றிய காதலால் உருவானவை," என்று கூறியுள்ளார்.
மேலும், "என் காதலியாக இருந்து மனைவியாக மாறிய ரேவதியுடன் நான் சென்ற முதல் டேட் கூட 'பிரியமானவளே' படம் பார்த்ததுதான்," என்று தனது தனிப்பட்ட நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்.

உங்க வெற்றி என் வெற்றிதான்
விஜயின் வெற்றிகளை தன்னுடைய வெற்றிகளைப் போலவே கொண்டாடியதாக கூறிய சிபிராஜ், திருமணத்திற்குப் பிறகு விஜயின் வீட்டில் நடந்த டின்னர், தனது 'Lee' பட விழாவில் விஜய் கலந்துகொண்டது, தனது படங்களுக்கு விஜய் நேரடியாக போன் செய்து வாழ்த்திய தருணங்கள், எப்போது அழைத்தாலும் உடனே பதில் அளிக்கும் பழக்கம் இவை எல்லாம் தான் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள் என கூறியுள்ளார்.
பெரிய இன்ஸ்பிரேஷன்
"நான் சினிமா பின்னணியில் இருந்தாலும், இந்த துறைக்கு வர பெரிய ஊக்கமாக இருந்தது நீங்கள் தான்," என்று சிபிராஜ் தெரிவித்துள்ளார். மேலும், விஜயின் படங்கள் வெறும் பொழுதுபோக்காக இல்லாமல், காதல், நட்பு, கடின உழைப்பு போன்ற வாழ்க்கை மதிப்புகளை கற்றுத்தந்ததாகவும் கூறியுள்ளார்.
குட்டி ஸ்டோரிகள்
விஜயின் 'குட்டி ஸ்டோரி' பேச்சுகளை குறிப்பிட்ட சிபிராஜ், "பல self-help புத்தகங்களை விட உங்கள் குட்டி ஸ்டோரிகள் வாழ்க்கையைப் பற்றி ஆழமாக புரியவைத்தது," என்று தெரிவித்துள்ளார். "ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்" என்ற விஜயின் பிரபல டயலாக்கை குறிப்பிட்டு, "இது ஒரு சினிமா டயலாக் மட்டும் இல்லை... நீங்கள் வாழும் வாழ்க்கை தத்துவம்," என்று புகழ்ந்துள்ளார்.

30 வருட நினைவுகள்
முடிவில், "கடந்த 30 ஆண்டுகளாக எங்களை மகிழ்வித்து, ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. நீங்கள் கொடுத்த சினிமா நினைவுகளை எப்போதும் நாங்கள் பாதுகாப்போம்... வென்று வா தலைவா, நாங்க இருக்கோம்!" என்று உருக்கமாக தனது பதிவை முடித்துள்ளார்.
மொத்தத்தில், அப்பா சத்யராஜ் விமர்சனங்களை முன்வைத்தாலும், மகன் சிபிராஜ் விஜய்க்கு முழு ஆதரவு அளித்து வெளியிட்ட இந்த உணர்ச்சி மிகுந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications